சுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள்! நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்?
ஆப்பிரிக்க-அமெரிக்க மனிதரான ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டதை எதிர்த்து அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கூகிள் மற்றும் யூடியூப் நிறுவனத்துடன் சேர்த்து சுந்தர் பிச்சை தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதற்கு இந்தியர்கள் கொந்தளித்துள்ளனர், அப்படி என்ன தான் ஆச்சு? வாங்க பார்க்கலாம்.

முகப்பு பக்கத்தில் கருப்பு ரிப்பன் வைத்து ஆதரவு
அமெரிக்காவில் நடந்த இனவெறி கொலைகளுக்கு எதிரான போராட்டங்களில் இணைந்த கூகிள் மற்றும் யூடியூப் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் உள்ள தனது முகப்பு பக்கத்தில் ஒரு கருப்பு ரிப்பனை வைத்து ஆதரவு தெரிவித்துள்ளது.

கூகிள் ஆதரவாக நிற்கும்
நிராயுதபாணியான கறுப்பின மனிதரான ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஒற்றுமையைக் காட்டுவதாகத் தெரிவித்து, 'நாங்கள் இன சமத்துவத்திற்கும், அதைத் தேடுவோர் அனைவருக்கும் ஆதரவாக நிற்கிறோம்' என்று பதிவிட்டுள்ளது.
சுந்தர் பிச்சை ட்வீட் என்ன சொல்கிறது?
"கூகிள் மற்றும் யூடியூப் முகப்புப்பக்கங்களில், இன சமத்துவத்திற்கான எங்கள் ஆதரவை கறுப்பின சமூகத்துடன் ஒற்றுமையுடனும், ஜார்ஜ் ஃபிலாய்ட், பிரோனா டெய்லர், அஹ்மத் ஆர்பெரி மற்றும் குரல் கொடுக்க முடியாத மற்றவர்களின் நினைவாகவும், மக்களின் உணர்வு, வருத்தம், கோபம், சோகம் மற்றும் பயம் என அனைத்தையும் மதித்து, நீங்கள் தனியாக இல்லை'' என்று கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கிறார்.

35.8K பயனர்கள் சுந்தர் பிச்சைக்கு ஆதரவு
கூகிளுக்குச் சொந்தமான யூடியூப் மற்றும் ஆல்பாபெட்டின் அமெரிக்க முகப்புப் பக்கத்திலும் இதே செய்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர் பிச்சை பதிவிட்ட அவரின் டிவிட்டர் பக்க ட்வீட்டிற்கு சுமார் 35.8K பயனர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்திய நெட்டிசன்கள் கொந்தளிப்பு
இருப்பினும் டிவிட்டரில் பல இந்திய நெட்டிசன்கள் மற்றும் டிவிட்டர் பிரமுகர்கள் சுந்தர் பிச்சையின் ட்வீட்டை கடுமையாக விமர்சித்து, வெளிவேஷம் போடாதீர்கள் என்று கண்டனம் தெரிவித்து, எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நெட்டிசன்ஸ்
தலித் அறிஞர் ரோஹித் வெமுலாவின் மரணத்திற்குப் பிறகும், இந்தியாவில் நடந்த போராட்டங்களின் போதும் ஏன் இதுபோன்ற ஒரு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சுந்தர் பிச்சையை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், இந்தியாவின் புலம்பெயர்ந்த நெருக்கடிக்குச் சுந்தர் பிச்சை ஏன் உதவவில்லை என்று மற்றவர்களும் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் பல கேள்விகளை நெருப்பாய் நெட்டிசன்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தலித் அறிஞர் திலீப் மண்டல் ட்வீட் என்ன சொல்கிறது?
தலித் அறிஞர் திலீப் மண்டல் தந்து டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, "ரோஹித் வெமுலா உங்கள் சொந்த மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்தவர் தான், அவரது தாயுடன் முதலில் ஒற்றுமையைக் காட்டுங்கள். இந்தியாவில் ஆட்சேர்ப்பு செய்யும் போது உங்களிடம் ஏதேனும் பன்முகத்தன்மை கொள்கை இருக்கிறதா? எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருடன் நீங்கள் எப்போது ஒற்றுமை காண்பிப்பீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரச்சனைக்குக் குரல் கொடுக்க முன்வந்த சுந்தர் பிச்சை
தற்பொழுது அமெரிக்காவில் நடக்கும் ஒரு பிரச்சனைக்குக் குரல் கொடுக்க முன்வந்த சுந்தர் பிச்சைக்கு இப்படி ஒரு நிலையா என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆல்பாபெட் மற்றும் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்த கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார். சுந்தர் பிச்சை ஒரு இந்திய - அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications