போனை திருடியவரின் இடத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடிச்ச சிங்கப்பெண்: க்ளைமாக்ஸில் நடந்த ட்விஸ்ட்!
வெளியே செல்லும்போது எப்போதும் போன்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக கூட்டநெரிசலான பகுதிகளில் போன்களை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை. ஏனெனில் கூட்டநெரிசலைப் பயன்படுத்தி சிலர் போன்களை எளிமையாகத் திருட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் தனது செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற நிலையில், அதன் பின் இளம் பெண் செய்த ஒரு விஷயம் இணையதளத்தில் பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

குருக்ராம் பகுதியை சேர்ந்த இளம் பெண்
அதாவது ஹரியானா மாநிலம் குருக்ராம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தணியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தைக்கு சென்றிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மர்ம நபர்
அந்த சமயம் கடை ஒன்றில் வாங்கிய பொருட்களுக்காக அந்த பெண் பணம் செலுத்த முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அருகே நின்ற மர்ம நபர் ஒருவர் சட்டென அவரின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு வேகமாக தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

ஸ்மார்ட் வாட்ச்
செல்போனை பறித்து கொண்டு திருடன் வேகமாக செல்லும் போது அந்த பெண் கத்தி கூச்சல் போட்டதாக தெரிகிறது. இருந்தபோதிலும் அந்த திருடன் அங்கிருந்து வேகமாகத் தப்பி ஓடி விட்டான். ஆனாலும் தன்னிடம் இருந்த ஸ்மார்ட் வாட்ச் திருடிய போனுடன் இணைக்கப்பட்டிருப்பதால் அதன் மூலம் போனை கொண்டு சென்ற திருடனின் இருப்பிடத்தை அந்த பெண் கண்காணிக்க முயன்றுள்ளார்.

3 மணி நேர முயற்சிக்கு பின்பு?
சரியாக 3 மணி நேர முயற்சிக்கும் பின்பு, அந்த திருடன் இருந்த இடத்தை அந்த பெண் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. அந்த திருடன் இரு சக்கர வாகனம் ஒன்றில் அமர்ந்திருக்க பின்னால் சென்ற இளம்பெண் வேகமாக பின்னால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலைந்த திருடன் போனை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த செல்போனை எடுத்துக் கொண்ட பெண், இந்த திருட்டு சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

50,000 ரூபாய்
அதேபோல் அந்த இளம்பெண்ணின் செல்போனை பயன்படுத்தி அந்த நபர் சுமார் 50,000 ரூபாய் வரை பெண்ணின் வங்கியில் இருந்து வேறு கணக்கிற்கு பரிமாற்றம் செய்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதுகுறித்து அந்த பெண் போலீசாரிடம் குறிப்பிட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக போனுடன் திருடன் ஒடிய போதும், ஸ்மார்ட் வாட்ச் மூலம் மீண்டும் தனது செல்போனை இளம்பெண் பெற்ற இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications