அன்ரிசர்வுடு பெட்டிகளில் இனி ஈஸியா சீட் பிடிக்கலாம்! புதிய பயோமெட்ரிக் முறை அறிமுகம்!
முன்பதிவு செய்யாத பயணிகள் ரயிலில் பயணம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு விஷயமாக இருந்து வந்தது, இதற்குத் தீர்வாக தற்பொழுது, இந்திய ரயில்வே துறை முதல் முறையாக இந்தியாவில் பயோமெட்ரிக் அடையாள முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் சீட்
பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய ரயில்வே முதல் முறையாகப் பயணிகளுக்கு உதவும் விதத்தில், இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க இந்த பயோமெட்ரிக் முறையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

பயோமெட்ரிக் அடையாள முறை
மேற்கு ரயில்வே பிரிவின் மும்பை மத்திய ரயில் நிலையம் மற்றும் பாந்த்ரா டெர்மினஸில் இந்த புதிய பயோமெட்ரிக் திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கு இடங்களை உத்தரவாதம் செய்வதற்காகவே இந்த பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக விரோதிகள் பயணத்தை கண்காணிக்க
முன்பதிவு செய்யாத பெட்டிகளில் எப்பொழுதும் பயணிகளிடையே பெரிய அளவில் நெரிசலும், பிரச்சனைகளும் நிகழ்கிறது. இந்நிலையைச் சமாளிப்பதற்கும் சமூக விரோதிகள் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதை கண்காணிக்கவும், இந்த பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை ரேகையை வைத்துப் பதிவு டோக்கன்
இம்முற்றைப்படி பயணிகள் பயோமெட்ரிக் இயந்திரத்தில் அவர்களின் கை ரேகையை வைத்துப் பதிவு செய்தவுடன் டோக்கன் வழங்கப்படும். ரயில்வே காவல்துறை உதவியுடன், டோக்கன் இல் உள்ள பதிவ எண் படி பயணிகள் வரிசையில் நிறுத்தப்படுவர். இதனால் நெரிசல் இல்லாமல், குழப்பம் இல்லாமல் அனைவருக்கும் இடங்கள் முறையாய் வழங்கப்படும்.

திருடர்களை அடையாளம் காண உதவும் பயோமெட்ரிக்
ரயில்வே காவல்துறையினர் டோக்கன்களை சோதித்த பிறகு பயணிகள் முன்பதிவில்லா பெட்டிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முன்னாள் வந்து டோக்கன் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டும். அதுமட்டுமில்லாமல் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) உதவியுடன் கைரேகை பதிவுகள் மூலம் சாத்தியமான திருடர்களை அடையாளம் காண இந்த பயோமெட்ரிக் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது நடைமுறையில்
மும்பை மத்திய ரயில் நிலையம் மற்றும் பாந்த்ரா டெர்மினஸ் நிலையத்திற்கு தலா 2 பயோமெட்ரிக் இயந்திரம் என மொத்தம் 4 இயந்திரங்களை இந்திய ரயில்வே முதல் கட்ட நடவடிக்கையாக நிறுவியுள்ளது. அமராவதி எக்ஸ்பிரஸ், ஜெய்ப்பூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கர்னாவதி எக்ஸ்பிரஸ், குஜராத் மெயில், கோல்டன் டெம்பிள் மெயில் போன்ற ரயில்களில் இந்த பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications