2K கிட்ஸ்கள் சபிக்கப்பட்டவர்களா? சீனாவில் என்ன நடந்தது? வேதனையில் A.R.Rahman
செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் வேளையில், சீனாவில் உள்ள பள்ளியொன்றில் மாணவர்களின் வகுப்பறையில் நடந்த சம்பவம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் (A.R.Rahman) மனதை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. அப்படி அந்த சீன பள்ளியில் என்ன நடந்தது?
செயற்கை நுண்ணறிவின் வருகையானது, தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாமல், விவசாயம் (Agriculture), மருத்துவம் (Medical ), கல்வி (Education), விளையாட்டு (Sports) உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கிவிட்டது. அந்த வகையில், பள்ளி மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிவிரைவில் சென்றடைய இருக்கிறது.

அதற்கு சான்றாக சீனாவில் உள்ள பள்ளியொன்றில் நடந்த சம்பவம் மாறியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித வேலைகளை எளிதாக்க மட்டுமே கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது நடக்கும் பல்வேறு சம்பவங்களை வைத்து பார்க்கும்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித வேலைகளில் குறுக்கிடுவது நன்றாகவே தெரிகிறது.
கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் வருகை, பள்ளி மாணவர்கள் இடையே கவிதை எழுதுவது முதல் கம்ப்யூட்டர் கோடிங் எழுதுவது வரையில் மிகுந்த உதவியாக இருக்கலாம். ஆனால், இதுபோன்ற செயல்களின் போது மாணவர்களின் கற்பனை திறனும், செயல்திறனும் பாதிக்கப்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இப்படி மாணவர்களின் கற்பனை திறனை நேரடியாக பாதிக்கும் வகையில் சீனாவில் உள்ள ஒரு பிரைமரி பள்ளியில் ஏஐ பவர்ட் ஹெட்பேண்ட்ஸ் (AI-powered headbands) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹெட்பேண்ட் ஹாலிவுட் படங்களில் வரும் கருவி போல இருக்கிறது. இதை அந்த பள்ளி மாணவர்கள் பாடம் எடுக்கப்படும்போது தங்களது தலையில் மாட்டிக்கொள்கின்றனர்.
இந்த ஹெட்பேண்ட் அவர்கள் தலையில் இருந்தால், அந்த மாணவர்கள் பாடத்தை கவனிக்கிறார்களா? இல்லையா? என்று தெரிந்துகொள்ள முடியும். இப்படி முக்கியமான பாடங்களை எடுத்து, அதில் எவ்வளவு நேரம் மாணவர்கள் பாடங்களை கவனித்தனர். எவ்வளவு நேரம் கவனிக்கவில்லை என்ற தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் அந்த பள்ளி ஈடுபட்டுள்ளது.
இந்த தகவல் பெற்றோர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், அந்த பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் சீருடைகளிலும் டிராக்கிங் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் பள்ளியில் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதேபோல வகுப்பறையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் மாணவர்கள் என்ன செய்கிறார்கள்.
எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் என்பதும் கண்காணிக்கப்படுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, அதுவொரு ஸ்மார்ட் ஸ்கூல் போல உங்களுக்கு தோன்றலாம். ஆனால், மாணவர்களின் மனநலத்தில் இது மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நடைமுறை அவர்களுக்கு ஜெயிலில் இருப்பது போன்ற உணர்வை கூட அளிக்கலாம் என்று பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிலர் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆதிக்கத்தை கண்டு வருத்தம் அடைகின்றனர்.
அந்த வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது வேதனையை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், அந்த சீன பள்ளியின் வீடியோவை பதிவிட்டு, "இன்றைய தலைமுறையினரை பார்த்து வேதனை கொள்கிறேன். அவர்கள் ஒரே நேரத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவும் சபிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதற்கு காலம்தான் பதில் சொல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது ட்வீட்டுக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








