இதெல்லாம் இனி கட்டாயம்- நல்லா படிச்சுக்கோங்க: சமூகவலைதளம், ஓடிடி தளங்களுக்கு புதிய கட்டுபாடு!
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட தளங்களில் வெளியாகும் தொடர்கள் மக்களிடைய பலத்த வரவேற்பு பெற்றன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலின்காரணமாக தியேட்டர்கள் மூடும்நிலை ஏற்பட்டது. இதையடுத்து திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாக தொடங்கின. ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரைபர்களும் அதிகரிக்கத் தொடங்கின.

தொலைத்தொடர்பு திட்டங்களுடன் ஓடிடி அணுகல்
தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் திட்டங்களோடு இலவசமாக ஓடிடி அணுகலை வழங்கி வருகின்றன. ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளியாகின. இதனால் பல புகார்களும், சர்ச்சைகளும் எழுந்து வந்தது.

அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்
அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களில் பிரத்யேகமாக வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகின்றன. ஆபாச காட்சிகள், மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலான கதை களம் இடம்பெறுவதாக ஓடிடிகளில் வெளியாகும் படைப்புகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஓடிடி தளங்கள் வெளியீட்டில் சர்ச்சை
அந்த வகையில், அண்மையில் அமேசான் பிரைமில் வெளியான தாண்டவ் மற்றும் மிர்சாபூர் ஆகிய இந்தி தொடர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. தாண்டவ் தொடரில் இந்து கடவுள்கள் கேலி செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளதாகவும், மிர்சாபூர் தொடரில் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

மத்திய அரசு விதிமுறைகள்
அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்கள், சமூகவலைதளங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில் உள்ள விவரங்களை பார்க்கலாம்.

ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் எந்தெந்த வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்கலாம் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதேபோல் ஓடிடியில் 13 ப்ளஸ், 16 ப்ளஸ், அடல்ட் என வகைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் காட்சிகளை அரசு அல்லது நீதிமன்றம் நீக்க வேண்டும் என உத்தரவிட்டால் அதை 36 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும் எனவும் புகாரளித்த 24 மணிநேரத்துக்குள் பெண்கள் குறித்த ஆபாச படங்களை சமூகவலைதளம் நீக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூகவலைதளங்கள் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பது குறித்து விரிவான தகவல் வழங்க வேண்டும். புகார்களை கையாளுவதற்கு தனியாக அதிகாரிகள் நியமிக்க வேண்டும் எனவும் போலி தகவல் பரப்பும் நபர்களை கண்டறிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அல்லது நீதிமன்றம் தகவல்களை கேட்கும் பட்சத்தில் சமூகவலைதளங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். ஒருவரின் கணக்கு நீக்கும்பட்சத்தில் அதற்கான காரணத்தை விவரமாக உரிய நபருக்கு சமூகவலைதள நிறுவனம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications