ஒரு மணி நேரத்திற்கு ரூ.250: ரோபோக்களுக்கு பயிற்சி தரும் இந்தியர்கள்.. யாருடைய வேலை பறிபோகும்?
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வரும் நிலையில், அது தற்போது மென்பொருள் உலகைத் தாண்டி மனிதர்களைப் போன்ற தோற்றத்திலும் செயல்திறனிலும் இயங்கும் ஹியூமனாய்ட் (Humanoid) ரோபோக்கள் உருவாக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது.
இந்த ரோபோக்களுக்கு மனிதர்கள் அன்றாட பணிகளை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதற்காக, இந்தியாவில் சில தொழிலாளர்கள் தலையில் சிறப்பு கேமராக்களை அணிந்து கொண்டு தங்கள் தினசரி வேலைகளைச் செய்து வருகின்றனர். மனிதர்களின் செயல்பாடுகள் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டு, அவை AI அமைப்புகளுக்குப் பயிற்சித் தரவாகப் பயன்படுத்தப்படுவது தற்போது தொழில்நுட்ப உலகில் பரவலாக கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த புதிய நடைமுறை ஒருபுறம் புதிய வகை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்கினாலும், மறுபுறம் எதிர்காலத்தில் மனிதர்கள் தற்போது மேற்கொண்டு வரும் எளிய மற்றும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகளை ரோபோக்கள் கைப்பற்றிவிடுமோ என்ற கவலையையும் எழுப்பியுள்ளது.
பொதுவாக ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களுக்கு இணையத்தில் கிடைக்கும் எழுத்துகள், கட்டுரைகள் மற்றும் தரவுகளைக் கொண்டு பயிற்சி அளிப்பது சாத்தியமாகும். ஆனால், வீடுகள், அலுவலகங்கள் அல்லது தொழிற்சாலைகளில் மனிதர்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய நிஜ உலக ரோபோக்களுக்கு அது மட்டும் போதாது. மனிதர்கள் பொருட்களை எவ்வாறு பிடிக்கிறார்கள், நகர்த்துகிறார்கள், பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அவை கற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்காகவே 'எகோசென்ட்ரிக் டேட்டா' (Egocentric Data) எனப்படும் முதல் நபர் பார்வைக் கோணத்தில் பதிவு செய்யப்படும் வீடியோத் தரவுகள் அவசியமாகின்றன. அதாவது, ஒரு மனிதர் தனது கண்களால் ஒரு செயலை எவ்வாறு பார்க்கிறார் மற்றும் மேற்கொள்கிறார் என்பதையே அதே கோணத்தில் பதிவு செய்யும் முறையாகும். இதற்காக தொழிலாளர்களின் தலையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் கண்ணாடிகள் (Smart Glasses) அல்லது சிறப்பு சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவர்கள் பணிபுரியும் விதம் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது.
பின்னர் அந்தக் காட்சிகள் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் மனித வடிவ ரோபோக்களுக்குப் பயிற்சித் தரவாக வழங்கப்பட்டு, மனிதர்களின் செயல்முறைகளைப் புரிந்துகொண்டு அதைப் பின்பற்ற உதவுகின்றன.
தற்போது இந்த திட்டத்தில் சாதாரண இல்லத்தரசிகள் முதல் சாலையோரத் தொழிலாளர்கள் வரை பலரும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வீடியோ எடுக்கும் ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக ஒருவர் மாம்பழம் நறுக்குவது அல்லது சமையல் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும்போது, தனது தலையில் ஸ்மார்ட்போனைப் பொருத்தி அதை வீடியோவாக பதிவு செய்கிறார். பின்னர் அந்த வீடியோக்களை ஒரு செயலி மூலம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கும் ஒரு முன்னணி AI நிறுவனத்திற்கு அனுப்புகிறார்.
அதுவும் பெங்களூருவில் சாலையோரம் பூக்கட்டி விற்கும் 55 வயது பெண்மணி ஒருவரும், தன் நெற்றியில் கேமராவைப் பொருத்திக்கொண்டு பூக்கட்டும் வீடியோவைப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
2050-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மனிதர்களுக்கு உதவும் வகையில் இந்த ரோபோக்கள் செயல்படும். அவற்றைத் திறம்பட செயல்படச் செய்ய, தற்போது சேகரிக்கப்படும் இந்த வீடியோத் தரவுகள் முக்கிய பங்காற்றும் எனக் கருதப்படுகிறது.

தற்போது இந்த வேலை மூலம் ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் வருமானம் கிடைத்தாலும், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் குறையும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்தியாவில் AI காரணமாக ஏற்படும் வேலை இழப்புகள் பற்றி பேசும்போது பெரும்பாலும் ஐடி மற்றும் அலுவலகப் பணிகளே கவனத்தில் கொள்ளப்படுகின்றன. ஆனால், கோடிக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா துறையில் பணிபுரிபவர்களின் வேலைவாய்ப்பு குறித்து போதுமான அளவில் விவாதிக்கப்படுவதில்லை என்று இந்திய அரசின் கொள்கைக் குழுவான நிதி ஆயோக் கவலை தெரிவித்துள்ளது.
தலையில் கேமரா அணிந்து வேலை செய்வது இப்போது வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால், அவர்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் ரோபோக்களுக்கு பயிற்சியாக பயன்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளை எளிதாக்கலாம். அதே நேரத்தில், சிலரின் வேலைவாய்ப்பை பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே தொழில்நுட்ப வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் ஒன்றையொன்று பாதிக்காத வகையில் அரசாங்கம் திட்டங்களை வகுப்பது காலத்தின் கட்டாயம்.
photo credits: indiatoday, R Satish Babu/AFP


Click it and Unblock the Notifications