9 முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்.. சென்னையில் கூட புல்லட் ரயில் சேவையா?
இந்தியாவில் ரயில் போக்குவரத்துக்கு என்பது மக்களின் மிக முக்கியமான போக்குவரத்துக்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய ரயில்வே தான் மக்களுக்கான மிக முக்கியமான 'வாழ்க்கை பாதை' என்று அழைக்கப்படுகிறது. இந்திய ரயில்வே தொடர்ந்து அதன் சேவையை மக்களுக்காக மேம்படுத்தி வருகிறது. இப்போது இருக்கும் சூப்பர் பாஸ்ட் ரயில்களின் வேகத்தை விட இன்னும் அதி வேகமான ரயில்களை இந்தியத் தடங்களில் அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே மும்முரம் காட்டி வருகிறது. இதன் படி, முக்கியமான இந்திய வழிகளில் மிக விரைவில் புல்லட் ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் புதிய புல்லட் ரயில்கள்
எந்த முக்கிய நகரங்களில் இந்த புதிய புல்லட் ரயில்கள் அறிமுகம் செய்யப்படப் போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக, நமது அறிவிற்குக் கொஞ்சம் தீனி கொடுப்பது போன்ற சிறிய தகவலைப் பார்த்துவிட்டு செய்திக்குள் செல்லலாம். ரயிலைக் கண்டுபிடித்தது யார்? முதல் ரயில் பயணம் எங்கிருந்து எங்குத் தொடங்கப்பட்டது? இந்தியாவில் முதல் ரயில் பயணம் எப்போது துவங்கப்பட்டது? போன்ற சில முக்கிய வரலாற்றுத் தகவலைத் தெரிந்துகொண்டு செய்திக்குள் செல்லலாம்.

முதல் ரயில் யாரால் எங்கு உருவாக்கப்பட்டது?
கார்ன்வாலில் பிறந்த பிரிட்டிஷ் பொறியாளர் ரிச்சர்ட் ட்ரெவிதிக் என்பவரால் 1804 இல் ஐக்கிய இராச்சியத்தில் முதல் முழு அளவிலான வேலை செய்யும் ரயில் போக்குவரத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதல் ரயில் இன்ஜின் நீராவி மூலம் இயங்கும் நீராவி இன்ஜினாக உருவாக்கப்பட்டது. இது உயர் அழுத்த நீராவியைப் பயன்படுத்தி இயந்திரத்தை ஒரு பவர் ஸ்ட்ரோக் மூலம் இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின் தொழினுட்ப வளர்ச்சியின் காரணமாக டீசல் மூலம் இயங்கும் ரயில் இன்ஜின்கள் உருவாக்கப்பட்டது. பின்னர் இது மின்சாரமாக மாற்றப்பட்டது, இப்போது புல்லட் வேகத்தில் பயணிக்கும் சூப்பர் ஸ்பீட் ரயில்கள் வந்துவிட்டது.

இந்தியாவில் முதல் ரயில் பயணம் எப்போது துவங்கப்பட்டது தெரியுமா?
1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி பாம்பேயின் போரி பண்டர் நிலையத்திற்கும் தானேவிற்கும் இடையே இயக்கப்பட்ட நாட்டின் முதல் பயணிகள் ரயில், டல்ஹவுசி பிரபுவால் அறிமுகம் செய்யப்பட்டது. சாஹிப், சிந்து மற்றும் சுல்தான் ஆகிய மூன்று நீராவி இன்ஜின்களால் 14 பெட்டிகள் கொண்ட ரயில் பயணம் முதன் முதலில் இந்தியாவில் துவங்கப்பட்டது. கிட்டத்தட்ட உலகின் முதல் ரயில் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்து 50 வருடங்கள் கழித்து இது இந்தியாவில் தனது சேவையைத் துவங்கியது.

நான்கு புதிய புல்லட் ரயில் பாதைகள் அறிமுகமா?
தேசிய இரயில் திட்டத்தின் கீழ், இந்திய இரயில்வே மேலும் ஒன்பது நகரங்களை அதிவேக இரயில் வலையமைப்புடன் இணைக்கும் நான்கு புதிய புல்லட் ரயில் பாதைகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது என்று சமீபத்திய செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஹைதராபாத் மற்றும் பெங்களூர் இடையே 618 கிமீ நீள பாதை, நாக்பூர் மற்றும் வாரணாசி இடையே 855 கிமீ நீள பாதை, பாட்னா மற்றும் கவுகாத்தி இடையே 850 கிமீ நீளம் பாதை மற்றும் அமிர்தசரஸ், பதான்கோட் இடையில் 190 கிமீ நீள பாதைகளில் இந்த புதிய ரயில் சேவை துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளின் பார்வையைச் செழுமைப்படுத்த இப்படி ஒரு திட்டமா?
ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே என்ஆர்பியின் கீழ் செயல்பட்டு வரும் எட்டு வழித்தடங்களுக்குக் கூடுதலாக புதிய வழித்தடங்கள் முன்மொழியப்படும் என்று ரயில்வே வட்டாரம் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து முக்கிய இந்திய நகரங்களையும் அதிவேக ரயில் நெட்வொர்க்குடன் இணைக்க ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, அனுமதியளிக்கப்பட்ட மற்றும் முன்மொழியப்பட்ட புல்லட் ரயில் பாதைகள், பயணிகளின் பார்வையைச் செழுமைப்படுத்தும் அழகிய பசுமையுடன் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது இந்த கட்டுமான பணிகள் நிறைவடையும்?
தற்போது, இந்தியாவின் முதல் அதிவேக ரயில் வழித்தடம், மும்பை முதல் அகமதாபாத் இடையே 508 கிமீ தூரம் செல்கிறது என்றும், இதன் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2026 முதல் 2027 வரை இதன் கட்டுமான பணிகள் நடைபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் வெளிப்படுத்தியுள்ளார். இந்த புல்லட் ரயில் திட்ட மதிப்பீடு சுமார் ரூ.1.1 லட்சம் கோடியாகும்.

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியாவின் புல்லட் ரயில் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும், நிர்மாணிப்பதற்கும் மற்றும் நிர்வகிப்பதற்கும் தேர்வு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இது மும்பை - அகமதாபாத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட பிற வழித்தடங்களுக்கான டிபிஆர்கள் இன்னும் தயாராகி வருகின்றன என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கும் புல்லட் ரயில் பாதை உள்ளதா? இது எங்கிருந்து எங்கு வரை செல்கிறது?
ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எட்டு அதிவேக ரயில் வழித்தடங்களில் மும்பை - அகமதாபாத், டெல்லி மற்றும் வாரணாசி இடையே 958 கிமீ நீளமுள்ள பாதை, லக்னோ மற்றும் அயோத்தியை இணைக்கும் 123 கிமீ நீளமான ஸ்பர், நாக்பூர் மற்றும் மும்பை இடையே 736 கிமீ நீளமான பாதையும் இதில் அடங்கும். டெல்லி மற்றும் அகமதாபாத் இடையே 886 கிமீ நீளப் பாதை, டெல்லி மற்றும் அமிர்தசரஸ் இடையே 480 கிமீ நீளப் பாதை, மும்பை மற்றும்

தமிழ்நாட்டிலிருந்தும் புல்லட் ரயில் புறப்படும்
ஹைதராபாத் இடையே 711 கிமீ நீள பாதை, வாரணாசி மற்றும் ஹவுரா இடையே 760 கிமீ நீள நடைபாதை மற்றும் 435 கிமீ நீளம் கொண்ட சென்னை மற்றும் மைசூர் இடையே அதிவேக பாதை அமைக்கப்படவுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், ரயில்வே அமைச்சகம் இந்த ஆண்டு இதில் உள்ள நான்கு வழித்தடங்களை விரைவாகத் தயார்செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. முதல் புல்லட் ரயில் பயணம் சென்னை மற்றும் மைசூர் இடையில் துவங்கப்படும் என்பது இந்த தகவல் மூலம் உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications