சென்னையில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பிரபல நிறுவனம்.!!
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனது ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் முயற்சியில் மற்றொரு சீன நிறுவனம் களம் காண இருக்கின்றது. சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் படி ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் ஹூவாய் நிறுவனத்தின் புதிய கருவிகள் சென்னையில் தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

தயாரிப்பு
சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் தனது கருவிகளை இந்தியாவில் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கென ஹூவாய் நிறுவனம் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஃபிளெக்ஸ்டிரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

நிறுவனம்
உலகின் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் ஃபிளெக்ஸ்டிரானிக்ஸ் புதிய வகை ஹூவாய் கருவிகளை சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தயாரிப்பு ஆலையில் தயாரிக்க இருக்கின்றது.

கருவிகள்
ஏற்கனவே லெனோவோ மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களின் கருவிகளை ஃபிளெக்ஸ்டிரானிக்ஸ் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஹூவாய் நிறுவனத்திற்கு ஃபிளெக்ஸ்டிரானிக்ஸ் சார்பில் மாதம் ஒன்றிற்கு 200,000 கருவிகள் வீதம் தயாரிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

துவக்கம்
முதலில் மாதம் ஒன்றிற்கு 200,000 கருவிகள் என ஆரம்பித்து பின் இந்த எண்ணிக்கையை ஹூவாய் நிறுவனம் அதிகரிக்கும் என்றும் முதற்கட்டமாக ஹூவாய் 5சி அல்லது ஹூவாய் பி9 போன்ற கருவிகள் தயாரிக்கப்படலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் காலடி வைத்த முதல் சீன நிறுவனமாக ஹூவாய் இருக்கின்றது. 1999 ஆம் ஆண்டு முதல் ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் தனது கருவிகளை வியாபாரம் செய்து வருகின்றது. ஹூவாய் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தினை ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் 1999 ஆம் ஆண்டு துவங்கி விட்டது.

மையம்
கடந்த மாதம் ஹூவாய் நிறுவனம் சர்வதேச சேவை மையத்தினை பெங்களூருவில் திறந்தது. இந்தச் சேவை மையத்தில் சுமார் 1000 பொறியாளர்கள், நெட்வர்க் பிரிவு வல்லுநர்கள் மற்றும் இதர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தயாரிப்பு மையம்
ஸ்மார்ட்போன் தயாரிப்பு மையத்தைத் துவங்கும் திட்டம் பழையது என்றாலும் சில மாதங்களாகவே இதற்கான பணிகளை ஹூவாய் நிறுவனம் துவங்கியது. தயாரிப்பு மையம் சார்ந்த பணிகள் நடைபெற்று வருகின்றது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அந்நிறுவனத்தின் வியாபார பிரிவு அதிகாரி பீட்டர் ஷாய் தெரிவித்திருந்தார்.

திறன்
ஃபிளெக்ஸ்டிரானிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையில் மாதம் ஒன்றிற்கு சுமார் 1.3 மில்லியன் கருவிகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது என்றும் ஆண்டிற்கு லெனோவோ நிறுவனத்திற்கு மொத்தம் 6 மில்லியன் கருவிகளை ஃபிளெக்ஸ்டிரானிக்ஸ் தயாரித்து வழங்குவதாகச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரான்டு
இந்தியாவில் ஹூவாய் மற்றும் ஹானர் பிரான்டு மூலம் கருவிகளை விற்பனை செய்து வரும் ஹூவாய் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று வருகின்றது. இத்துடன் இந்தியா முழுக்க சுமார் 50,000 விற்பனை மையங்களைத் துவங்கவும் ஹூவாய் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications