SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.. இந்த மெசேஜ் வந்தால் தெரியாமல் கூட தொடாதீங்க.. ஏன்?
ஆன்லைன் மோசடிகளின் அதிகரிப்பு சில காலமாகத் தொடர்கதையாகியுள்ளது. அதன்படி தற்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வழங்கும் பரிசுகளைப் பெறுவதறக்காக APK கோப்பைப் பதிவிறக்கம் செய்யுமாறு குறுஞ்செய்தி (மெசேஜ்) அல்லது வாட்ஸ்அப் மூலம் உஙகளுக்கு செய்து வந்துள்ளதாக? அப்படியென்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது ஒரு மோசடி முயற்சி எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது SBI REWARD27..APK என்ற பெயரில் உள்ள கோப்பை பதிவிறக்கம் செய்யுமாறு சில மோசடி கும்பல்கள் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது. அதுவும் எஸ்பிஐ வழங்கும் பரிசுகளைப் பெறுவதற்காக இந்த செயலி அவசியம் என்று அவர்கள் நம்ப வைக்க முயற்சிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த போலி APK கோப்பைப் பதிவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம், உங்கள் தனிப்பட்ட தரவுகள் மற்றும் நிதித் தகவல்கள் திருடப்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்த புதிய வகை மோசடி குறித்து PIB உண்மை கண்டறியும் பிரிவு, சமூக ஊடக தளமான எக்ஸ் (X) மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் பொதுமக்கள் இதுபோன்ற இணைப்புகள் அல்லது தெரியாத கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் எஸ்பிஐ பரிசுகளைப் பெறுவதற்காக APK கோப்பைப் பதிவிறக்கம் செய்யுமாறு செய்தி வந்தால் அதைப் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்வதைத் தவிர்க்கவும் என்று அந்த எக்ஸ் தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கி ஆனது ஒருபோதும் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் இணைப்புகளை (லிங்க) அல்லது APK கோப்புகளை அனுப்புவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்க.
அதேபோல் சில தினங்களுக்கு முன்பு informalnewz இணையதளம் வெளியிட்ட தகவலில், பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி யுபிஐ மூலம் தெரியாத நபர்கள் உங்கள் வங்கி கணக்கு பணம் அனுப்பி அதை திரும்ப பெறுவதற்கான கோரிக்கைகள் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக சரிபார்ப்பு இல்லாமல் உடனே பணத்தை அனுப்ப UPI கோரிக்கைகளை ஏற்று ஒப்புதல் அளிக்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
அதாவது பல போலி யுபிஐ செயலிகள் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்றன. இவை உண்மையான யுபிஐ போலவே இருக்கின்றன. சைபர் குற்றவாளிகள் இந்த போலி செயலிகள் மூலம் உங்கள் எண்ணில் பரிவர்த்தனை செய்து அதன் ஸ்கிரீன்ஷாட்டை எடுப்பார்கள். அதன்பின்பு உங்கள் வங்கியின் பெயரில் உங்கள் எண்ணுக்கு யுபிஐ மூலம் பணம் வந்துள்ளதாக ஒரு போலி செய்தியை அனுப்புவார்கள். அடுத்து இந்த குற்றவாளிகள் உங்களை அழைத்து ஸ்கிரீன்ஷாட் மற்றும் செய்தியைக் காட்டி யுபிஐ மூலம் உங்கள் எண்ணுக்குத் தவறுதலாகப் பணம் அனுப்பியதாகக் கூறுவார்கள்.

அடுத்து சைபர் குற்றவாளிகள் தங்கள் UPI எண்ணை உங்களுக்குக் கொடுத்து, பணத்தை விரைவில் திரும்பக் கேட்பார்கள். எனவே இது உங்களுக்கும் நடந்தால், கவனமாக இருக்க வேண்டும். அதாவது இதுபோன்று நிகழும்போது நீங்கள் எந்த அவசர நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது. அதுவும் UPI உடன் இணைக்கப்பட்ட உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்த்து, நீங்கள் உண்மையிலேயே பணத்தைப் பெற்றுள்ளீர்களா இல்லையா என்பதை முதலில் பாருங்கள்.
ஒருவேளை உங்களுக்குப் பணம் கிடைக்கவில்லை என்றால், நேரடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து புகார் கொடுக்கவும். இதன் மூலம் மோசடியில் இருந்து தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








