BSNL 4G ரோல்-அவுட்.. வேற மாதிரி சம்பவமா இருக்கும்.. Jio, Airtel போல இல்ல.. TRAI அதிகாரி சொன்ன சூப்பர் அப்டேட்!
டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை (Telecom Regulatory Authority of India) சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) அறிமுகமானது நாட்டில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவரும் என்கிற விவரங்களை பகிர்ந்துள்ளார்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் 4G நெட்வொர்க் ஆனது நாடு முழுவதும் 1 லட்சம் தளங்களில் வெளியிடப்படும் என்றும் இதன் மூலம் உள்நாட்டு தொழில்நுட்பங்களின் பெருக்கத்திற்கான ஒரு சூழல் உருவாகும் என்றும் டிராய்-ஐ சேர்ந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார். மேலும் அவர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தலைமையிலான கூட்டமைப்பால் பயன்படுத்தப்படும் உள்நாட்டு ஸ்டாக் ஆனது, ஒரு மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

"பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் உள்கட்டமைப்பை 4ஜிக்கு மேம்படுத்தும் அதே வேளையில், உள்நாட்டு தொழில்நுட்பத்தை (indigenous technology) பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்திய தொழில்துறையுடன் பிஎஸ்என்எல் நிறுவனம் நிறைய வேலைகளை செய்துள்ளது. அதெல்லாம் வெற்றியின் விளிம்பில் உள்ளன என்று நான் நம்புகிறேன்"
"(விரைவில்) நாடு முழுவதும் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் வெற்றிகரமாக வெளியிடப்படுவதை நாம் காண்போம். இதன்கீழ் கிட்டத்தட்ட 1 லட்சம் தளங்கள் உள்ளடக்கப்படும். இது உள்நாட்டு தொழில்நுட்பத்தின் முழு சூழலையும் உருவாக்கும்" என்று டிராய்-யின் தலைவர் ஆன அனில் குமாரி லஹோட்டி, கடந்த வாரம் ஒரு தொழில்துறை மாநாட்டில் கூறியுள்ளார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான உள்நாட்டு 5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் ஏற்கனவே நடந்து வருவதாகவும் லஹோட்டி கூறினார். இதற்கு முன்பாக டாட் (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்புத் துறையை (Department of Telecommunications) சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி இனிஷியல் லான்ச் ஃபேஸிற்கு கிடைத்துள்ள வெற்றி மற்றும் அதன் வழியிலான 5ஜி அறிமுகம் குறித்த விவரங்களை பகிர்ந்து இருந்தார்.
அவருடைய கூற்றின்படி பிஎஸ்என்எல்-ன் 4ஜி இனிஷியல் லான்ச் ஃபேஸின் (BSNL 4G Initial Launch Phase) கீழ், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய வட இந்தியப் பகுதிகள் முழுவதும், பிஎஸ்என்எல் 4ஜி சேவையின் கீழ் 800,000 சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். அதாவது டிசிஎஸ் மற்றும் டெலிமேட்டிக்ஸ் டெவலப்மெண்ட் மையம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கை தற்போது 8 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.
பிஎஸ்என்எல் 4ஜி-க்கு கிடைத்துள்ள வரவேற்ப்பானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி அறிமுகத்தை துரிதப்படுத்தும் என்றும் டாட்-ஐ சேர்ந்த மூத்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருடைய கூற்றுப்படி 2024 ஆகஸ்ட் மாதத்திற்குள் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் 4ஜி நெட்வொர்க்கின் மையப்பகுதி நிறுவப்படும். அதை தொடர்ந்து அடுத்த 12 மாதங்களுக்குள் பிஎஸ்என்எல் 5ஜி சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும்.
ஆனால் உண்மை என்னவென்றால் 12 மாதங்கள் என்பதே தாமதம் தான். ஏனென்றால் டாட் அதிகாரிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகமாகி விடும் என்று நம்பினர். ஆனால் தற்போது இது அடுத்த ஆண்டு இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரையிலாக பிஎஸ்என்எல் நிறுவனமானது 3,500-க்கும் மேற்பட்ட 4ஜி டவர்களை நிறுவியுள்ளது. இந்த எண்ணிக்கை 20,000 டவர்களை எட்டியவுடன்தான் இந்தியா முழுவதுமான 4ஜி அறிமுகமே நடக்கலாம்; 5ஜி அறிமுகம் இன்னும் தள்ளிப்போகலாம்.
இதற்கு நேர்மாறாக முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது அதன் 5ஜி நெட்வொர்க் விரிவாக்கத்தை ஒரு வருடத்தில் "கிட்டத்தட்ட" முடித்துவிட்டது. போதாக்குறைக்கு ஏர்டெல் நிறுவனம் ஆனது கூடிய விரைவில் ரீசார்ஜ் விலை உயர்வையும் அறிவிக்கவுள்ளது. இருப்பினும் ஜியோ நிறுவனத்திற்கு அதுபோன்ற யோசனை இப்போதைக்கு இல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








