நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார்! 24 மணிநேரத்தில் Orion AI-க்கு ஆப்பு அடிச்ச சுந்தர்! Google Gemini 2.0 ரெடி!
சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுள் (Google) நிறுவனமானது "தம்பிங்களா.. நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார் பா!" என்று கெத்தாக கூறிக்கொள்ளும் படியான ஒரு வேலையை பார்த்து உள்ளது. அதென்ன வேலை? 24 மணி நேரத்திற்குள் அப்படி என்ன செய்தது? இதோ விவரங்கள்:
ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது தனது அடுத்த பிளாக்ஷிப் ஏஐ மாடல் (Orion AI Model) ஆன ஓரியன் ஏஐ மாடலை வருகிற டிசம்பர் 2024 இல் அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியான மறுநாளே.. அதாவது 24 மணி நேரத்திற்குள்.. கூகுள் நிறுவனம் அதற்க்கு பதிலடி கொடுத்துள்ளது.

கூகுள் நிறுவனமானது அதே டிசம்பர் 2024 இல் ஜெமினியின் லேட்டஸ்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அது கூகுள் ஜெமினி 2.0 (Google Gemini 2.0) என்று அழைக்கப்படலாம்.
தி வெர்ஜ்ஜின் சமீபத்திய அறிக்கையின்படி, கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி 2.0 மாடலை வருகிற டிசம்பரில், "பரவலான முறையில்" வெளியிடலாம் என்று பரிந்துரைக்கிறது. இந்த, புதிய மாடல் ஆனது, கூகுள் டீப் மைண்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டெமிஸ் ஹசாபிஸ் எதிர்பார்த்த அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது
இதுவே கூட ஜெமினி 2.0 மாடலின் வெளியீட்டு டிசம்பருக்கு தள்ளிவைக்கப்பட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். கூகுள் நிறுவனம் தனது "பெஸ்ட் ஏஐ மாடலை" வழங்க வேண்டும் என்று நினைப்பதை, இதை வைத்தே புரிந்துகொள்ள முடிகிறது; அல்லது இதற்கு முற்றிலும் வேறு ஏதாவது ஒரு காரணமாக கூட இருக்கலாம். பெரிய ஏஐ மாடல்களை உருவாக்கும் போது அதில் சில சரிவுகளை காண்பது சஜகம் தான்!
குறைகள் குறைவாக இருந்தால் தான் சாட்ஜிபிடி போன்ற கடுமையானபோட்டியாளர்களை கூகுள் ஜெமினியால் சமாளிக்க முடியும். போதாக்குறைக்கு ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் அடுத்த ஓரியன் ஏஐ மாடல் ஆனது சாட்ஜிபிடி 4 மாடலை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நல்ல விஷயம் என்னவென்றால் ஓரியன் ஏஐ ஆனது அனைவருக்கமானதாக இருக்காது. ஓரியன் ஏஐ ஆனது ஆரம்பத்தில் ஓப்பன் ஏஐ உடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்று கூறப்படுகிறது; அந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஓரியன் ஏஐ ஆனது சாட்ஜிபிடி 4 மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருந்தாலும் கூட, அது சாட்ஜிபிடி 5 என்று அழைக்கப்படமால் ஓரியன் ஏஐ என்று அழைக்கப்படுவதற்கு "லாப நோக்கம்" தொடர்பான வேறு ஏதேனும் காரணம் இருக்குமா அல்லது "இது வேறுபட்டது" என்பதை புரியவைப்பதற்காக புதிய பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதில் தெளிவு இல்லை.
ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இந்த அணுகுமுறை, அதன் முந்தைய வெளியீடுகளான ஜிபிடி-4 மற்றும் ஜிபிடி-3 ஆகியவற்றிலிருந்து "முற்றுலும்" மாறுவதை குறிக்கிறது. அதாவது இவ்விரண்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, சாட்ஜிபிடி மூலம் பரவலாக அனைவராலும் அணுகப்பட்டது. ஆனால் ஓரியன் ஏஐ மாடல் ஆனது வரையறுக்கப்பட்ட வெளியீட்டை காணும் என்பது போல் தெரிகிறது.
ஓரியன் ஏஐ மாடல் ஆனது கார்ப்பரேட் ஆப்களில், டேட்டாவை சேகரிக்கவும், ஏஐ மாடல்களின் பதில்களை ரியல்லைஃப் கருத்துக்களுடன் செம்மைப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம். உண்மையிலேயே இது சாட்ஜிபிடி 4 மாடலை 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தால்.. இது மிகவும் சிக்கலான பணிகளை கையாளும் திறனை கொண்டிருக்கும் மற்றும் செயற்கை பொது நுண்ணறிவை (Artificial general intelligence - AGI) அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இந்த இடத்தில் கூகுள் நிறுவனமானது - ப்ராஜெக்ட் அஸ்ட்ராவில் பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இது பயனரின் கேள்விகளுக்கு டெக்ஸ்ட், ஆடியோ அல்லது வீடியோ இன்புட்கள் மூலம் ரியல்டைமில் பதிலளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ஜெமினி 2.0 மாடலால் ஓரியன் ஏஐ மாடலை சமாளிக்க முடியவில்லை என்றாலும் கூட, சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் அடுக்கடுக்காக பல "பிரம்மாஸ்திரங்களை" கைவசம் கொண்டுள்ளது. இதனால் தான் இந்த கட்டுரையை "நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார்பா" என்கிற வாசகத்தோடு தொடங்கினேன்!


Click it and Unblock the Notifications








