வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமேசான், பிளிப்கார்ட், பதஞ்சலி உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. அதில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்கள், அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் இதை மேற்கொள்ள தவறியதாகக் கூறி அமேசான், பிளிப்கார்ட், பதஞ்சலி உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

பிளிப்கார்ட் புதிய முயற்சி...
இந்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் அதன் ஆபத்து குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

முதற்கட்ட நடவடிக்கையை அறிவித்த பிளிப்கார்ட்
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக மும்பை, பெங்களூர், டெஹ்ராடூன், கொல்கத்தா, டெல்லி, புனே, அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் மட்டும் நுகர்வோர்களிடமிருந்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை...
மேலும் அப்படி பெறப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த உள்ளதாகவும், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை பல்வேறு வகைகள் பல்வேறு விதத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைக்கும் என்பதால் இந்த முடிவை துணிச்சலாக எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

வீடு வீடாக சென்று சேகரிக்கத் திட்டம்...
ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் பொருட்களை விருப்பமுள்ளவர்களிடம் இருந்து வீடு வீடாக சென்று சேகரிக்கவுள்ளதாக பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிறுவன விவகார அலுவலர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

முயற்சிக்கு ஆதரவு தரக் கோரிய பிளிப்கார்ட்
வாடிக்கையாளர்கள் தாமே முன்வந்து பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்குமாறும், இந்த முயற்சிக்கு கைக்கொடுக்குமாறும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கு மீண்டும் அனுப்பப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட் திட்டத்துக்கு அமோக வரவேற்பு
ஒவ்வொரு நாட்டிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் பணம் வழங்குதல், அரிசி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் நல்லவரவேற்பு கிடைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications