ஒவ்வொரு கிராமத்துக்கும் இன்டர்நெட்! ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு! BharatNet திட்டத்தால் யாருக்கு பலன்?
நாட்டின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை வழங்க ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படவிருப்பதாக மத்திய ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். இந்த திட்டம் எதற்காக? அதனால் என்ன பயன்? உள்ளிட்ட விவரங்கள் இதோ.
இந்தியாவில் 85 கோடிக்கும் அதிகமான மக்களிடம் இன்டர்நெட் சேவை இருக்கிறது. அதாவது, கிட்டத்த 75 சதவீத மக்களிடம் இன்டர்நெட் சேவை சென்று சேர்ந்துவிட்டது. இதனால், அத்தியாவசிய சேவைகளும் இன்டர்நெட் வளர்ச்சிக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. ஆனால், இதே இந்தியாவில் இன்டர்நெட் சேவை சென்று சேராமல் லட்சக்கணக்கான தொலைத்தூர கிராமங்கள் இருக்கின்றன.

இன்றளவும், பல கோடிக்கணக்கான மக்களுக்கு இன்டர்நெட் சேவை எட்டாக்கனியாகவே இருக்கிறது. இதனால், மத்திய அரசு பாரத்நெட் (BharatNet) திட்டம் மூலம் அனைத்து கிராப்புறங்களிலும் தடையில்லா இன்டர்நெட் சேவை வழங்க முடிவு செய்து, அதை செயல்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில் பாரத்நெட் திட்டம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
பாரத்நெட் திட்டம் என்றால் என்ன? இந்தியா முழுவதும் உள்ள ஆறு லட்சம் கிராமங்களுக்கு அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காகவே பாரத்நெட் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது, மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (Bharat Broadband Network Limited) நிறுவனம் (BBNL) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் ஒவ்வொரு கிராமமும் மின்-ஆளுமை, கல்வி மற்றும் மருத்துவத்துக்காக தடையில்லா இன்டர்நெட் சேவையை பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்துக்கு 2021ஆம் ஆண்டில் ரூ.22,676 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தமாக 8.5 பில்லியன் டாலர்கள் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரையில், பல்லாயிரம் கிராமங்களில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் மூலம் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் முதல்கட்டமாக 12,524 கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை வழங்குவதற்காக பணிகள் நடந்துவருகின்றன. வரும் 2025ஆம் ஆண்டுக்குள் ஆறு லட்சம் கிராமங்களிலும் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை சென்றுசேரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நேரத்தில், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப 4ஜி உள்கட்டமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பாரத் நெட் திட்டத்துக்கு கூடுதலாக 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.5 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யப்படவிருப்பதாக மத்திய ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில், தொழில்நுட்பம் என்பது சில நிறுவனங்களை மட்டுமே நம்பி இருக்க கூடாது. இங்கு, ஏழையாக இருந்தாலும் அவர்களிடம் தொழில்நுட்பம் சென்று சேர வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாகும். அதன்படியே ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் மக்களை சென்று சேருவதை உறுதி செய்து வருகிறோம்.
இப்போது, பாரத்நெட் திட்டத்துக்கு மேலும் 13 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்ய உள்ளோம்" எனத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தால் நேரடியாக மக்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது. ஆனால், இன்டர்நெட் சார்ந்த அரசு சேவைகள் விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்யும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








