UPI வழியாக பணம் வாங்கினால் GST செலுத்த வேண்டுமா? நிர்மலா சீதாராமன் விளக்கம்!
ஆண்டுக்கு ரூ.20 - ரூ.40 லட்சம் என்கிற அளவில் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் செய்யும் சிறு வணிகங்கள் ஆனது ஜிஎஸ்டி வரி (GST) கண்காணிப்பின் கீழ் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் (Central GST authorities) யுபிஐ பரிவர்த்தனைகளின் அடிப்படையில் எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்று நிதி அமைச்சகம் (Ministry of Finance) தெரிவித்துள்ளது.
கர்நாடகா உட்பட நாட்டில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் வணிக நடவடிக்கைகளை மதிப்பிடாமல் அரசாங்கம் ஜிஎஸ்டி அறிவிப்புகளை (GST notice) வெளியிட்டுள்ளதா என்பது குறித்து, மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கே. சுதாகர் (K Sudhakar) மற்றும் தேஜஸ்வி சூர்யா (Tejasvi Surya) ஆகியோர் கேள்விகள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) "இல்லை. மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் யுபிஐ பரிவர்த்தனைகளின் அடிப்படையில் எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை" என்று கூறினார். ஜிஎஸ்டி துறைக்குள் உள்ள முறையான குறைபாடுகளால் இத்தகைய ஏய்ப்புகள் ஏற்படுகின்றனவா என்ற கேள்விக்கு, நிதியமைச்சர் எதிர்மறையாக பதிலளித்து உள்ளார்.
நிதியமைச்சர், மக்களவையில் பகிர்ந்து கொண்ட கர்நாடகாவிற்கான மத்திய வரி அமைப்புகள் (Central tax formations for Karnataka) அளித்த தரவுகளின்படி, 2024 - 25 ஆம் ஆண்டில் ரூ.39,577 கோடி மதிப்புள்ள 1,254 ஜிஎஸ்டி ஏய்ப்பு வழக்குகள் (GST Evasion cases) பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023 - 24 ஆம் ஆண்டில் ரூ.7,202 கோடி மதிப்புள்ள 925 வழக்குகளையும், 2022 - 23 ஆம் ஆண்டில் ரூ.25,839 கோடி மதிப்புள்ள 959 வழக்குகளையும் விட அதிகமாகும்.
ஜிஎஸ்டி பதிவு வரம்பை (GST registration threshold) மீறியதற்காக பதிவு செய்யப்படாத விற்பனையாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யுமாறு, கர்நாடக அரசு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, கடந்த மாதம் சிறு வணிகங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) நோட்டீஸ் அனுப்புவது தொடர்பான தகவல்கள், நடவடிக்கைகள் பெரிய சர்ச்சைகளை கிளப்பி இருந்தது.
கர்நாடகாவில் வெளியான பல நோட்டீஸ்கள் ஆனது, பதிவு செய்யப்படாத வணிகங்கள் ஆண்டுதோறும் ரொக்கம், யுபிஐ அல்லது பிஓஎஸ் (POS) இயந்திரங்கள் மூலம் (பொருட்களுக்கு) ரூ.40 லட்சத்திற்கும் அதிகமாக அல்லது (சேவைகளுக்கு) ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக பணம் பெற்றதாக சுட்டிக்காட்டியிருந்தன.
இதன் விளைவாக பல சிறு விற்பனையாளர்கள் யுபிஐ வழியாக பணம் வாங்குவதை நிறுத்தினர், மாறாக ரொக்கமாக (NO UPI ONLY Cash) கொடுக்குமாறு வாடிக்கையாளர்களை கேட்க தொடங்கினர். இதற்கிடையில் தான் யுபிஐ பரிவர்த்தனைகளின் அடிப்படையில் மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்று நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அளவில் மொத்த வருவாய் ரூ.40 லட்சத்திற்கு மேல் இருந்தால், சிறு வணிகங்கள் சரக்கு விநியோகத்தில் (அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் வணிகம் செய்தால் ரூ.20 லட்சம்) ஜிஎஸ்டி பதிவு கட்டாயமாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் சேவைகள் வழங்கல் அல்லது கலப்பு விநியோகத்தில் ரூ.20 லட்சம் (மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் வணிகம் செய்தால் ரூ.10 லட்சம்) செலுத்த வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது சிறு வணிகங்களுக்கான ஜிஎஸ்டி-யில் எந்த புதிய மாற்றமும் இல்லை.


Click it and Unblock the Notifications








