Google Maps செயலியை நம்பி சென்ற போலீசார்.. சுற்றி வளைத்து சிறைபிடித்த கிராம மக்கள்.. நடந்தது இதுதான்..
இந்தியாவில் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டுமே வைத்துச் செல்லும் பயனர்களுக்கு மிகப் பெரிய உதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். மேலும் கூகுள் மேப்ஸ் செயலியில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. அதுவும் இந்த புதிய அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
இருந்தபோதிலும் கூகுள் மேப்ஸ் செயலியை ஒரு சில இடங்களில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று கூகுள் மேப்ஸ் தவறான வழிகாட்டுதலால் வழி தவறி வேறு ஒரு இடத்துக்கு சென்று, அப்பகுதி மக்களால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது சமீபத்தில் அஸ்ஸாமின் 16 பேர் கொண்ட போலீஸ் குழு குற்றவாளியைத் தேடிப் புறப்பட்டது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் செயலியில் வழிகாட்டுதலின்படி சென்று கொண்டிருந்த போலீஸ் குழு, அஸ்ஸாமில் இருப்பதாக மேப்பில் காட்டிய தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்தது. ஆனால். அது நாகலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டம் என்று கூறப்படுகிறது.
பின்பு ஆயுதங்களுடன் அந்த தேயிலைத் தோட்டத்துக்குள் வந்திருந்த போலீஸ் குழுவைக் கண்ட அப்பகுதி உள்ளூர் வாசிகள் அவர்களைத் தாக்கி இரவோடு இரவாக சிறைபிடித்துவைத்தனர். அதன்பின்னர் அஸ்ஸாமிலுள்ள போலீஸார் இதுபற்றி அறிந்ததும், உடனே நாகலாந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அங்கு வந்த நாகலாந்து உள்ளூர் காவல்துறையினர், பிடித்துவைக்கப்பட்டிருந்த அஸ்ஸாம் அதிகாரிகளை மீட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், பிடித்துவைக்கப்பட்டிருந்த 16 போலீஸ் அதிகாரிகளில் மூன்று பேர் மட்டுமே சீருடையில் இருந்தனர். மற்ற அனைவரும் சிவில் உடையில் இருந்தனர். இதனால் குழப்பம் அடைந்த உள்ளூர்வாசிகள், போலீஸ் குழுவைத் தாக்கினர். இறுதியில் நாகலாந்து போலீஸார் வந்து மீட்டனர். ஆனாலும் முதலில் 5 பேரை மட்டுமே விடுவித்த உள்ளூர்வாசிகள், மறுநாள் காலையில் மீதமிருந்த 11 பேரையும் அனுப்பி வைத்தனர் என்று அவர் கூறினார்.
இதேபோல் கடந்த ஆண்டு இறுதியில் பிஹாரில் இருந்து கோவாவுக்கு காரில் கூகுள் மேப் (Google Map) உதவியுடன் சென்ற குடும்பம் தவறுதலாகக் கர்நாடகாவின் வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். அதன்படி பிஹாரில் வசித்து வரும் குடும்பம் ஒன்று கோவாவுக்கு கூகுள் மேப்ஸ் உதவியுடன் சென்றுள்ளது. அப்போது கூகுள் மேப் தவறாக வழியைக் காண்பித்ததாகத் தெரிகிறது. எனவே அவர்கள் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் இருக்கும் ஒரு அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். குறிப்பாக அடர்ந்த காடு என்பதால் மொபைல் நெட்வொர்க் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அது இரவு நேரம் என்பதால் அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அச்சமடைந்துள்ளனர்.

அதன்பின்னர் காரிலேயே இரவு முழுவதும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகள் உட்பட ஆறு-ஏழு பேர் அந்த காரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் விடியற்காலையில் மொபைல் நெட்வொர்க் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க 4 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளனர். அதன்பின்னர் அவசர உதவி எண் 112-ஐ தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து உள்ளூர் போலீஸார் அவர்களைக் காட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாடு முழுவதும் அதிநவீன தொழில்நுட்பம் இருந்தாலும் அதைக் கவனமாகத் தான் பயன்படுத்த வேண்டும். நாம் முன்பின் தெரியாத இடத்துக்குச் செல்லும் போது கூகுள் மேப்ஸ் மற்றும் வழியில் வரும் உள்ளூர் மக்களிடம் சரியான பாதைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன்பின்பு பயணம் செய்வது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications








