10 ரூபாயோ.. 50 ரூபாயோ.. இனி ATM இல் எல்லாம் கிடைக்கும்.. வருகிறது புதிய வசதி.. இதோ முழு விவரம்..
நாடு முழுவதும் அதிக மக்கள் யுபிஐ சேவையை பயன்படுத்தி வந்தாலும் சில முக்கிய தேவைகளுக்கு ரொக்க பணம் தான் தேவைப்படுகிறது. இந்நிலையில் சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் அரசு புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.
அதாவது அனைத்து மக்களுக்கும் சிறிய மதிப்புள் நோட்டுகள் எளிதாகக் கிடைக்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இதற்குவேண்டி சிறிய நோட்டுகளை வழங்கும் புதிய ஏடிஎம்கள் (ATM) மற்றும் பெரிய நோட்டுகளை சிறிய நோட்டுகளாக மாற்றும் ஹைபிரிட் ஏடிஎம்களை (hybrid ATMs) அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தினசரி தேவைகளுக்கு ரொக்கப் பணத்தை நம்பியிருக்கும் பல கோடி இந்திய மக்களுக்கு இந்த புதிய வசதி மிகவும் உதவியாக இருக்கும். முன்பு கூறியது போல் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள், குறிப்பாக யுபிஐ மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் மக்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஆனாலும் பல கோடி மக்களுக்கு அன்றாட தேவைகளுக்கு ரொக்க பணத்தையே சார்ந்துள்ளனர். இவர்களுக்கு எளிதாக ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைக் கிடைக்க அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது..
ஆகவே வழக்கமாக ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுகளை வழங்கும் ஏடிஎம்களுக்கு பதிலாக, சிறிய நோட்டுகளை வழங்கும் ஏடிஎம்களை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதுவும் பெரிய நோட்டுகளை சிறிய நோட்டுகளாக மாற்றிக்கொள்ள உதவும் ஹைபிரிட் ஏடிஎம்களையும் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மும்பையில் ஒரு சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
அதேபோல் தினக்கூலி தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், சிறு கடைக்காரர்கள் மற்றும் அன்றாடம் பயணம் செய்பவர்கள் போன்றோர் தங்கள் அன்றாட வாங்குதல்களுக்கும் பயணங்களுக்கும் ரொக்கப் பணத்தை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளனர். மேலும் இவர்களுக்கு, ரூ. 10 அல்லது ரூ. 20 நோட்டுகள் கிடைக்காதது ஒரு சிரமம் மட்டுமல்ல, இது பரிவர்த்தனைகளைத் தாமதப்படுத்தலாம்.
அதேசமயம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு மொபைல் போனில் சீரான இணைய இணைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக சில பகுதி நகர்ப்புறங்களில் சிக்னல் பிரச்சனை அதிகம் உள்ளது. எனவே தான் ரிசர்வ் வங்கி இந்த முயற்சிக்கு ஆதரவாக அதிக எண்ணிக்கையில் சிறிய மதிப்பு நோட்டுகளை அச்சிட வைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சிறிய நோட்டுகளை வழங்கும் ஏடிஎம்களை கொண்டுவருவதிலும் சில சவால்கள் உள்ளன. அதாவது புதிய இயந்திரங்களை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் வங்கிகளுக்கு அதிக செலவு ஏற்படலாம். குறிப்பாக பாதுகாப்பு தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். மேலும் அச்சிடுதல் மற்றும் விநியோகம் மக்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் சிறிய நோட்டுகளின் வழக்கமான விநியோகத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இதுதவிர இந்த புதிய வகை ஏடிஎம்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வைக்கப்பட்டால் அவற்றின் அணுகல் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் சிறிய மதிப்புள்ள நோட்டுகளின் மீது அரசு தொடர்ந்து கவனம் செலுத்துவது, ரொக்கப் பணம் இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் காட்டுகிறது. அரசின் இந்த புதிய முயற்சி வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை இன்னும் முழுமையாக டிஜிட்டலுக்கு மாறாத கோடிக்கணக்கான மக்களின் அன்றாட ரொக்கத்தைத் தேவைகளையும் சமநிலைப்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
சிறிய நோட்டுகளை நம்பியிருக்கும் மக்களுக்கு அரசு கொண்டுவரும் இந்த புதிய திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற நோட்டுகள் ஏடிஎம் மூலம் கிடைப்பது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credits: coinbazzar.com


Click it and Unblock the Notifications








