சமூக ஊடகங்களில் பரவிய பென்சன் உயர்வு செய்தி.. உண்மையை வெளிப்படுத்திய EPFO.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துள்ள தற்போதைய காலத்தில், சில தவறான மற்றும் பொய்யான தகவல்கள் மிக வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக ஓய்வூதியதாரர்கள் மற்றும் பொதுமக்கள் இத்தகைய போலி செய்திகளால் எளிதில் குழப்பமடைகின்றனர். அந்தவகையில் சமீபத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்பாக ஒரு தவறான தகவல் பரவலாகப் பேசப்படுகிறது.
அதில், EPS-95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறும் ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் கடிதம் தான் தற்போது ஓய்வூதியதாரர்களிடையே மகிழ்ச்சி மற்றும் குழப்பம் கலந்த ஒரு சூழலை உருவாக்கியது.

ஆனாலும் EPFO அமைப்பு தற்போது இந்த முழு விவகாரம் குறித்த உண்மையை வெளிப்படுத்தி, ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச EPS ஓய்வூதிய உயர்வு குறித்து பரவி வரும் இந்தக் கடிதம் முற்றிலும் போலியானது என்று EPFO தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது சமூக ஊடகங்களில் பரவி வரும் கடிதம் ஒரு உண்மையான அரசு ஆவணம் போல் தோன்றுகிறது. அந்த கடிதத்தில் இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதன் முகவரியாக புது தில்லி, ரஃபி மார்க், ஷ்ர்ம் சக்தி பவன் என்று உள்ளது. மேலும் அந்த கடிதத்தில் பொருள் வரியில் EPS-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுவும் 1995-ம் ஆண்டின் EPS-95 திட்டத்தின் கீழ் ஏற்கனவே பலன்களைப் பெற்றுவரும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என அந்த போலி கடிதம் கூறுகிறது. அந்தக் கடிதத்தில் திருத்தப்பட்ட குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம், 2026 ஏப்ரல் 30 முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில், மாதத்திற்கு 7,500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையின் விநியோகம், தகுதியுள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் 2026 மே 1 முதல் தொடங்கும் என்றும் அந்தப் போலிக் கடிதம் கூறுகிறது. குறிப்பாக இந்த போலி கடிதத்தை உண்மையானது போன்று தோற்றமளிக்கச் செய்ய, மோசடிக்காரர்கள் பல்வேறு தந்திரங்களைக் கையாண்டுள்ளனர். அதாவது கடிதத்தின் கீழ் இடது மூலையில், இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் முத்திரை ஒட்டப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த போலி கடிதம் வைரலாகி மக்கள் இது குறித்த விசாரிக்க தொடங்கியபோது, EPFO அமைப்பு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. அதன்பின்னர் EPFO தனது அதிகாரப்பூர்வ தளங்களில் அந்தக் கடிதத்தின் புகைப்படத்தை வெளியிட்டு அது போலி (fake)என்று குறிப்பிட்டுள்ளது. அரசு இது போன்ற அறிவிப்பை வெளியிடப்படவில்லை என்று நாடு முழுவதும் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் EPFO தெளிவாகத் தெரிவித்துள்ளது.
EPS-95 ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆதரிக்கும் வகையில் பரவி வரும் கடிதமும் போலியானது என்று தொழிலாளர் அமைச்சகமும் EPFO அமைப்பும் தெளிவுபடுத்தியுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக ஓய்வூதியதாரர்கள், இத்தகைய உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி குழப்பமடைய வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications