ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் வந்த மிகப் பெரிய மாற்றம்.. இனி சிரமம் இருக்காது.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
இந்திய ரயில்வே அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக ரயில்வே அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியலை வெளியிடும் கால நேரத்திலும் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது ரயில்வே துறை.
அதாவது ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் சில குறிப்பிட்ட ரயில்களுக்கான பயண டிக்கெட் நிலை விதிகளை இந்திய ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. குறிப்பாக இந்த புதிய விதிகள் மூலம் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகள், தங்கள் டிக்கெட் உறுதியாகவில்லை என்ற நிலையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய கூடுதல் அவகாசம் கொடுப்பதே நோக்கம் ஆகும்.

புதிய மாற்றங்கள்
பொதுவாக ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாகவே முன்பதிவு பட்டியல் மற்றும் டிக்கெட் நிலை வெளியிடப்படும். ஆனால் புதிய விதிகளின்படி, காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு பட்டியல் முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கு தயார் செய்யப்படும்.
அதேபோல் மதியம் 2:01 மணி முதல் நள்ளிரவு 11:59 மணி வரை மற்றும் நள்ளிரவு முதல் அதிகாலை 5:00 மணி வரை புறப்படும் ரயில்கள்: இவற்றுக்கான முதல் முன்பதிவு பட்டியல், ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்னதாகவே தயார் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிஎன்ஆர் (PNR) எண்ணைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் டிக்கெட் மற்றும் முன்பதிவு நிலையைத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக ஐஆர்சிடிசி (IRCTC)-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.irctc.co.in) அல்லது அங்கீகரிக்கப்பட்ட மொபைல் செயலிகள் மூலம் தங்களது 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை உள்ளிட்டுCheck PNR Status என்பதை கிளிக் செய்வதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
அதேபோல் எந்த ஒரு மொபைல் போனில் இருந்து 139 என்ற எண்ணை அழைத்தும் டிக்கெட் நிலையைச் சரி பார்த்துக் கொள்ளலாம். பின்பு 5676747 அல்லது 139 என்ற எண்ணிற்கு உங்களது பி.என்.ஆர். நம்பரை எஸ்எம்எஸ் அனுப்பியும் முன்பதிவு டிக்கெட் நிலையைத் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதிகள் மூலம் கடைசி நேரத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் டிக்கெட்டுகளை ரத்து செய்வதை எளிமையாகத் தடுக்க முடியும்.
ஆன்லைன் தட்கல் முன்பதிவு
மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த மூன்று கோடி ஐஆர்சிடிசி கணக்குகளை முடக்கி இருப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் தட்கல் டிக்கெட் கிடைப்பது பயணிகளுக்கு எளிமையானதாக மாறி இருக்கிறது என மத்திய ரயில்வே அமைச்சர் மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருக்கிறார்.

அதேபோல் கடந்த டிசம்பர் 4-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஆன்லைன் தட்கல் முன்பதிவில் ஆதார் ஓடிபி முறை 322 ரயில்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும், இந்த ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் கிடைப்பது 65 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதவிர டிக்கெட் முன்பதிவு மையங்களில் உள்ள தட்கல் முன்பதிவுக்கு ஆதார் ஓடிபி முறை 216 ரயில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
96 முக்கிய ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் கிடைப்பது 95 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட பின்பு தான் பல்வேறு பயனர்களின் கணக்குகளை மறு ஆய்வு செய்ததாகவும் இதில் சந்தேகத்திற்கு இடமான போலியான கணக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








