வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!
IRCTC பயணிகளுக்கான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் "Trainman App" செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காத்திருப்பு பட்டியலில் இருந்து டிக்கெட் (Train waiting list ticket) உறுதி செய்யப்படாவிட்டால், ஆப் இலவச விமான டிக்கெட்டுகளை (Free flight ticket) வழங்கும் என்று அறிவித்துள்ளது. உண்மையாகவா? ரயில் டிக்கெட் புக் செய்தால், மாற்றாக "ஃப்ரீ பிளைட் டிக்கெட்" தருவாங்களா? என்ன சொல்லுறீங்க நம்பவே முடியல.!

ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இனி ஃப்ரீ பிளைட் டிக்கெட்.!
ஆமாம், சரியாக தான் படித்தீர்கள்.! உங்களுடைய வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட் (Train ticket) உறுதி செய்யப்படவில்லை என்றால், ஃப்ரீயாக இனி பிளைட் டிக்கெட் (Flight ticket) வழங்கப்படுமாம். சரி, இது எப்படி வழங்கப்படும்? யாருக்கெல்லாம் வழங்கப்படும்? என்ன சூழ்நிலையில் வழங்கப்படும்? உண்மையாவே இலவசம் தானா? என்பது போன்ற விபரங்களை முழுமையாகப் பார்க்கலாம்.

ரயில் பயணிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்ன தெரியுமா?
காத்திருப்பு ரயில் டிக்கெட்டுகள் (Waitlist train tickets), எப்போதும் பயணிகளை கவலை அடைய செய்கிறது. இது பயணிகளின் பயணத்தை நிச்சயமற்றதாக ஆக்குகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான காத்திருப்பு ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டாலும், வார இறுதி நாட்களிலோ அல்லது பரபரப்பான பயணத் தேதிகளிலோ, பயணிகளுக்கு இருக்கைகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இறுதி நேரத்தில் உறுதியான டிக்கெட் வேண்டுமா? அப்போ இந்த மொபைல் ஆப்ஸை எப்போதும் மறக்காதீங்க.!
இதனால், கடைசி நிமிடத்தில் பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நிச்சயமற்ற நிலையில் இருந்து பயணிகளுக்கு உதவ, பிரைவேட் டிக்கெட் முன்பதிவு செயலியான - 'டிரெய்ன்மேன் ஆப்ஸ்' (Trainman App) - இதுவரை யாரும் அறிமுகம் செய்திடாத ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிரிப் அஷ்யூரன்ஸ் என்றால் என்ன? இது எப்படி வேலை செய்யும்?
இந்த புதிய அம்சத்தை நிறுவனம் 'டிரிப் அஷ்யூரன்ஸ்' (Trip assurance) என்று அழைக்கிறது. இதன் கீழ் நிறுவனம், இப்போது பயணிகளுக்கும், ரயில் பயணங்களுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால், பயணிகள் தங்கள் பயணத்தை முடிக்க உதவும் வகையில் நிறுவனம் இலவச விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யும் என்று கூறியுள்ளது.

உங்கள் டிக்கெட் உறுதியானதா? இல்லையா? உடனே செக் செய்யலாம்.!
டிரெய்ன்மேன் ஆப்ஸ் வெளியிட்டுள்ள இந்த புதிய 'டிரிப் அஷ்யூரன்ஸ்' அம்சமானது, ரயில் பயணிகள், காத்திருப்புப் பட்டியலில் டிக்கெட்டுகளுடன், அவர்களின் பயணத்தை முடிக்க உத்தரவாதமான வழியை உறுதி செய்கிறது. ட்ரெயின்மேன் ஆப்ஸ் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் அனைவரும், அந்த செயலியிலேயே தங்கள் டிக்கெட் நிலையைச் சரிபார்க்க முடியும்.

டிக்கெட் கிடைக்கும் தன்மையை தெளிவாக காண்பிக்கிறதா Trainman App?
பயணிகள் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டைப் பெறவில்லை என்றால், டிக்கெட் உறுதிசெய்யப்படுவதற்கான வாய்ப்புகளை ஆப்ஸ் காண்பிக்கும். இதற்காக ஆப்ஸ் கணிப்பு மீட்டர் என்ற டூல்ஸை கொண்டுள்ளது. இது சார்ட் தயாரிப்பதற்கு முன் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படவில்லை என்றால், டிரிப் அஷ்யூரன்ஸ் அம்சத்தை ஆக்டிவேட் செய்து, கடைசி நிமிடத்தில் பயணிகளுக்கான மாற்றுப் பயண விருப்பங்களைக் கண்டறிய உதவுகிறது.

ட்ரிப் அஷ்யூரன்ஸ் சேவைக்கு தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுகிறதா?
பயணிகளின் டிக்கெட் ஸ்டேட்டஸ் முன் கணிப்பு மீட்டரில் 90 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருந்தால், ஆப்ஸ் ட்ரிப் அஷ்யூரன்ஸ் கட்டணமாக ரூ. 1 வசூலிக்கும். 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், டிக்கெட்டின் வகுப்பைப் பொறுத்து நிறுவனம் 1 ரூபாய்க்கு மேல் கட்டணத்தை வசூலிக்கும்.

இந்த சூழ்நிலையில் தான் உங்களுக்கான இலவச விமான டிக்கெட் தரப்படும்.!
குறிப்பாக, சார்ட் தயாரிக்கும் நேரத்தில் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டால், உங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பயண உத்தரவாதக் கட்டணம் மீண்டும் திருப்பித் தரப்படும். இருப்பினும், டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால், பயணத்தை முடிக்க, பயணிகளுக்கு இலவச விமான டிக்கெட்டை டிரெயின்மேன் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trainman App இன் ட்ரிப் அஷ்யூரன்ஸ் சேவை எந்த ரயில்களுக்கு எல்லாம் கிடைக்கிறது?
தற்சமயம் அனைத்து ஐஆர்சிடிசி ராஜ்தானி ரயில்களிலும், சுமார் 130 ரயில்களிலும் Trainman App இன் ட்ரிப் அஷ்யூரன்ஸ் சேவை வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் படி, Trainman ஆப்ஸ் மெஷின் லேர்னிங் போன்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. IRCTC இன் அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளியாகவும் இந்த ஆப்ஸ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆப்ஸ் 94 சதவீத துல்லியத்துடன் செயல்படுகிறது.!
IRCTC பயணிகளுக்குத் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை வழங்குவதற்காக ட்ரிப் அஷ்யூரன்ஸ் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலிடப்பட்ட டிக்கெட்டுகளை உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளாக மாற்றுவதற்கு அவர்களின் ரயில் முன் கணிப்பு மாதிரி 94 சதவீத துல்லியத்துடன் செயல்படுகிறது என்றும் நிறுவனம் கூறுகிறது.

இலவச விமான டிக்கெட் வேண்டுமென்றால் இது 'கட்டாயம்'
ஆனால் டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால், நிறுவனம் இலவச விமான டிக்கெட்டை வழங்கும். இருப்பினும், 'டிரிப் அஷ்யூரன்ஸ்' வசதி விமான நிலையங்களைக் கொண்ட நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், இலவச ஃபிளைட் டிக்கெட் வேண்டும் என்றால், நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த நகரத்தில் 1 விமான நிலையமாவது இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications