5 வருடங்களாக தொலைபேசிக்காக காத்திருந்தோம்.. மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பம்.. சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி..
கூகுள் நிறுவனம் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதிகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை (google ceo Sundar Pichai) தனது பழைய நினைவுகளை ப்ளூம்பெர்க் உடனான நேர்காணலில் பகிர்ந்துள்ளார். மேலும் இது கூகுள் நிறுவனத்தைத் தான் நிர்வகிப்பதில் எந்த அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறித்தும் பேசியுள்ளார்.

தற்போது 51 வயதான சுந்தர் பிச்சை படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில் தான். அதாவது பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி மற்றும் அமெரிக்காவிலும் முடித்தார். பின்பு 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை.
மேலும் தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ என்ற பதவியைப் பெற்றார் இவர். குறிப்பாக சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

அதில் எனது அப்பாவும், அம்மாவும் கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அது தான் எனக்குள் ஆழமாக பிரதிபலித்தது. பின்பு இதற்கான தேடலை உணர்ந்தவனாக நான் இருந்தேன். குறிப்பாக நான் வளர்ந்தது மிடில் கிளாஸ் குடும்பத்தில் தான். அதேபோல் கேட்ஜெட்களில் வருகை எனது வாழ்வில் புரிதலை அளித்தது.
அதாவது எங்கள் வீட்டில் ஐந்து வருடங்களாக தொலைபேசிக்காக காத்திருந்தோம், அது ஒரு சுழலும் டயல் கொண்ட தொலைபேசி ஆகும். இந்த தொலைபேசி தான் எங்கள் வாழ்வில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதன்பின்பு எங்கள் வீட்டில் முதல் தொலைக்காட்சி வாங்கியது நன்றாக நினைவில் உள்ளது. இதன்மூலம் விளையாட்டுப் போட்டிகள் பார்க்க முடிந்தது.
நான் பள்ளிக்கு நீண்ட தூரம் சைக்கிள் பயணம் செய்வேன். ஆனால் அந்த சைக்கிளில் கியர் கிடையாது. கொஞ்சம் மேடாக இருக்கும் இடங்களில் பயணம் செய்வது கடினமாக இருக்கும். பின்பு சில காலங்களில் கியர் சைக்கிள் பெற்றேன். குறிப்பாக கியர் சைக்கிள் பெற்றதும் ஆஹா' என அந்த அனுபவத்தைத் தந்தது.
குறிப்பாக நான் இரண்டுக்குமான வேறுபாட்டை சொல்கிறேன். எப்போதுமே நான் தொழில்நுட்பத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டது கிடையாது. அது ஏற்படுத்தும் மாற்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று சுந்தர் பிச்சை கூறினார்.

அதேபோல் 2022-ம் ஆண்டில் சுந்தர் பிச்சைக்கு சம்பளம் ரூ.1869 கோடியாக இருந்தது. குறிப்பாக இது இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் சுமார் 400 சதவீதத்திற்கும் மேலும் உயர்ந்துள்ளது.
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கூகுள் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களைத் தொட்டுவரும் நிலையில் சுந்தர் பிச்சையும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவராக மாறி உள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பு ரூ.8,342 கோடி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








