கடைசி தேதி இதுதான்! பான் ஆதார் இணைப்பு செக் செய்வது எப்படி? விளைவு என்ன?
பான் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இறுதியாக மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. இவை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி செக் செய்வது, இணைக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
பான் ஆதார் எண் இணைக்க கடைசி நாள்
இத்தனை நாட்களாக பான் ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டித்து வழங்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் ஆதார் இணைக்க வேண்டும் எனவும் அப்படி இணைக்கவில்லை என்றால் அவர்களின் பான் அட்டை செயலற்றதாகிவிடும் என அரசு தெளிவுப்படுத்தி இருக்கிறது. அதேபோல் தற்போதுமுதல் மார்ச் 31 ஆம் தேதி வரை பான் ஆதார் இணைப்பை மேற்கொள்ளவில்லை என்றால் இதற்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 கோடி பேர் இணைத்துள்ளனர்
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா இதுகுறித்து பிடிஐ இடம் தெரிவித்த தகவலின்படி, 61 கோடி பேருக்கு பான் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இதில் 48 கோடி பேர் மட்டுமே பான் ஆதார் இணைப்பை மேற்கொண்டு இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். மீதமுள்ள அனைவரும் இறுதி நாளுக்குள் பான் ஆதார் இணைப்பை மேற்கொள்வார்கள் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைக்காவிட்டால் என்ன நடக்கும்?
மேலும் அப்படி செய்யாத பட்சத்தில் பான் அட்டை செயலற்றதாகிவிடும் என்றும் அப்படி செயலற்றதாகிவிட்டால் வருமான வரிச் சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செயலற்ற பான் கார்ட் மூலம் வரித் தாக்கல் செய்ய முடியாது, நிலுவையில் உள்ள வருமான வரிக்கான ரீஃபண்ட் தொகையும் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் ஆதார் தேவைப்படும் பிற பயன்பாடுகளிலும் மக்கள் சிக்கலை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது
பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி?
உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், அவற்றை எஸ்எம்எஸ் அல்லது ஆன்லைன் மூலமாக இணைக்கலாம். எஸ்எம்எஸ் மூலம் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பவும்.
வருமான வரி இணையதளத்திற்குச் சென்று தாமதக் கட்டணமாக ரூ.1000 செலுத்துவதன் மூலம் ஆன்லைனில் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலாம்.

உங்கள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க வழிமுறைகள்
இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். (incometaxindiaefiling.gov.in)
உங்கள் யூஸர் ஐடி, பாஸ்வேர்ட் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். உள்நுழைவதற்கான பயனரின் ஐடியை பதிவிட வேண்டும். இது உங்கள் PAN ஐடி ஆகும்.
தொடர்ந்து பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பாப்-அப் தேர்வு ஒன்று தோன்றும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.
இதில் காட்டப்படும் மெனு பயன்பாட்டை ஓபன் செய்து Profile Settings என்பதற்குள் உள்நுழைய வேண்டும். இதன் முகப்புப் பக்கத்தில் உள்ள Link Aadhaar என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
தொடர்ந்து உங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் பான் எண், ஆதார் எண் மற்றும் உங்கள் பெயரை உள்ளிடவும்.
தொடர்ந்து அதில் காட்டப்படும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவேண்டும்.
பின் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்திருக்கும் பட்சத்தில் உங்கள் இணைப்பு வெற்றிகரமாக நிறைவடையும்.
இந்த செயல்முறைக்கு பிறகு உங்கள் ஆதார் எண் பான் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக ஒரு பாப்-அப் செய்தி காண்பிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








