Gmail சேவைக்கு வரும் புதிய AI அம்சம்.. உங்களுக்கு பதிலாக இமெயில் எழுதி அனுப்பும்.. DeepMind CEO ஓப்பன் டால்க்!
என்னது? ஜிமெயில் முடிவுக்கு வருகிறதா? என்கிற செய்தி தலைப்புகளை தூண்டி விட்டுள்ளார் - டெமிஸ் ஹசாபிஸ் (Demis Hassabis). இவர் கூகுள் டீப் மைண்ட் தலைவர் (Google DeepMind chief) ஆவார். இவர் அப்படி என்ன சொன்னார்? ஏன் ஜிமெயிலின் முடிவு நெருங்கிவிட்டது என்றெல்லாம் கூறப்படுகிறது? அது உண்மையா? உண்மை என்றால் எப்போது நடக்கும்? இதோ விவரங்கள்:
தங்கள் இமெயில்களை கையாள மில்லியன் கணக்கான மக்கள் ஜிமெயில் (Gmail) சேவையை பயன்படுத்தினாலும், அவர்களில் முக்கால்வாசி பேர் ஜிமெயிலை சரியாக நிர்வகிப்பதில்லை. இந்த பிரச்சனை நம்மில் பலருக்கு மட்டுமல்ல கூகுள் டீப் மைண்ட் தலைவர் டெமிஸ் ஹசாபிஸிக்கும் உள்ளது போல் தெரிகிறது!

லண்டனில் நடந்த எஸ்எக்ஸ்எஸ்டபுள்யூ (SXSW) நிகழ்வில் தனது முக்கிய உரையின் போது "நான் எனது இமெயில்களிடம் இருந்து விடுபட விரும்புகிறேன். அதிலிருந்து விடுபட நான் மாதத்திற்கு ஆயிரக்கணக்கான டாலர்களை செலுத்துவேன்" என்று டெமிஸ் ஹசாபிஸ் கூறி உள்ளார். இவர் இப்படி கூற காரணம் - கூகுள் நிறுவனம் ஜிமெயில் தொடர்பான ஒரு புதிய ஏஐ டூலின் உருவாக்கம் தான்!
ஜிமெயில் சேவையில், தினசரி பயனர்கள் சந்திக்கும் சிரமங்களை உணர்ந்து, கூகுள் நிறுவனம் ஆனது உங்கள் மின்னஞ்சல்களை நிர்வகிக்கவும், உங்களுக்கு வரும் மின்னசல்களுக்கு "உங்களை போன்ற பாணியிலேயே" பதில் அளிக்கவும் உதவும் ஒரு புதிய ஏஐ அமைப்பில் பணியாற்றி வருவதாக டெமிஸ் ஹசாபிஸ் உறுதிப்படுத்தி உள்ளார்!
ஜிமெயில் சேவையில் ஏற்கனவே சம்மரைஸ், ஸ்மார்ட் ரிப்ளைஸ் மற்றும் பல ஏஐ அம்சங்கள் இருந்தாலும் கூட டெமிஸ் ஹசாபிஸின் கூற்றானது, நாம் நமது ஜிமெயில் அக்கவுண்ட்டை "கிட்டத்தட்ட" முழுவதுமாக ஏஐ-யிடம் சமர்ப்பிப்பதை பற்றி பேசுகிறார். அவர் இதுகுறித்த "சரியான திட்டங்களை" பற்றி பேசவில்லை. இருப்பினும் ஏஐ கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, இமெயில்களை நிர்வகிப்பதை எவ்வாறு மாற்றும் என்பதற்கான ஒரு யோசனையை அவர் நமக்கு வழங்குகிறார்.
அவரின் கூற்றுப்படி, இந்த புதிய ஏஐ மாடல் உங்கள் இமெயில் பார்மெட்களை புரிந்துகொள்வதிலும், அவற்றுக்கு தனிப்பயனாக்கப்பட்ட முறையில் பதிலளிப்பதிலும் கவனம் செலுத்தும். அதாவது இது பெரும்பாலான இமெயில்களுக்கு பதிலளிப்பதை எளிதாக்கும் எனவே பயனர்கள் மற்ற முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்தலாம்.
ஆக கூகுள் நிறுவனம் அதன் தற்போதைய அமைப்புகளில் கொண்டுவந்துள்ள ஏஐ அம்சங்கள் எல்லாம் வெறும் ஆரம்பம் தான் என்பதை டெமிஸ் ஹசாபிஸ் சூசகமாக வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய 2 முக்கியமான விஷயங்கள் உள்ளன. ஒன்று - டெமிஸ் ஹசாபிஸ் பேசும் இந்த ஏஐ சூப்பர்மெயில் ஆனது இலவசமாக அல்லது மலிவாக இருக்காது. உண்மையில் இது பெரிய அளவிலான கட்டணத்தை வசூலிக்கலாம்.
இரண்டாவது - இது உடனே அறிமுகம் செய்யப்படப்போவதும் இல்லை; இரவோடு இரவாக ஜிமெயில் முடிவுக்கு வரப்போவதும் இல்லை. ஏனென்றால் ஏஐ சூப்பர்மெயில் ஆனது அதன் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்பதை டெமிஸ் ஹசாபிஸே உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இதை அவர் "நெக்ஸ்ட் ஜெனெரஷன் இமெயில்" என்று குறிப்பிடுவதையும் இங்கே விரும்புகிறோம். ஆக ஏஐ சூப்பர்மெயிலை உடனடியாக எதிர்பார்க்க முடியாது!
ஏஐ சூப்பர்மெயில் பற்றி மட்டுமின்றி, பல்வேறு பணிகளில் மனித அளவிலான பகுத்தறிவு திறன் கொண்ட ஆர்டிபிஷியல் ஜெனெரல் இன்டெலிஜென்ஸ் (Artificial General Intelligence - AGI) - அமைப்புகளை உருவாக்கம் குறித்தும் ஹசாபிஸ் பேசியுள்ளார். இந்த முயற்சி கல்வித்துறையால் முன்னெடுக்கப்படும் என்று அவர் ஆரம்பத்தில் கருதினாராம், ஆனால் ஏஐ-யின் வணிக ரீதியான முன்னேற்றத்தின் வேகம், எதிர்பார்த்ததை விட மிக முன்னதாகவே பெரும் நிறுவனங்கள் ஏஜிஐ போட்டியில் குதித்துள்ளதாம்.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் ஏஜிஐ (AGI) வரக்கூடும் என்று நம்பும் டெமிஸ் ஹசாபிஸ், இதன் வருகை ஒரு புதிய தொழில்துறை புரட்சியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏஐ தொடர்பான எதிர்காலத்தை பற்றி பேசுக்களையில், ஏஐ ஆல் இயக்கப்படும் செழிப்பை எவ்வாறு நியாயமாக பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை ஆராய பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் ஆராய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்! Photo Courtesy: Wikipedia


Click it and Unblock the Notifications