நாட்டை விட்டு வெளியேறுவோம்: பாகிஸ்தானுக்கு கூகுள், பேஸ்புக், டுவிட்டர் விடுத்த எச்சரிக்கை
பாகிஸ்தான் புதிய தணிக்கை விதிகளை திரும்பப் பெறாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவோம் என கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கூட்டணி அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர்
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பாகிஸ்தானில் நீண்ட காலமாக இயங்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அறிவித்த புதிய தணிக்கை சட்டங்களால் இனி தொழில்நுட்ப நிறுவனங்களால் அந்நாட்டில் சுதந்திரமாக இயங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளுக்கு எதிராக கருத்து
பேஸ்புக், டுவிட்டர், ஆப்பிள், அமேசான், கூகுள், யாஹூ, புக்கிங்.காம் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் அமைப்பான ஆசியா இணைய கூட்டணி (ஏஐசி) பாகிஸ்தான் புதிய விதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் புதிய விதிகளால் சேவை நிறுத்தப்பட்டும் எனவும் பாகிஸ்தானில் இருந்து விலகப்படும் போன்ற அச்சுறுத்தலை ஏஐசி முன்வைத்துள்ளது.

முன்னணி நிறுவனங்களின் கூட்டணி
பாகிஸ்தான் புதிய சட்டம் இணைய நிறுவனங்களை குறிவைத்து இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசின் இந்த அணுகுமுறை கவலை அளிப்பதாகவும் ஏஐசி தெரிவித்துள்ளது. முன்னணி நிறுவனங்களான பேஸ்புக், கூகுள், டுவிட்டர் போன்ற நிறுவனங்களின் கூட்டணி பாகிஸ்தான் அரசு அளித்துள்ள புதிய ஒப்புதலுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளன.

தகவல்களை உடனடியாக வழங்க வேண்டும்
பாகிஸ்தான் அறிவிப்பில் சமூகவலைதளங்களில் பிரதானமாக திகழும் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்களிடம் பாகிஸ்தானில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு நிறுவனங்கள் ஏதாவது குறிப்பிட்ட தகவல்கள் கேட்டால் அதை சமூகவலைதள நிறுவனங்கள் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும்
அதேபோல் குடிமக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக வலைதள நிறுவனங்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும், அங்கேயே தகவல்களைச் சேமிக்க தரவு சேவையகங்களை அமைப்பதையும் பாகிஸ்தான் அரசு கட்டாயமாக்கியது.

அறிவிப்பை பின்பற்றவில்லை என்றால் அபராதம்
பாகிஸ்தான் அரசு வெளியிட்ட புதிய தணிக்கை விதிகளை 3 மாத காலத்துக்குள் அமல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது. அதோடு பாகிஸ்தான் புதிய விதிகளுக்கு தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சுமார் 3 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய விதிகளை திருத்த வேண்டும் என மனு
பாகிஸ்தான் அரசு புதிதாக அறிவித்துள்ள தணிக்கை விதிகளை பாகிஸ்தான் அரசு திருத்த வேண்டும் என முன்னதாகவே டிஜிட்டல் நிறுவனங்களின் கூட்டணி மனு அனுப்பியது. பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், டுவிட்டர் ஆகியவை கூட்டாக பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தன.

பயனர்களுக்கு சேவை வழங்குவதில் சிக்கல்
முன்னதாக ஆசிய இணைய கூட்டணி சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், பாகிஸ்தான் அரசால் விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின் காரணமாக தங்களது சேவைகளை, பாகிஸ்தான் நாட்டு பயனர்களுக்கு வழங்குவதில் சிரமம் ஏற்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
source: ndtv.com


Click it and Unblock the Notifications