இரண்டு வருடங்களாக வங்கி கணக்கை பயன்படுத்தவில்லையா? SBI கொடுக்கும் இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்!
எஸ்பிஐ என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கி ஆனது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து புதிய சேவைகள் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது எஸ்பிஐ வங்கி ஆனது செயலிழந்த வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்படுத்தவும், வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும் நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளைச் செயலில் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தான் இந்த முயற்சியைத் தொடங்கி உள்ளது எஸ்பிஐ வங்கி.

அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் சேமிப்பு அல்லது நடப்பு கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால், அந்தக் கணக்கு செயலற்றதாக அறிவிக்கப்படும் என்று எஸ்பிஐ (SBI) தெரிவித்துள்ளது. குறிப்பாக எஸ்பிஐ கணக்கு மட்டும் செயலிழந்தால் ஏடிஎம் பரிவர்த்தனைகள் (ATM transactions), செக் டெபாசிட் (cheque deposit), புதிய டெபிட் கார்டு (new debit card) பெறுவதற்கான விண்ணப்பம் போன்ற செயல்களை மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை உங்கள் வங்கிக் கணக்கு செயலற்றதாக இருந்தால் அதுகுறித்து உங்களுக்குத் தகவல் வரும் என்பதை கவனத்தில் கொள்க. அதாவது கடந்த ஜனவரி 1-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி, வங்கிகளில் செயல்படாத வங்கி கணக்குகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஈமெயில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். சரி இப்போது செயல்படாத எஸ்பிஐ வங்கி கணக்குகளை எப்படி செயல்படுத்துவது என்பதை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
வழிமுறை-1 முதலில் செயல்படாத வங்கி கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சி ஆவணங்களுடன் (KYC documents) அருகில் இருக்கும் எஸ்பிஐ வங்கிக்கு செல்ல வேண்டும். அங்கு கேஒய்சி உடன் கணக்கைச் செயல்படுத்துவதற்கான கோரிக்கையை வாடிக்கையாளர்கள் தெரிவிக்க வேண்டும்.
வழிமுறை-2: அதன்பின்பு வாடிக்கையாளர் கொடுத்த கேஒய்சி ஆவணங்களின் அடிப்படையில் வங்கி கிளை கணக்கை செயல்படுத்தும். பின்பு கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டதும் வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் அல்லது மெயில் மூலம் தெரியப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதவும் நீங்கள் கோரிக்கை வைத்த மூன்று நாட்களுக்குள் கணக்கு ஆக்டிவேட் ஆகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக எஸ்பிஐ வங்கி பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது சமீபத்தில் பிஐபி (PIB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ (Press Information Bureau) வெளியிட்ட தகவலின்படி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய மோசடியை மோசடிக்காரர்கள் அரங்கேற்றி வருவதாகக் கூறப்பட்டது.

இந்த புதிய மோசடி, எஸ்பிஐ வெகுமதிகளை (ரிவார்டு பாயிண்ட்ஸ்) வழங்குவதாகக் கூறி, வஞ்சகமான செய்திகளை அனுப்பி, பயனர்களை போலியான இணைப்புகள் (லிங்க்) அல்லது போலி ஆப் பயன்பாட்டை பதிவிறக்கச் செய்ய வற்புறுத்துகிறார்கள். குறிப்பாக இந்த போலி தளங்களை அசல் தளம் என நம்பி பல SBI வாடிக்கையாளர்கள் அறியாமல் அதிகமாக மோசடி வலையில் சிக்கி பாதிக்கப்படுகிறார்கள். SBI ரிவார்டுகளை வழங்குவதாகக் கூறும், போலி இணைப்புகளைக் கிளிக் செய்தால் பயனர்களின் தரவுடன் பணமும் சேர்த்துத் திருடப்படுகிறது.
எனவே Google Play Store அல்லது Apple App Store போன்ற நம்பகமான தளங்களிலிருந்து மட்டுமே எஸ்.பி.ஐ. தொடர்பான பயன்பாடுகளை நிறுவ வேண்டும் என்று SBI வங்கியும், அரசாங்கமும் எச்சரித்துள்ளது. குறிப்பாக அதிகாரப்பூர்வமான SBI ரிவார்டுகளை பெற, வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ எஸ்பிஐ ரீவார்ட்ஸ் வலைத்தளத்தில் (https://www.rewardz.sbi/) பயன்படுத்த வேண்டும் அல்லது 1800-209-8500 என்ற எண்ணில் சரிபார்க்கப்பட்ட எஸ்.பி.ஐ. ரீவார்ட்ஸ் வாடிக்கையாளர் சேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








