துல்லியமாக தாக்குவோம்: இந்தியாவில் 5 நாட்களில் 2-வது அணு ஏவுகணை சோதனை வெற்றி- எதற்கு தெரியுமா?
கடந்த 19 ஆம் தேதி நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று எதிரி இலக்குகளை தாக்கும் கே-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

3,500கி.மீ வரை இலக்கை துல்லியமாக தாக்கலாம்
இந்த சோதனை ஆந்திர மாநில கடற்பகுதியில் நடைபெற்றது என்றும், இந்த ஏவுகணை ஆனது சுமார் 3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நீருக்கு அடியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பகல் நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்புத் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு
இந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இந்த ஏவுகணையை உருவாக்கியது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும்.

இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணை
இதுதவிர, நீர்மூழ்கி கப்பலில் பொருத்துவதற்கு முன்பு மேலும் பல கட்டங்களாக இந்த ஏவுகணை சோதிக்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக இந்த கே-4 ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணையாகும். மேலும் 700 கி.மீ தொலைவு வரையிலான இலக்குகளைத் தாக்கும் பிஓ-5 ஏவுகணை இந்தியாவின் முதல் நீர்மூழ்கி ஏவுகணை ஆகும்.

கே -4 என்ற அணுசக்தி ஏவுகணை
இந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களில் இரண்டாவது முறையாக விசாகப்பட்டினம் கடல் பகுதியில் கே -4 என்ற அணுசக்தி திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.

பாகிஸ்தான் நடத்திய சோதனையும் வெற்றி
பாகிஸ்தான், தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் ஆற்றல் வாய்ந்த காஸ்னவி அணு ஏவுகணை சோதனையை கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி நடத்தியது. நேற்று மீண்டும் காஸ்னவி ஏவுகணையை அந்த நாடு சோதித்து பார்த்தது. இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த ஏவுகணை அணுகுண்டுகளுடன், 290 கி.மீ. தொலைவு வரையில் சென்று இலக்குகளை தாக்கக்கூடியதாகும்.

எதிரி நாடுகளை எளிதாக தாக்கலாம்
இந்த நிலையில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையானது, இதன்மூலம் பாகிஸ்தானின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும், சீனாவின் பல பகுதிகளையும் தாக்க முடியும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், இதிலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 உள்ளிட்ட ஏவுகணைகளையும் ஏவ முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications