கரும்பலகையில் கணிப்பொறிக் கல்வி: பள்ளி ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுக்களும் உதவிகளும்.!
முகநூல் பதிவினைப் பார்த்தவுடன் முதலில் நீண்ட உதவிக்கரம், சௌதி அரேபியாவைச் சேர்ந்த அமைரா அல்ஹர்த்தி என்பவருடையது.
ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று கானா. இதன் தலைநகரம் அக்ரா. வீணா இப்போ எதுக்கு இந்தக் கதையலெ்லாம்னு கேட்கறீங்களா..? தேனா இனிக்கும் ஒரு செய்தி இருக்கு… கேளுங்க! பள்ளி மாணவர்களின் மீது அக்கரையும் கல்விப் பணியில் அா்ப்பணிப்பு உணர்வும் கொண்ட ஓர் ஆசிரியரின் முகநூல் பதிவும் அதைத் தொடர்ந்த செய்திகளும் அறிவின் தாகத்தையும் அதற்கு ஆதரவாக நீளும் மனித நேய உதவிகளின் வேகத்தையும் உணர்த்தி நிற்கின்றன.

பள்ளிக்கூட ஆசிரியரின் அா்ப்பணிப்பு உணர்வு
கானா நாட்டின் செக்யிடோமேஸ் (Sekyedomase ) என்னும் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி இளம் உயர்நிலைப் பள்ளி (Betenase Municipal Assembly Junior High School) ஒன்றில் தகவல் தொழில் நுட்ப அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர், ரிச்சா்ட் அப்பியா அகோடோ. இவர், தன்னுடைய வகுப்பில் உள்ள மாணவர்களுக்குக் கணிப் பொறித் திரையில் தோன்றும் மைக்ரோசாஃப்ட் வேர்டு முகப்புப் பகுதியை அப்படியே கரும்பலகையில் வரைந்து அதனை விளக்கிப் பாடம் நடத்தும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தார். கணிப்பொறி ஆய்வகத்தில் கணிப்பொறித் திரை வழியாகச் செயல் விளக்கம் கொடுப்பதற்கு ஆய்வக வசதியோ அல்லது கணிப்பொறிகளோ இல்லாத காரணத்தினால் கரும்பலகையில் அனைத்தையும் மிகுந்த முயற்சியுடன் வரைந்து அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் காட்சி, முகநூல் பதிவினைப் பார்த்த இலட்சக்கணக்கான இதயங்களை இதமாய்த் தொட்டது. அந்தக் காட்சி வெறும் லைக்குகளை மட்டும் அள்ளிக் குவிக்கவில்லை. உலகம் முழுவதுமிருந்து பலரால் லேப்டாப், டெஸ்க் டாப் கணிப்பொறிகள் என அப்பள்ளிக்கான உதவிகளையும் குவித்துக் கொண்டிருக்கிறது.

முதல் உதவி சவூதி அரேபியா மாணவரிடமிருந்து
முகநூல் பதிவினைப் பார்த்தவுடன் முதலில் நீண்ட உதவிக்கரம், சௌதி அரேபியாவைச் சேர்ந்த அமைரா அல்ஹர்த்தி என்பவருடையது. இவர் இலண்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். "உங்களுடைய மாணவர்களுக்கு என்னுடைய சிறிய பரிசு" என்னும் செய்தியுடன் ஒரு மடிக்கணினியை ஆசிரியர் ரிச்சர்ட் அகோடோவுக்கு அனுப்பியிருந்தார். "அறிவு ஒன்றுதான் தனிமனித வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் துணையாய் நிற்கும் என இஸ்லாம் போதிக்கிறது. வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத காரணத்தினால் எத்தனை பேருடைய அறிவு வளர்ச்சி முளையிலேயே கருகிப் போகிறது என யோசித்ததன் விளைவுதான் என்னுடைய இந்தச் சிறிய உதவி" என்கிறார், அமைரா அல்ஹர்த்தி.

NIIT நிறுவனத்தின் உதவி
இப்பள்ளிக் கூடத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்பப் பயிற்சி நிறுவனமான NIIT நிறுவனமும் உதவ முன்வந்திருக்கிறது. மாணவர்களுக்காகச் சில மேசைக் கணினி மற்றும் புத்தகங்களையும், ஆசிரியர் ரிச்சர்ட் அகோடோவுக்கென தனியான ஒரு மடிக்கணினியையும் வழங்கியிருக்கிறது கானாவில் செயல்படும் NIIT-யின் கிளை நிறுவனம்.

சமூகக் கடமை
"முகநூலில் வேகமாகப் பரவிய வகுப்பறைக் காட்சியை நாங்களும் பார்த்தோம். அந்த ஆசிரியரின் அா்ப்பணிப்பு உணர்வு எங்களுடைய இதயத்தைத் தொட்டது. ஒரு பயிற்சி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்கள், இது போன்ற பள்ளிகளுக்கு உதவுவதைச் சமூகக் கடமையாகக் கருதுகிறோம்" என்கிறார், கானாவின் தலைநகர் அக்ராவிலிருந்து செயல்படும் NIIT மையத்தின் மேலாளர், ஆசிஸ் குமார். முகநூல் பதிவினைப் பிரின்ட் எடுத்து எங்கள் நிறுவனத்தின் அறிவிப்புப் பலகையில் ஓட்டினோம். எங்கள் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி கபில் குப்தாவுடன் விவாதித்தோம். பிறகு அப்பள்ளிக்குத் தேவையான மேசைக் கணினிகள், புத்தகங்கள் மற்றும் ஆசிரியருக்கு மடிக்கணினி போன்ற உதவிகளைச் செய்தோம். " என்கின்றனர் NIIT நிறுவனத்தினர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பெரும் உதவி
முகநூல் பதிவின் மூலம் பெயர்ப்பெற்ற ஆசிரியர் அகோடோ சிங்கப்பூரில் நடைபெற்ற, மைக்ரோசாஃப்ட் கல்வியாளர்கள் பரிமாற்ற ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்றார். கானாவில் உள்ள பள்ளிக் கூடத்திற்குத் தேவையான கணிப்பொறி ஆய்வக வசதியை ஏற்படுத்தித் தர மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்வந்திருக்கிறது. இது தொடர்பாக கானாவின் கல்வி அமைச்சகத்திடம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேச்சு நடத்தியுள்ளது.

நல்லது நடந்தால் சரி
"என்னுடைய முகநூல் பதிவினால் மிக நல்ல விசயங்கள் நடந்துள்ளன. இதனால், எங்களுடைய மாணவர்களுக்கு கணிப்பொறித் திரையைக் கரும்பலகையில் பார்க்காமல் நேரடியாகப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என்கிறார் தன்னுடைய அா்ப்பணிப்பு உணர்வினால் மாணவர்களுக்கு நலன் சேர்த்த பள்ளி ஆசிரியர், ரிச்சா்ட் அப்பியா அகோடோ.


Click it and Unblock the Notifications