HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. முக்கியமான கட்டணம் மே 1 முதல் குறையும்.. இதோ முழு விவரம்..
எச்டிஎப்சி (HDFC) வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகி உள்ளது. அதாவது வரும் மே 1, 2026 முதல் இன்ஸ்டா அலர்ட் எஸ்எம்எஸ் கட்டணங்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளது எச்டிஎப்சி வங்கி. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது வழக்கமாக வங்கி பரிவர்த்தனைகள் நடக்கும்போது, பாதுகாப்பு கருதி நமது மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும். தற்போது ஒரு குறுஞ்செய்திக்கு 20 காசுகள் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால் விரைவில் வரும் புதிய மாற்றத்தின்படி இது 15 காசுகள் மற்றும் ஜிஎஸ்டி ஆகக் குறைக்கப்படும்.

ஒரு உதாரணமாக நீங்கள் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் அலர்ட்களைப் பெறுகிறீர்கள் என்றால், இதுவரை நீங்கள் 20 ரூபாய் (கூடுதல் ஜிஎஸ்டி) செலுத்தி வந்திருப்பீர்கள். ஆனால் இனி வரும் காலங்களில் அது 15 ரூபாயாகக் குறையும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் உங்களால் ஒரு சிறிய அளவிலான தொகையைச் சேமிக்க முடியும்.
ஆனால் மின்னஞ்சல் (Email) வழியாகப் பெறப்படும் அலர்ட்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் இலவசமாகவே இருக்கும் என்று வங்கி நிர்வாக தெளிவுபடுத்தியுள்ளது.
எஸ்எம்எஸ் வசதியை மாற்றியமைக்கவோ அல்லது ரத்து செய்வது எப்படி?
உங்களுக்கான தேவையைப் பொறுத்து இந்த எஸ்எம்எஸ் வசதியை நீங்கள் மாற்றியமைக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியும். குறிப்பாக இதற்கு நீங்கள் வங்கியின் நெட் பேங்கிங் அல்லது மொபைல் ஆப் வசதியைப் பயன்படுத்த வேண்டும்.
நெட் பேங்கிங்
உங்களது வங்கி கணக்கில் லாகின் செய்து வலதுபுறம் உள்ள My Profile பகுதிக்குச் செல்லவும். அடுத்து Insta Alerts என்பதைத் தேர்வு செய்து உங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.
மொபைல் ஆப்
உங்கள் மொபைல் ஆப் வசதியில் லாகின் செய்து மெனுவில் உள்ள My Profile பகுதிக்குச் செல்லவும். அடுத்து Preferences என்பதைத் தேர்வு செய்யவும். அதன்பின்னர் Insta Alerts என்பதைத் தேர்வு செய்து தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் வங்கி பரிவர்த்தனைகளை எஸ்எம்எஸ் மூலம் உடுக்குடன் தெரிந்துகொள்வது மோசடிகளைத் தவிர்க்க உதவும் என்பதால் இந்த இன்ஸ்டா அலர்ட் சேவை மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த கட்டணக்குறைப்புடன் கூடிய இந்த மாற்றம் வரும் மே மாதம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஏடிஎம் மையங்களில் யுபிஐ (UPI) சேவை மூலம் பணம் எடுக்கும் வசதியான யுபிஐ ஏடிஎம் வித்ட்ராவல்கள் (UPI ATM Withdrawals) விரைவில் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பிற்குள் (Monthly free transaction cap) சேர்க்கப்படும் என்று எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் இலவச வரம்பை மீறினால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் வசூலிக்கப்படும்.
அதாவது ஏடிஎம் மையங்களில் UPI மூலம் பணம் எடுப்பது தனிப்பட்ட முறையில் இலவசமாக இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்காது என அறிவித்துள்ளது HDFC வங்கி . இதுவும் DEPIT கார்டு மூலம் பணம் எடுப்பதைப் போன்றே கணக்கில் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஆக இனி உங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகள் முடிவடையும் பட்சத்தில் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம். குறிப்பாக இந்த விதி வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும்.


Click it and Unblock the Notifications








