போனில் சில்மிஷம்.. சைபர் கிரைம் மிரட்டல்.. இனி ஒருத்தனும் தப்பிக்க முடியாது.. இந்தியாவின் புது புகார் சேவை..
இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் மோசடி, போன் வழி பாலியல் துன்புறுத்தல், ஆன்லைன் மிரட்டல், போனில் தொல்லை தருபவர்கள், SMS, ஈமெயில், வங்கி கணக்கு மற்றும் பணப் பரிவர்த்தனை மோசடிகளை உடனே ஆன்லைனில் புகாரிட புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆம், இனி டிஜிட்டல் தளம் வழியாக நடைபெறும் அல்லது மக்கள் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் மோசடிகளை உடனுக்குடன் புகார் அளிக்கும் புதிய சேவையை இந்திய அரசாங்கம் இப்போது அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக, பெருகி வரும் சைபர் மோசடியை சமாளிக்கவும்; குடிமக்களின் டிஜிட்டல் சொத்துக்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

இந்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) அறிவித்துள்ள தகவலின் படி, இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் மோசடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) போர்ட்டலில் புதிய சக்ஷு (Chakshu) வசதியை DoT அறிமுகம் செய்துள்ளது. சக்ஷு (Chakshu ) என்பது சஞ்சார் சாத்தி போர்ட்டலில் சேர்க்கப்பட்ட ஒரு புதிய அம்சமாகும்.
இந்த அம்சம் மக்கள் சந்திக்கும் டிஜிட்டல் மோசடி பற்றி புகார் அளிக்க அனுமதிக்கிறது. உதாரணமாக போன் அழைப்புகள், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மூலம் ஏற்படும் மோசடி, சிக்கல், மிரட்டல், பாலியல் துன்புறுத்தல், KYC சிக்கல், ஆள்மாறாட்ட மோசடி மற்றும் வங்கிக் கணக்கு அல்லது பேமெண்ட் வாலட் மோசடி போன்ற பல்வேறு வகையான மோசடி நடவடிக்கைகளை உடனே மக்கள் ஆன்லைனில் புகாரளிக்க இந்த வசதி அனுமதிக்கிறது.
இந்த ஆன்லைன் போரட்டலில் மக்கள் அவர்களின் மொபைல் மற்றும் டிஜிட்டல் தளங்களில் ஏற்படும் சிக்கல்களையும் குறிப்பிடலாம். உதாரணமாக உங்கள் பெயரில் வழங்கப்பட்ட மொபைல் இணைப்பை, வேறொருவர் பயன்படுத்துகிறார் என்றாலோ அல்லது அங்கீகரிக்கப்படாத இணைப்புகளை மக்கள் நேரடியாக புகார் செய்து அவற்றை துண்டிக்கலாம். இதுமட்டுமின்றி, திருடப்பட்ட அல்லது இழந்த மொபைல் சாதனங்களை பிளாக் செய்யவும் இங்கே புகார் அளிக்கலாம்.
அல்லது அவை எங்கு இருக்கிறது என்று கண்காணிப்பதற்கும் புகாரளிக்கவும். உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போனின் நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம். இந்திய தொலைபேசி எண்களை அழைப்பாளர் ஐடிகளாகக் கொண்டு உள்வரும் சர்வதேச அழைப்புகளை இதில் புகாரளிக்கலாம். உரிமம் பெற்ற வயர்லைன் இணைய சேவை வழங்குநர்களின் விவரங்களைச் சரிபார்க்கலாம்.

டிஜிட்டல் நுண்ணறிவு தளம் (டிஐபி) என்பது நிகழ்நேர உளவுத்துறை பகிர்வு, தகவல் பரிமாற்றம் மற்றும் பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பு ஆகியவற்றை எளிதாக்குவதற்கு தொலைத்தொடர்புத் துறையால் தொடங்கப்பட்ட மற்றொரு முயற்சியாகும்.
இந்த பாதுகாப்பான தளம் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், சட்ட அமலாக்க முகவர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கிறது. இது சஞ்சார் சாத்தி போர்ட்டலில் குடிமக்களால் தொடங்கப்பட்ட கோரிக்கைகளுக்கான பேக்எண்டு தளமாக செயல்படுகிறது. இது பங்குதாரர்கள் மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க உதவுகிறது.
செக்யூர் இந்தியா போன்ற முன்முயற்சிகள் மூலம் இணைய மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இந்த திட்டம் நிஜமாக்குகிறது. தெரியவைத்தவர்களுக்கு, தொலைத்தொடர்புத் துறை தகவலின் படி, கடந்த ஒன்பது மாதங்களில் ரூ.1,000 கோடி மதிப்பிலான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரூ. 1,008 கோடி வரை மோசடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது.
சக்ஷு மற்றும் டிஐபி தொடங்கப்பட்டதன் மூலம், இணைய மோசடிகளைக் கண்டறிதல் மற்றும் தடுப்பதை கணிசமாக மேம்படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பணத்தை மீட்பதற்கும் மோசடி கணக்குகளைத் தடுப்பதற்கும் நிதி நிறுவனங்களுடன் அமைச்சகம் இந்த இரண்டு சேவைகளுடன் இனி ஒத்துழைக்கும் என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர், அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications








