ATM பரிவர்த்தனை தோல்வியா? அப்போ இனி வங்கியிடமிருந்து தினமும் ரூ.100 அபராதம் வசூலிக்கலாம்!
உங்களுடைய ATM பரிவர்த்தனை தோல்வி அடைந்துவிட்டதா? ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லையா? ஆனாலும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துவிட்டதாகக் காட்டப்படுகிறதா? அப்படியினால் நாங்கள் சொல்லும் இந்த முறையைப் பின்பற்றி உங்களுடைய வங்கியிடம் இருந்து ஒரு நாளைக்கு ரூ. 100 என்ற அபராத தொகையைப் பெற உங்களுக்கு உரிமை இருக்கிறது. இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

ஐயோ! பணம் போச்சா! என்று கவலைப் படாதீர்கள்
பல முறை பல வாடிக்கையாளர்களுக்கு வங்கி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் பொழுது பரிவர்த்தனை தோல்வியடைகிறது. அதேபோல், சில நேரங்களில் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வராமல், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாகக் காட்டப்படுகிறது. அத்தகைய நேரத்தில் உண்மையில் நம்முடைய நெஞ்சு பதைபதைக்கும், ஐயோ! பணம் போச்சா! என்று நம்மில் சிலர் கடுப்பான நேரமும் இருந்திருக்கக்கூடும். இனி அப்படி கவலைப் படாதீர்கள், கடுப்பாகாதீர்கள். நாங்கள் சொல்வதை செய்யுங்கள்.

ஏடிஎம் ஸ்லிப்-ஐ குப்பையில் போடாமல் வைத்திருங்கள்
இப்படி ஒரு சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக வங்கியைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துவிடுங்கள். பரிவர்த்தனை தோல்வியுற்ற ஏடிஎம் ஸ்லிப் உங்கள் கையிலிருந்தால் அதைக் குப்பையில் போடாமல் பத்திரமாக வைத்துப் புகாரளிக்கும் பொழுது அதையும் ஒரு நகல் எடுத்துச் சேர்த்து வைத்து புகார் அளியுங்கள். பல முறை சொல்லியும், புகார் அளித்த பிறகும் பணம் கிடைக்கவில்லையா? அப்போ நீங்கள் வங்கியிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நேரம் துவங்கிவிட்டது.

வங்கியிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் உரிமை
இந்திய ரிசர்வ் வங்கி இந்த சிக்கலுக்காகச் சிறப்பு விதி ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது, அதன்படி உங்களுடைய பணம் உடனடியாக திருப்பித் தரப்படும். வங்கி தாமதமாகச் செயல்பட்டதற்கு ஒரு நாளைக்கு ரூ.100 என்ற விதத்தில் அபராத தொகையும் உங்களுக்கு வழங்கப்படும். புகார் அளித்த ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவில்லை என்றால், ஏடிஎம் அட்டை வழங்கிய வங்கி தினசரி ரூ .100 இழப்பீடு செலுத்த வேண்டும்.

30 நாட்களுக்குள் புகார் கட்டாயமா?
நீங்கள் வங்கியிடமிருந்து இந்த அபராதத் தொகையை பெற வேண்டும் என்றால், பரிவர்த்தனை தோல்வியடைந்த 30 நாட்களுக்குள் நீங்கள் புகார் அளித்திருக்க வேண்டும். ஏடிஎம் பரிவர்த்தனை சீட்டு அல்லது வங்கிக் கணக்கு அறிக்கையுடன் உங்கள் புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இது தவிர, உங்கள் ஏடிஎம் அட்டையின் விவரங்களை வங்கியின் ஊழியரிடம் நேரில் சென்று சொல்ல வேண்டும்.

இணைப்பு-5 படிவத்தை மறக்க வேண்டாம்
உங்கள் பணம் 7 நாட்களுக்குள் திருப்பித் தரப்படாவிட்டால், நீங்கள் இணைப்பு-5 படிவத்தை நிரப்பி வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும், இந்த படிவத்தை நீங்கள் சமர்ப்பித்த நாளிலிருந்து, தினமும் ரூ. 100 என்ற விதத்தில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அபராதத் தொகை தொடங்குகிறது, உங்களுடைய பணம் உங்களுக்குத் திருப்பக் கிடைக்கும் வரை இந்த அபராதம் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. அபராத தொகையும் உங்கள் வங்கி கணக்கில் வந்து சேரும்.

குறிப்பாக இதைச் செய்தால் மட்டுமே உங்களால் அபராதம் வசூலிக்க முடியும்
குறிப்பாக இதைச் செய்தால் மட்டுமே வங்கியிடமிருந்து உங்களால் அபராதத்தை வசூலிக்க முடியும். உங்களுடைய பரிவர்த்தனை தோல்வியடைந்த நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் நீங்கள் புகார் அளித்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே வங்கியிலிருந்து பணம் அல்லது அபராதம் வசூலிக்கும் உரிமை உங்களுக்கு வழங்கப்படும். பரிவர்த்தனை தோல்வியுற்று 30 நாட்களில் நீங்கள் புகார் அளிக்கவில்லை என்றால், அபராதத்தை வசூலிக்கும் உரிமை உங்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications