புதிய போன்களில் ஆதார் ஆப் கட்டாயமாக்க UIDAI திட்டம்.. சாம்சங், ஆப்பிள் கவலை.. ஏன்?
இந்தியாவில் புதிதாக விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களின் ஆதார் செயலியைக் கட்டாயமாக்கும் திட்டத்தை யு.ஐ.டி.ஐ.ஏ, எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு தற்போது ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்திய மக்களுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது ஆதார் அட்டை. அதுவும் இப்போது 134 கோடி மக்களிடம் ஆதார் உள்ளது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் பெறுவது என அனைத்திற்கு ஆதார் அட்டை தேவைப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் மொபைல் போன் பயனர்களுக்கு ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் இந்த செயலியில் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைத் திருத்துதல், குடும்ப விபரங்களை நிர்வகித்தல் போன்ற பல வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஸ்மார்ட்போன்களில் ஆதார் செயலி முன்பே நிறுவப்பட்டிருந்தால் பயனர்கள் எளிதாக தங்கள் தகவல்களைப் புதுப்பிக்கவும், பயோமெட்ரிக் தரவுகளைப் பாதுகாக்கவும் முடியும் என UIDAI கருதுகிறது. மேலும் இது ஆதார் சேவைகளை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என ஆதார் ஆணையம் கூறியுள்ளது.
ஆனால் இந்த யோசனைக்கு மொபைல் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் சங்கமான எம்.ஏ.ஐ.டி இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்தியத் தயாரிப்புக்கு என ஒரு அசெம்பிளி லைன், வெளிநாட்டுக்கு அனுப்பும் மொபைல் போன்களுக்கு ஒரு அசெம்பிளி லைன் எனத் தனி தனியே உருவாக்க வேண்டும். இது அதிக சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.
அதேபோல் இதற்குமுன்பு ஆன்லைன் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிப்பது தொலைந்த மொபைல் போனை கண்டறிவது உள்ளிட்ட வசதிகளை வழங்கும் சஞ்சார் சாத்தி என்ற செயலியை மொபைல் போன்களின் கட்டாயமாக்கி மத்தி அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தனியுரிமை பிரச்சனையை முன் வைத்து எழுந்த எதிர்ப்பால் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
தற்போது இந்த ஆதார் செயலி விவகாரத்தில் அரசுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. அரசு இந்த திட்டத்தைக் கட்டாயப்படுத்தாமல் நிறுவனங்களிடம் கோரிக்கையாக மட்டுமே முன்வைத்துள்ளதால் ஒரு நடுநிலையான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களைக் கூகுள் மேப்ஸில் (Google Maps) காட்டும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளன. குறிப்பாக UIDAI மற்றும் கூகுளின் ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள 60,000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேர்க்கை மற்றும் திருத்த மையங்கள் (Aadhaar Enrolment & Update Centres) கூகுள் மேப்ஸில் பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நடத்தும் ஆதார் சேவா கேந்திராக்கள் (ASKs) மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட மையங்களும் அடங்கும். இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள உண்மையான மையங்களை சில நொடியில் கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சேவையில் வெறும் இடத்தை மட்டும் காட்டாமல், அந்த மையத்தில் என்னென்ன சேவைகள் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
புதிய ஆதார் பதிவு, பயோமெட்ரிக் பதிவு, பெயர், முகவரி, செல்போன் எண், பிறந்த தேதி,பாலினம் ஆகியவற்றைத் திருத்துதல் மற்றும் மையத்தின் வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்கள் போன்றவற்றைக் கூகுள் மேப்ஸில் எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








