பிப்ரவரி 1ம் தேதி முதல் வெறும் 30 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம்.. எப்படி தெரியுமா?
ஐஓசி என்று அழைக்கப்படும் இந்தியன் ஆயில் நிறுவனம் பிப்ரவரி 1ம் தேதி முதல் புதிய சிலிண்டர் விநியோகம் செய்யும் முறையை அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும், நம்ப முடியாத வகையில் சிலிண்டர் புக் செய்யப்பட்ட அரை மணி நேரத்தில் வீடு தேடி புதிய சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் அதிகரிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது, அதுவும் குறிப்பாக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தமிழகத்தில் சுமார் 1.36 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்குச் சரியான நேரத்தில் சிலிண்டர் விநியோகம் செய்வதற்கு நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சரியான நேரத்தில் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் அவதி
இருப்பினும், சிலிண்டர் புக்கிங் செய்த உடன் கிடைப்பது என்பது பலருக்கும் சாத்தியமில்லாத ஒன்றாக தான் இருக்கிறது, சிலிண்டர் விநியோகம் சிட்டியில் 1 நாளிலும், கிராம பகுதிகளில் சிலிண்டர்களின் விநியோகம் ஒரு வாரம் வரை தாமதம் ஆகிறது என்றும், இன்னும் சில இடங்களில் சிலிண்டர் விநியோகம் செய்வதற்கு 15 நாட்கள் கூட ஆவதாகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவசர தேவைக்குச் சரியான நேரத்தில் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்தியன் ஆயில் நிறுவனம்
இந்த சூழ்நிலையைச் சரி செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் இப்போது புதிய சிலிண்டர் விநியோகம் முறையைப் பிப்ரவரி 1ம் தேதி முதல் அறிமுகம் செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை தட்கல் புக்கிங் போன்று செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிலிண்டர் புக்கிங் செய்த அடுத்த 30 நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு விநியோகம் செய்யப்படும் தட்கல் முறை திட்டமாக இந்த திட்டம் செயல்படும்.

தட்கல் சிலிண்டர் புக்கிங் திட்டம்
இந்தியன் ஆயில் நிறுவனம் மட்டுமே இந்த தட்கல் சிலிண்டர் புக்கிங் திட்டத்தை தற்பொழுது தனது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. சிலிண்டர் புக்கிங் செய்த அடுத்த 30 நிமிடங்களில் உங்கள் இருப்பிடம் அருகில் இருக்கும் கேஸ் ஏஜென்சியின் மூலம் காஸ் சிலிண்டர் வீடு தேடி விநியோகம் செய்யப்படும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஆன்லைன் புக்கிங் போன்றே இந்த தட்கல் முறையும் செயல்படும்.

இதில் எந்தவித மாற்றமுமில்லை
ஆனால், வழக்கமான சிலிண்டர் கட்டணத்தை விட இதன் கட்டணம் அதிகமாக இருக்கலாம் என்று ஒரு தரப்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளது. சிலிண்டர் புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் காலியான சிலிண்டர்களை திரும்ப அளித்த பிறகே புதிய சிலிண்டர் வழங்கப்படும். இதில் எந்தவித மாற்றமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய தட்கல் முறை சிலிண்டர் புக்கிங் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று நம்பப்படுகிறது.

தட்கல் எல்பிஜி சேவா திட்டம்
இந்தநிலையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் புதிய சிலிண்டர் புக்கிங் செய்தவுடனே அடுத்த சிலிண்டரை டெலிவரி செய்யும் தட்கல் முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது ஐஓசி. இந்த முறையில் வாடிக்கையாளர் புக்கிங் செய்த நாளிலேயே அவர்களின் வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி ஆகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தட்கல் எல்பிஜி சேவா' என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படும். இதனைத் தொடர்ந்து மற்ற சிலிண்டர் நிறுவனங்களும் இந்த திட்டத்தைப் பின்பற்ற அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications