ரயில் டிக்கெட் புக்கிங் ரூல்ஸ் எல்லாம் மாறுது.. மார்ச் 1 முதல் பெரிய மாற்றம்.. பயணிகள் கவனத்துக்கு..
இந்திய ரயில்வே பயணிகளுக்கு தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மார்ச் 1 (நாளை) முதல் யுடிஎஸ் (UTS) மொபைல் செயலி மூலம் பொது மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் பதிவு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய செயலி ஒன்றைப் பயன்படுத்தக் கூறியுள்ளது இந்திய ரயில்வே அமைப்பு. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
யுடிஎஸ் செயலியைப் பயன்படுத்தி பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட், அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக இந்த யுடிஎஸ் செயலி இருந்ததால் ரயில் நிலையங்களில் சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை இருந்தது.

யுடிஎஸ் செயலி செயல்படாது
இந்நிலையில் 2026 மார்ச் 1 முதல் யுடிஎஸ் செயலி செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே புதிதாகக் கொண்டுவரப்பட்ட ரயில்ஒன் (RailOne) செயலி மூலம் டிக்கெட்டுகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்ஒன் செயலி மூலம் பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட், அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை பெற முடியும்.
இதுதவிர ரயில்ஒன் செயலியில் ரயில்கள் தேடல், பிஎன்ஆர் நிலை, ரயிலை டிராக் செய்தல், உணவு ஆர்டர், டிக்கெட் ரீபண்ட் பெறுதல் சேவைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் ரயலிவே புகார்களை அளிக்கும் ரயில் மதாத் சேவையும் இந்த செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு சேவைக்கும் இனி தனித்தனி செயலியைப் பயன்படுத்த அவசியம் இருக்காது. இந்த ரயில்ஒன் செயலியே அனைத்து சேவைக்கும் பயன்படும்.
மொபைல் நம்பர்
அதேசமயம் யுடிஎஸ் செயலியில் உள்ள பயனர்களின் தற்போதைய ஆர்-வாலட் இருப்பு (பேலன்ஸ்) முற்றிலும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கும் என்று தேசிய போக்குவரத்து நிறுவனம் உறுதியளித்துள்ளது. பின்பு உங்கள் ஆர்-வாலட் தொகை ரயில்ஒன் செயலிக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்ஒன் செயலியில் பதிவு செய்ய யுடிஎஸ்-இன் அதே மொபைல் எண்ணைப் பயன்படுத்தவும் என்று சிஆர்ஐஎஸ் (CRIS) தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரயில்ஒன் செயலிக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ரயில்ஒன் செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்க முன்பதிவில்லா டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட் பெறுவோருக்கு 3 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.
3 சதவீத தள்ளுபடி
பொதுவாக ரயில்ஓன் செயலியில் உள்ள R-wallet மூலம் பணம் செலுத்தி ரயில் டிக்கெட் வாங்கினால் 3 சதவீதம் கேஷ்பேக் (Cashback) வழங்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் இந்திய ரயில்வே அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுபிஐ (UPI), டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் என எந்தவொரு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்தினாலும், டிக்கெட் விலையில் நேரடியாக 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

3 சதவீத தள்ளுபடி சலுகை ஆனது ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை ஆறு மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை ரயில்ஒன் செயலியைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இணையதளங்கள், கவுண்டர்களில் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்காது.
ஏற்கனவே வழக்கத்தில் உள்ள R-wallet மூலம் 3 சதவீத கேஷ்பேக் வசதி இதனுடன் சேர்த்து தொடர்ந்து செயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்பதிவு செய்யப்படாத (Unreserved) பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளைக் காகிதமில்லா மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாற்ற இந்த கேஷ்பேக் சலுகை திட்டம் உதவும். இந்த சலுகை உள்ளூர், வெளியூர் என அனைத்து இடங்களுக்கும் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications