இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோரில் 40 சதிவிகிதம் பேர் பெண்கள்: ஆய்வில் தகவல்
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் சார்ந்த பல்வேறு தகவல்களை ஒருங்கிணைத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் சார்ந்த அறிக்கை ஒன்றை பாஸ்டன் கன்சல்டிங் குரூப் எனும் ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துபவர்களில் பாதி பேர் ஊராட்சிகளில் வசிப்பர், இவர்களில் 40-சதவிகிதம் பேர் பெண்களாக இருப்பர் இதில் 33 சதவிகிதம் பேர் 35 வயதுக்கு மேற்பட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டர்நெட் பயன்பாடு இதுவரை மற்றும் இனியும் மொபைல் மூலம் பயன்படுத்துவோர் தான் அதிகமாக இருப்பர். தற்சமயம் இண்டர்நெட் பயன்படுத்துவோரில் ஐந்தில் நான்கு பேர் மொபைல் போன் மூலமாகவே இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் ஸ்மார்ட்போன், பீச்சர் போன் என அனைத்து சாதனங்களும் அடங்கும்.
இந்தியாவில் 3ஜி இணைப்பு பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடிகளாக அதிகரிக்க சுமார் எட்டு ஆண்டுகள் ஆனது. இதுவே ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி நெட்வொர்க்கில் 10 கோடி பேர் சுமார் ஏழு மாதங்களில் இணைந்துள்ளனர்.
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் வெளியிட்ட தகவல்களின் படி 2014-2016 வரையிலான காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. தற்சமயம் சுமார் 8 முதல் 9 கோடி பேர் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குகின்றனர்.
இவர்கள் ஆண்டிற்கு சராசரியாக 4,500 கோடி முதல் 5,000 கோடி டாலர்களை செலவிடுகின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை பத்து மடங்கு வரை அதிகரித்து சுமார் 50,000 கோடி டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2025-ம் ஆண்டு வாக்கில் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை 30 முதல் 35 சதவிகிதமாக இருக்கும் என கூறப்படுகிறது.
உலகில் வளர்ந்த நாடுகளை போன்றே இந்தியாவிலும் டிஜிட்டல் சந்தை நல்ல லாபத்தை ஈட்டித் தரும் என்ற எதிர்பார்ப்புடன் பல்வேறு நிறுவனங்களும் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றன. மேலும் 2025-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் மட்டும் 85 கோடி பேர் இண்டர்நெட் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications