ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. இனி அந்த சிக்கல் இருக்காது.. வருகிறது புதிய வசதி.. இதோ முழு விவரம்..
இந்திய ரயில்வே அமைப்பு (Indian Railways) தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ரயில்வேறு அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு புதிய வசதிகளும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பொது மக்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து உறுதியான ரயில் டிக்கெட்டுகளை (confirmed train tickets) ரத்து செய்யாமல் வேறு தேதிகளுக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளும் வசதி
தற்போது ஆன்லைன் மூலம் செய்யப்படும் ரயில் டிக்கெட் முன்பதிவில், பயணத் தேதியை மாற்ற விரும்பும் பயணியர், டிக்கெட்டை ரத்து செய்து புதிதாக மீண்டும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதுவும் ரத்து செய்யும் போது அதற்கான கட்டணம் பிடிக்கப்பட்டு, பயணியருக்கு கூடுதல் செலுவும் சிரமமும் உள்ளது.
ஆகவே இந்த முறையில் மாற்றம் கொண்டுவர ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வந்த நிலையில், அதற்கான புதிய திட்டத்தை வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணியர், பயண தேதியில் மாற்றம் ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் வேறு தேதியில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். மேலும் மாற்றப்படும் தேதிக்கான ரயில் கட்டணம் அதிகம் என்றால், அதற்கான வித்தியாச தொகையை மட்டும் செலுத்த வேண்டும். வேறு கூடுதல் கட்டணங்கள் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வசதி அனைத்து மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
புதிய விதிகள்
அதேபோல் சமீபத்தில் ரயில் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. அதாவது அக்டோபர் 1, 2025 முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகள் மட்டுமே முதல் 15 நிமிடங்களுக்கு ரயில் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். உதாரணமாக முன்பதிவு காலை 10 மணிக்கு திறந்தால், ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டும் காலை 10 மணி முதல் காலை 10.15 மணி வரை முன்பதிவு செய்ய முடியும். அந்த 15 நிமிடங்களுக்குப் பிறகு IRCTC கணக்கு உள்ள எவரும் வழக்கம் போல் முன்பதிவு செய்யலாம்.

அதேசமயம் நேரடி கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது ஆதார் இல்லாமல் ரயில்வே கவுண்டர்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி கணக்குகள் உடன் ஆதார் அட்டையை இணைப்பது போலி கணக்குகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தடுக்க உதவும், அதிக விலைக்கு டிக்கெட்டுகளை வாங்கி விற்கும் தரகர்களைத் தடுக்கும் வகையில் தான் இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விதிகள் ஏற்கனவே தட்கல் முன்பதிவுகளில் உள்ளது. இப்போது இந்த விதி பொது முன்பதிவுகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








