அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ஹேக்கர்கள் சதி! மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!
நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த புதிய சதித் திட்டம் உருவாகிவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்களை ரஷ்யா, சீனா மற்றும் இரான் தொடர்புகளைக் கொண்ட ஹேக்கர்கள் ரகசியமாக நோட்டமிட்டு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்பொழுது எச்சரித்துள்ளது.

தேர்தலை சீர்குலைக்க முடிவு
மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2016ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ஜனநாயக கட்சியின் பிரச்சாரத்தை குறிவைத்துச் சீர்குலைத்த அதே ஹேக்கர் குழு மீண்டும் தனது தாக்குதலை இந்த ஆண்டும் தனது கைவரிசையைக் காட்டும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

டொனால்டு டிரம்ப் மீதும் ஹேக்கர்களின் கவனம்
தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த ஆண்டு ரஷ்யா, சீனா மற்றும் இரான் ஹேக்கர் குழுக்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று தெருவுக்குப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் ஆகிய இருவரின் மீதும் ஹேக்கர்களின் கவனம் அதிகமுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.

200க்கும் அதிகமான அமைப்புகளை குறிவைத்த ஹேக்கர்கள்
ஸ்ட்ரோண்டியம் என்ற குழுவைச் சேர்ந்த ரஷ்ய ஹேக்கர்கள் இதுவரை சுமார் 200க்கும் அதிகமான அமைப்புகளைக் குறிவைத்துள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. இதில் உள்ள பல அமைப்புகள் அனைத்தும் இரண்டு கட்சியுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, இதே ஹேக்கர்கள்தான் பிரிட்டனைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மீதும் சைபர் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மக்களின் இணையக் கணக்குகள் ஹேக்
ரஷ்ய ராணுவ புலனாய்வுத் துறையான, ஜி.ஆர்.யு உடன் இணைந்ததாகக் கூறப்படும் சைபர் தாக்குதல் பிரிவான ஃபேன்ஸி பியர்தான் ஸ்ட்ரோண்டியம் என்று அழைக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.கடந்த 2016ம் ஆண்டின் தேர்தலின் போது எப்படி மக்களின் இணையக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டதோ, அதேபோல், ஸ்ட்ரோண்டியம் குழுவைச் சேர்ந்த ஹேக்கர்கள் தங்களின் ஹேக்கிங் முயற்சியை இந்த ஆண்டும் தொடங்கியுள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கை
இவர்களின் செயல்பாடுகள் உளவுத் தகவல்களைத் திருடி, தேர்தலைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹேக்கர்களின் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications