மின்னல் வேக ரயில் தட்கல் டிக்கெட் ஆப் உருவாக்கி மோசடி: சிக்கிய ஐஐடி பட்டதாரி!
திருப்பூரைச் சேர்ந்த ஐஐடி பட்டதாரி ஒருவர் சட்டவிரோதமாக சூப்பர் தட்கல் மற்றும் சூப்பர் தட்கல் ப்ரோ என்ற ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு பயன்பாடுகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

வேகமாக ரயில் டிக்கெட் முன்பதிவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா. 32 வயதான இவர் மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ஐஐடியில் ஏரோஸ்பேஸ் படிப்பில் எம்டெக் பட்டம் பெற்றுள்ளார். இவர் ஐஆர்சிடிசியை விட வேகமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலியை உருவாக்கினார்.

சூப்பர் தட்கல் மற்றும் சூப்பர் தட்கல் ப்ரோ
யுவராஜா, சூப்பர் தட்கல் மற்றும் சூப்பர் தட்கல் ப்ரோ ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு பயன்பாடுகளை உருவாக்கினார். இவரது இந்த செயலிகள் மிகவும் பிரபலமடைந்து கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு லட்சம் பயனர்கள் பதிவிறக்கம் செய்தன. எளிதில் செயலிகளை பயன்படுத்தி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என இவரது செயலிகள் மூலம் பலர் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஐஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் இல்லை
இவர் உருவாக்கிய சூப்பர் தட்கல் மற்றும் சூப்பர் தட்கல் ப்ரோ என்ற இரண்டு செயலிகள் மூலம் 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 20 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு முறையை தவிர்க்கும் நடவடிக்கையாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இவர் ஐஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் கூட இல்லை எனவும் கூறப்படுகிறது.

தனிக் கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு
தட்கல் டிக்கெட்டுகளை விரைவில் முன்பதிவு செய்ய அதற்கேற்ப தனிக் கட்டணத்தையும் செயலி மூலம் யுவராஜ் வசூலித்ததாக கூறப்படுகிறது. ரயில்வே சைபர் கிரைம் போலீஸாரின் இணையவழி பரிசோதனை மூலம் இவரது செயலிகள் சிக்கியுள்ளன. கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இவரது செயலிகள் அகற்றப்பட்ட பதிவிறக்கங்களுக்கு கிடைக்கவில்லை.

வீட்டில் இருந்தே பணியாற்றிய நபர்
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த யுவராஜா கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான திருப்பூருக்கு திரும்பி வீட்டில் இருந்தே பணியாற்றியுள்ளார். வீட்டில் இருந்தபடியே செயலியை யுவராஜா அப்டேட் செய்துள்ளார்.

வழக்குப் பதிவு செய்து கைது
தெற்கு ரயில்வே தலைமையகத்தின் சைபர் செல் அதிகாரிகள் மூலம் மோசடி செய்து பணம் ஈட்டியதை கண்டறிந்த திருப்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் யுவராஜாவை கைது செய்தனர். ரயில்வே சட்டத்தின் 143(2) பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
source: indiatimes.com


Click it and Unblock the Notifications