ரயில் டிக்கெட் முன் பதிவு: ஐஆர்சிடிசி தளத்தின் திறனை மேம்படுத்த ரயில்வே முடிவு!

ஐஆர்சிடிசி இணையதளத்தின் ரயில் டிக்கெட் முன்பதிவுத் திறனை கணிசமாக அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த இணையதளத்தின் திறனை மேம்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ஐஆர்சிடிசி மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு 3.50 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது. இன்னும் 4 மாதங்களில் இதை நாள் ஒன்றுக்கு 5 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. மேலும், நாள் ஒன்றுக்கு 8 லட்சம் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யும் வகையில் ஐஆர்சிடிசி தளத்தினை மேம்படுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், மிக விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று கருதப்படுகிறது. தவிர, தட்கல் முன்பதிவின்போது ஐஆர்சிடிசி இணையதளம் வேகமாக இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தட்கல் முன்பதிவு செய்யப்படும் வரும் 10ந் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. தற்போது காலை 8 மணிக்கு துவங்கும் தட்கல் டிக்கெட் முன்பதிவு வரும் 10ந் தேதி முதல் 10 மணிக்கு மாற்றப்பட உள்ளது.
இதனால், தரகர்களின் தொல்லை இல்லாமல் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நிலை உருவாகும் என ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா தெரிவித்துள்ளார். மேலும், ஐஆர்சிடிசி தளத்தின் திறனை மேம்படுத்த இருப்பதால், இனி விரைவாக தட்கல் டிக்கெட்டையும் முன்பதிவு செய்ய இயலும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications