நீங்க பேஸ்புக்னா நாங்க கூகுள்: Vodafone idea-வில் கூகுள் முதலீடு?., உயரும் பங்குகள்!
வோடபோன் ஐடியா நிறுவனத்தில் கூகுள் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட பதில்கள் குறித்து பார்க்கலாம்.

சலுகைகள் மற்றும் திட்டங்கள்
தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஜியோ அறிமுகத்திற்கு பிறகு அதன் சலுகைகள் மற்றும் திட்டங்கள் மூலம் பெரும்பாலான வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது. 5-க்கும் மேற்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் இருந்த நிலையில் ஜியோ அறிமுகத்திற்கு பிறகு ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா என்றானது.

வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் சலுகை
ஜியோ தொடர்ந்து பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அதற்கு போட்டியாக பிற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் சலுகையோடு கூடிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

பல்வேறு சவால்களை சந்திக்கும் நிறுவனங்கள்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. மேலும் இந்தியாவில் மொபைல் ஸ்பெக்ட்ரத்திற்கான கட்டணங்கள், அதிக வரி விதப்பு, உரிமம் பெறுவதற்கான கட்டணம் உள்ளிட்டவைகள் மிகவும் அதிகமாக உள்ளது என அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டி வந்தன.

வோடபோன் சேவை நிறுத்தப்படுவதாக பரவிய வதந்தி
இந்தியாவில் சுமார் 30 சதவீத(30 கோடி பயணாளர்கள்) பங்களிப்புடன் 3-வது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக வோடபோன் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஒரே காலாண்டில் மட்டும் ரூ.5000 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஏர்செல் சேவை நிறுவத்தப்பட்டது போல், அடுத்ததாக பிரிட்டனைச் சேர்ந்த வோடாபோன் நிறுவனமும் இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது என்று ஒரு வதந்தி பரவலாக வலம் வந்தது. அதற்கேற்ப கடன் சுமை காரணமாக இந்தியாவில் வோடபோன் நிறுவனம், ஐடியாவுடன் இணைந்தது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வோடபோன்
இதுகுறித்து வோடாபோன் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி நிக் ரீடு கூறுகையில், இந்தியாவில் வோடபோனின் நிலை மோசமாக இருப்பது உண்மைதான் எனவும், தற்போதை சூழலில் இந்தியாவில் வோடபோன் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது எனவும் அவர் கூறினார். ஆனால் இந்தியாவில் இருந்து வோடபோன் நிறுவனம் வெளியேறுவதாக பரவும் தகவல் வதந்தி எனவும் தொடர்ந்து இந்தியாவில் வோடபோன் முதலீடு செய்யும் எனவும் அதற்கான சந்தை இந்தியாவில் இருக்கிறது எனவும் அவர் கூறினார்.

ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் முதலீடு
தொடர்ந்து வாடிக்கையாளர்களை அதிகரிக்கும்படியான திட்டங்களை அறிவித்து வரும் ஜியோவில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தேதியன்று ஜியோ நிறுவனத்தில் 9.99 விழுக்காடு பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இதன் மூலமாக ஜியோ நிறுவனத்திற்கு சுமார் ரூ.43,574 கோடி முதலீடு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சில்வர் லேக், விஸ்டா நிறுவனம்
அதேபோல் கடந்த மே 3-ம் தேதியன்று சில்வர் லேக் நிறுவனம் 1.15விழுக்காடு பங்குகளை வாங்கியது. இதனால் ஜியோ நிறுவனத்திற்கு சுமார் ரூ.5,656 கோடி முதலீடு கிடைத்தது. அதன்பின்பு கடந்த மே 8-ம் தேதியன்று விஸ்டா நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கியது, இதன்மூலம் ஜியோ நிறுவனத்திற்கு ரூ.11,367 கோடி முதலீடு கிடைத்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த கே.கே.ஆர் நிறுவனம்
இதைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான கே.கே.ஆர் 2.32% பங்குகளுக்கு ஈடான ஜியோ இயங்குதளத்தில் 11,367 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்) அறிவித்தது.

கூகுள்., வோடபோன் ஐடியாவில் முதலீடு
ஜியோவில் பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே முதலீடு செய்துள்ளது. இதனால் ஜியோ தொடர்ந்து பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் ஜியோவுடனான போட்டி நிறுவனங்கள் கேள்விக்குறியாக வரும் நிலையில், கூகுள்., வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஒரே நாளில் வோடபோன் ஐடியா பங்குகள் அதிகரித்தது. வோடபோன் ஐடியாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5 சதவீத பங்குகள்
இந்த நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை கூகுள் வாங்க உள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் இதுபோன்ற எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஐடியா வோடபோன் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
source: indiatimes.com


Click it and Unblock the Notifications