சைக்கிள் கேப்புல.. சீனாவிற்கு ISRO வச்ச வெடி.. சந்திரயான்-3 பரபரப்புல.. இந்த விஷயத்தை கவனிக்காம விட்டோமே!
சந்திராயன்-2 விண்கலத்திற்கு ஏற்பட்ட தோல்வியானது, அதற்காக கடுமையாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை மட்டுமின்றி, அதன் வெற்றியை ஆர்வமாக எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த ஒவ்வொருரையுமே உள்ளூர காயப்படுத்தி விட்டது. அந்த காயத்திற்கான ஒரே மருந்து - சந்திராயன்-3 மிஷனின் வெற்றியாக மட்டுமே இருக்கும்!
இந்த ஒரு காரணத்திற்காகவே சந்திராயன்-3 மிஷனின் (Chandrayaan 3 Mission) ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு நகர்வும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. ஜூலை 14 ஆம் தேதியன்று விண்வெளிக்குள் செலுத்தப்பட்டது; பின்னர் பூமியின் சுற்றுபாதையை விட்டு பிரிந்தது; அதனை தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்ததது.

இப்படியாக ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று, சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் (Vikram Lander) ஆனது அதன் முதல் டீபூஸ்டிங் ஆபரேஷனை (Deboosting Operation) வெற்றிகரமாக மேற்கொண்டது. இரண்டாவது டீபூஸ்டிங் ஆபரேஷன் ஆகஸ்ட் 20இல் திட்டமிடப்பட்டுள்ளது.. என சந்திரயான்-3 பற்றிய ஒவ்வொரு தகவலும் மிகவும் பரபரப்பாக கவனிக்கப்படுகிறது.
இப்படியான பரபப்புகளுக்கு மத்தியில்.. சந்திரயான்-3 விண்கலமானது சீனாவை பின்னுக்கு தள்ளும் சாதனை ஒன்றையும் செய்ய உள்ளது என்கிற விஷயத்தின் மீது நம்மில் பலரும் கவனம் செலுத்த தவறிவிட்டோம். அதென்ன சாதனை? இந்த போட்டியில், சீனாவால் உடனே இந்தியாவை முந்த முடியுமா? இதோ விவரங்கள்:
திட்டமிட்டபடி, சந்திரயான்-3 விண்கலமானது வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டால்.. அமெரிக்கா, சீனா மற்றும் இப்போது ரஷ்யா என்று அழைக்கப்படும் சோவியத் யூனியனுக்கு பிறகு நிலவின் மேற்பரப்பில் சாஃப்ட் லேண்டிங் (Soft Landing) செய்யும்.. அதாவது மெதுவாக தரை இறங்கும் 4வது நாடாக இந்தியா மாறும்!
இருப்பினும் மேற்குறிப்பிட்ட 3 நாடுகளுமே சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் (Moon's South Pole) தரை இறங்கியதே இல்லை. இப்போதைக்கு நிலவின் தென் துருவத்தில் தரை இறங்க முயற்சி செய்யும் நாடுகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலமும், ரஷ்யாவின் லூனா-25 விண்கலமும் (Russia Luna-25 Mission) மட்டுமே உள்ளது.
இவ்விரு நாடுகளில் யார் முதலில் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்குவார்கள்? என்கிற கேள்விக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு பின்னரே விடை கிடைக்கும். ஏனென்றால் லூனா-25 விண்கலமானது ஆகஸ்ட் 21 ஆம் தேதிதான் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. சந்திரயான்-3 விண்கலமானது ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று தரை இறங்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் ரஷ்யா வெற்றி பெற்றாலும் சரி, இந்தியா வெற்றி பெற்றாலும் சரி.. சீனாவிற்கு மூன்றாவது இடம் தான் கிடைக்கும். ஏனென்றால் சந்திர கிரகத்தின் தென் துருவத்திலிருந்து மாதிரிகளை சேகரிக்க திட்டமிட்டுள்ள சீனாவின் சாங் 6 விண்கலமானது (Chang'e 6 Mission) அடுத்த ஆண்டு, அதாவது 2024 ஆம் ஆண்டில் தான் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ஆக எப்படி பார்த்தாலும் சந்திரயான்-3 வெற்றியானது சீனாவை பின்னுக்கு தள்ளும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சீனாவை மட்டுமல்ல விண்வெளி ஆராய்ச்சிகளில் "முடிசூடா மன்னனாக" திகழும் அமெரிக்காவையும் கூட இந்தியா பின்னுக்கு தள்ளும். ஏனென்றால் நாசா (NASA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் கூட நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லேண்டிங் செய்ததில்லை.
நிலவின் தென் துருவமானது கரடுமுரடான நிலப்பரப்பை கொண்டுள்ளதால், அங்கே தரையிறங்குவது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். இருப்பினும் அங்கே உலக நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு தரையிறங்க முக்கியமானதொரு காரணமும் உள்ளது. பெரும்பலான விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவின் தென் துருவமானது ஒரு மதிப்புமிக்க இடமாக இருக்கும்; அங்கே கணிசமான அளவில் பனிக்கட்டிகள் இருக்கும் என்று நம்புகிறார்கள்.
அங்கே தரை இறங்குவதன் மூலம் வருங்காலத்தில் சாத்தியமாகும் நெடுந்தூர விண்வெளி பயணங்களுக்கு (Long Distance Space Mission) தேவையான எரிபொருள் (Fuel), ஆக்ஸிஜன் (Oxygen) மற்றும் குடிநீர் (Water) போன்றவைகளை அங்கே கிடைக்கும் பனிக்கட்டிகளில் இருந்து பிரித்தெடுக்கலாம் (Extraction) என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications








