99 ஸ்மார்ட்போன்களை வைத்து Google-க்கு தண்ணிகாட்டிய ஓவியர்! எல்லாம் சிவப்பா மாறிடுச்சு!
கூகிள் மேப்ஸ் வரைபடத்தில் "போலியான போக்குவரத்து நெரிசலை" உருவாக்க, ஜெர்மனி சேர்ந்த ஓவியர் ஒருவர் செய்த வினோதமான முயற்சி சமூக வலைத்தளத்தை தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கூகுள் செய்திகளில் இப்பொழுது இதுதான் டாப் வைரல் செய்தி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் இவர் செய்த காரியத்திற்கு எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது, ஆகையால் இதை யாரும் செய்யவேண்டாம்.

கூகிள் மேப்ஸ்-ஐ ஏமாற்றிய ஓவியர்
உலகில் உள்ள பலரும் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான சிறந்த வழி எது என்றும், வழியில் உள்ள போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை மிகத் துல்லியமாக வழங்கி வருகிறது. சிறந்த திறனுடன் செயல்படும் இந்த பயனுள்ள செயல்பாட்டை ஒருவர் ஏமாற்றி முட்டாளாக்கியுள்ளார்.

கூகிள் மேப்ஸ் பயன்பாட்டை ஏமாற்றிய தனிஒருவன்
பெர்லினில் உள்ள சைமன் வெக்கர்ட் என்ற கலைஞர், காலியாக இருக்கும் தெருக்களை போக்குவரத்து நெரிசலுடன் இருப்பது போல் தெளிவாக கூகிள் மேப்ஸ் பயன்பாட்டை ஏமாற்றியுள்ளார். கூகிள் மேப்ஸ் பயன்பாட்டை ஏமாற்ற அவர் மேதைப் போல் ஒன்றும் யோசிக்கவில்லை, 99 ஸ்மார்ட்போன்களை மட்டும் தயார் செய்து கொண்டு புறப்பட்டுவிட்டார்.

என்ன செய்தார் தெரியுமா?
சைமன் வெக்கர்ட், 99 ஸ்மார்ட்போனிலும் கூகிள் மேப்ஸ் செயலியை ஓபன் செய்து தன்னிடம் இருந்த தள்ளுவண்டியில் வைத்து, பெர்லினில் உள்ள கூகிளின் அலுவலகத்திற்கு வெளியே உள்ள தெரு உட்பட, பல தெருக்களில் அவர் மெதுவாக இழுத்துச் சென்றிருக்கிறார். இவர் செய்த இந்த காரியத்தினால் கூகிள் வரைபடத்தில் தெருக்கள் சிவப்பு நிறமாகப் போலி போக்குவரத்துடன் மாறியது.

இது எப்படி சாத்தியம்?
இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். கூகிள் உலகெங்கிலும் உள்ள போக்குவரத்துத் தரவை கார்கள், மக்களால் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் வைத்தே கணக்கிட்டுச் சொல்கிறது. கார்களில் உள்ள போன்கள், மக்கள் பயன்படுத்தும் போன்கள் எந்த நிலையில், வேகத்தில் நகருகிறது என்பதை வைத்து போக்குவரத்து நெரிசலைக் கணிக்கிறது.

தெருக்கள் சிவப்பாக மாறியது
குறிப்பிட்ட தெருவில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் உள்ளன என்ற அடிப்படை கணக்கில் தான் போக்குவரத்து நெரிசல் கூகிள் மேப்ஸ்-ல் கணிக்கப்படுகிறது. சைமன் வெக்கர்ட் விஷயத்தில், சிறிய தெருவில் 99 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக குவிந்து கிடப்பது போல் கூகிள் மேப்ஸ் கணித்துக்கொண்டு, தெருவைச் சிவப்பு நிறத்தில் மாற்றி அனைவருக்கும் மாற்று பாதையைக் காட்டத் துவங்கியுள்ளது.

ஆள்நடமாட்டமே இல்லாத வீதிக்கு மாற்று பாதை
இதனால் அந்த நேரத்தில் கூகிள் மேப்ஸைப் பயன்படுத்தியவர்களுக்குத் தெருவில் நெரிசல் இருப்பதாகவும், அவர்கள் தெருவை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்றும் கூகிள் மேப்ஸ் நோட்டிபிகேஷன் அனுப்பியுள்ளது. அதையும் மீறி அந்த தெருக்களில் பயணித்தவர்களுக்கு முழு தெருவும் கிட்டத்தட்ட ஆள்நடமாட்டமே இல்லாமல் வெறுமையாக இருந்துள்ளது.

கூகிளுக்கு தண்ணிகாட்டினது உண்மையா?
வெக்கர்ட் தனது வலைப்பதிவு இடுகையைத் தவிர வேறு எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆகையால் இந்த முழு விஷயமும் போலியானதாகக் கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது உண்மையிலேயே உண்மையானது என்றால், கூகிள் மேப்ஸ் பகிரங்கமாக ஏமாற்றப்பட்டது என்பது உண்மையாகிவிடும்.


Click it and Unblock the Notifications