இந்த அம்சம் இல்லாத போன்களுக்கு இனி இந்தியாவில் தடையா? ஸ்ட்ரிக்ட்டாக நோ-என்ட்ரி சொன்ன இந்திய அரசாங்கம்!
நாகரீகம் என்ற பெயரில் நாம் நவீனமயமாக வேகமாக வளர-வளர, நாம் இதற்கு முன் பின்பற்றி வந்த மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை அடியோடு மறந்து வருகிறோம். இப்படி நம் வாழ்வில் இருந்து மறைமுகமாக மறைக்கப்பட்ட விஷயம் தான் FM ரேடியோ.
எப்எம் ரேடியோ (FM Radio) என்ற அம்சத்தை பெரும்பாலானோர் மறந்துவிட்டனர். குறிப்பாக இன்றைய காலத்து இளைய சமூகத்தினருக்கு FM ரேடியோ பற்றிய தகவலே தெரியவில்லை என்பது தான் உண்மை. இதற்கான, முக்கிய காரணம் ஸ்மார்ட்போன்கள் தான். முன்னொரு காலத்தில் மொபைல் போன் என்றாலே அதில் மியூட் பிளேயர் மற்றும் FM ரேடியோ அம்சம் என்பது கட்டாயமாக இருக்கும்.

இத்தகைய அம்சங்களை மக்கள் விரும்பி பயன்படுத்தி வந்தனர். ஆனால், நாட்கள் நகர-நகர மெல்ல FM ரேடியோவின் அம்சம் மொபைல் போன்களில் இருந்து மறைந்துவிட்டது. குறிப்பாக, இன்றைக்கு விற்பனையாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் FM ரேடியோ அம்சம் இல்லவே இல்லை. இப்போது, நோக்கியா போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து அதன் போன்களில் FM ரேடியோ அம்சத்தை வழங்கி வருகின்றன.
ஆனால், மக்கள் மனதில் இருந்து மறைந்து போன, எப்எம் ரேடியோ அம்சத்தை மீண்டும் ஸ்மார்ட்போன்களில் கொண்டு வரக் கூறி, இந்திய அரசாங்கம் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் OEM-களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. FM ரேடியோ அம்சத்தை ஸ்மார்ட்போன்களில் சேர்க்க வேண்டியது அவசியமானது என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தையும் இந்திய அரசாங்கம் இப்போது வெளியிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்திற்கான உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் (MAIT) இணைந்து இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) அரசாங்கம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை டிஜிட்டல் பிரிவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரேடியோ சேவைகளை அணுக தனித்த ரேடியோ சாதனங்களை வாங்க முடியாது என்ற நோக்கத்தின் காரணமாகவும் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய விதியானது ரேடியோ சேவை மூலம் தகவல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை மக்கள் வேகமாக அணுகுவதை உறுதி செய்யும் என்றும், குறிப்பாக அவசரநிலை மற்றும் பேரழிவுகளின் போது, இது முக்கியமான கருவியாக மாறும் என்ற நோக்கத்திற்காக FM ரேடியோ அம்சத்தை மீண்டும் ஸ்மார்ட்போன்களில் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது மக்களை ஆபத்தான காலங்களில் எச்சரிக்க பெரிதும் பயன்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்எம் ரேடியோ செயல்பாடு அல்லது அம்சம் ஸ்மார்ட்போன்களில் உள்ளமைக்கப்பட்டிருந்தால் அதை முடக்கவோ அல்லது செயலிழக்கவோ செய்ய கூடாது என்று ஐடி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அப்படி FM ரேடியோ அம்சம் ஒரு ஸ்மார்ட்போனில் முற்றிலுமாக இல்லை என்றால், அதை OEM-கள் உடனே அவர்களின் போன்களில் கட்டமைக்க வேண்டும் என்றும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் FM ரேடியோ கொண்ட மொபைல்களில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வறுமைக் கோட்டிற்குக் கீழே வருமானம் உள்ளவர்கள் அல்லது இலவச எஃப்எம் ரேடியோ சேவைகளை நம்பியிருக்கும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் அவசரநிலைகள், பேரழிவுகள் மற்றும் பேரிடர்களின் போது நிகழ்நேர தகவல்களை அனுப்பும் அரசாங்கத்தின் திறனை இது எதிர்மறையாகப் பாதித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. எப்எம் இயக்கப்பட்ட மொபைல் போன்கள் மூலம் பேரழிவுகளின் போது, விலைமதிப்பற்ற உயிர்கள், வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையானது சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தையும் (ITU) குறிப்பிடுகிறது. இது முன்னர் மொபைல் போன்களில் ரேடியோ அம்சம் இயக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்ததை சுட்டிக்காட்டுகிறது. ITU இன் கூற்றுப்படி, ரேடியோ ஒலிபரப்பு என்பது அவசரகால மற்றும் பேரழிவுகளின் போது பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த, பயனுள்ள மற்றும் நீண்டகால முறையாகும் என்பதை அழுத்தமாக கூறியுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன்களில் FM ரேடியோ அம்சம் மீண்டும் கொண்டுவரப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








