Smartphone பயனர்களே உஷார்: இதை செய்தால் உங்கள் பாதுகாப்பு, உங்கள் கையில்!
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கை பலகட்டம் முன்னோக்கி இருக்கிறது. இதன்மூலம் பிரதான வளர்ச்சி அடைந்து இருப்பது ஸ்மார்ட்போன்கள் தான். ஸ்மார்ட்போன்களின் பயனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புகைப்படத்தில் தொடங்கி வங்கிக் கணக்கு, முக்கிய ஆவணங்கள் என அனைத்துத் தகவலும் ஸ்மார்ட்போன்களில் இருக்கிறது.

அங்கமாக வகிக்கும் ஸ்மார்ட்போன்
உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என கூறுவார்கள். ஆனால் தற்போது அதெல்லாம் தேவையில்லை உன் மொபைலை 1 மணிநேரம் கொடு உன்னை பற்றி சொல்லுகிறேன் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் ஒருவரின் அங்கமாகவே இருக்கிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களின் வளர்ச்சி
அதேபோல் முன்பெல்லாம் கையில் பணம் இருந்தால் செலவாகிவிடும் என்று வங்கியில் போட்டு வைப்போம், ஆனால் இப்போதெல்லாம் வங்கியில் பணம் இருந்தால் தான் செலவாகிறது. காரணம், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களின் வளர்ச்சி.

ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை
Statista புள்ளி விவரத்தின் படி, உலகளவில் அதிகம் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதாவது இந்தியாவில் 492.78 மில்லியன் பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள்.
அரசு ஆவணங்கள் பெறுவது, அதில் திருத்தம் செய்வது, வங்கிப் பரிவர்த்தனை என அனைத்து தேவையையும் பூர்த்தி செய்ய ஓடிபி எண் கட்டாயம். அதுவும் உங்கள் மொபைலுக்கு தான் அனுப்பப்படும்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மொபைலை பாதுகாப்பாக கையாளுவது ஒவ்வொருவரின் கடமை என்றே கூறலாம்.

1. உங்கள் மொபைலுக்கு செக்யூரிட்டி லாக் என்பது மிக அவசியம்
பேட்டர்ன் லாக், நம்பர் லாக், ஃபேஸ் லாக் என ஏதாவது ஒரு பயன்பாட்டை இயக்கி வைத்துக் கொள்வது சிறந்தது. மிகவும் பொதுவான கடவுச்சொல்லாக இல்லாமல், சற்று கடினமான எண் அல்லது பேட்டர்ன்னை கடவுச்சொல்லாக பயன்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
2. ப்ளூடூத், வைஃபை ஹாட்ஸ்பாட்டை செக் செய்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தாத சமயத்தில் ப்ளூடூத், வைஃபை ஹாட்ஸ்பாட்களை ஆஃப் செய்து கொள்ளுங்கள். ப்ளூடூத் மூலம் தகவலை திருடுவது என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. எளிதாக தங்கள் தரவுகளை மற்றொரு சாதனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.

3. கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆஃப் ஸ்டோரில் கிடைக்கும் Anti-Virus சாஃப்ட்வேர்ரை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இதை அவ்வப்போது இயக்கி தங்கள் மொபைலை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்.
4. மொபைல் வெப்பத்தை சோதிக்கவும்
மொபைல் பயன்படுத்தாத நேரத்தில் சூடாகிறது என்றால், ஏதோ ஒரு பயன்பாடு பேக் ரவுண்டில் ரன் ஆகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதை செக் செய்து கொள்ளுங்கள். அதேபோல் உடனடியாக ஒருமுறை உங்கள் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்யவும்.

5. IMEI எண்ணை நோட் செய்து கொள்ளவும்
மொபைல் டயல்பேட்டில் *#06# என டைப் செய்து உங்கள் ஐஎம்இஐ எண்ணை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் தொலைந்து போகும் பட்சத்தில், காவல்துறையிடம் புகார் அளிக்க இதுதான் பேருதவியாக இருக்கும்.
6. மொபைலை தேவையில்லாமல் யாரிடமும் கொடுக்க வேண்டாம்.
முகமறியாத நபர்களிடம் மொபைல் போனை எந்த சூழலிலும் வழங்க வேண்டும். இது உங்களின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவிக்கலாம்.

7. உடனடியாக புகார் அளிக்கவும்
உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டது என்றால் சற்று வருத்தத்துடன் புது போன் வாங்குவதை நோக்கியே கவனம் செல்லும். ஆனால் அதற்கு முன்பாக காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும் என்பது மிக அவசியம். காரணம், மொபைல் எந்த நோக்கத்தோடு திருடப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது.
8. சைபர் தாக்குதலில் கவனம் தேவை
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்டாலோ, தேவையில்லாத நபர்களிடம் மெசேஜ் அல்லது மிரட்டல் வந்தாலோ. உடனடியாக சைபர் பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கவும்.

9. எந்த லிங்க்கையும் தொட வேண்டும்
அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில் இருந்து வருவது போன்று மெசேஜ் வந்தாலோ, அறியாத எண்ணில் இருந்து மெசேஜ் வந்தாலோ அந்த மெசேஜில் இருக்கும் லிங்க்கை எந்த சூழலிலும் கிளிக் செய்ய வேண்டாம். நேரடியாக வங்கிக்கு சென்று தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
10. டேட்டா சேமிப்பில் கவனம் தேவை
அதிகாரப்பூர்வ ஆப்ஸ்-ஐ மட்டுமே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அதேபோல் மொபைலில் எந்த டேட்டாவை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டுமோ அதை மட்டும் சேமித்துக் கொள்ளுங்கள். ஹேக்கர்களின் குறி பெரும்புள்ளிகள் மட்டும் தான் என்று சுட்டிக்காட்டி விட முடியாது. யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். கவனமாக செயல்படுவது மிக அவசியம்.


Click it and Unblock the Notifications