சுந்தர் பிச்சையின் வெற்றிக்கான துவக்கம் இதுதான்; மனமுருகி மாணவர்களுக்கு நம்பிக்கை!
இந்தாண்டு பட்டப் படித்து முடித்த மாணவர்களுக்கான பிரிவு உபசார விழாவை, கூகிள் நிறுவனம் ஆன்லைனில், 'யூடியூப்' வழியாக இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மைக்கேல் ஒபாமா, பாடகியும் நடிகையுமான லேடி காகா, பாடகர் பியோனஸ் போன்றவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு, சுந்தர் பிச்சை அறிவுரை
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக உலகப் பொருளாதாரம் பரந்த சரிவை கண்டுள்ளது, இதற்கு மத்தியில், 2020ம் ஆண்டின் கல்வி தொடர்பான எங்கள் அணுகுமுறையால் நீங்கள் விரக்தியடையக்கூடும், ஆனாலும் பொறுமையுடன் இருங்கள். உங்கள் பொறுமை உலகிற்குத் தேவையான முன்னேற்றத்தை உருவாக்கும், அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள், என்று மாணவர்களுக்கு, சுந்தர் பிச்சை அறிவுரை வழங்கியுள்ளார்.

டியர் கிளாஸ் ஆஃப் 2020
கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளத்தில் "Dear Class of 2020" என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றைக் கூகிள் நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மைக்கேல் ஒபாமா, பாடகியும் நடிகையுமான லேடி காகா, பாடகர் பியோனஸ் மற்றும் தென் கொரிய இசைக்குழு பி.டி.எஸ் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மூக இடைவெளி காரணமாக ஆன்லைனில் நடந்த நிகழ்ச்சி
கொரோனா தோற்று காரணமாக, சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற காரணத்தினால் இந்த நிகழ்ச்சி ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது தனது இளமைக்கால வாழ்க்கை அனுபவத்தையும், நினைவுகளையும் சுந்தர் பிச்சை எடுத்துரைத்தார். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக அமெரிக்காவுக்கு வருவதற்குத் தடைகளை எப்படிக் கடந்தார், என்ன சவால்களைச் சந்தித்தார் என்று மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தந்தையின் மாபெரும் உதவியால் முதல் விமான பயணம்
அல்பாபெட் மற்றும் கூகிள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை கூறுகையில், ''27 வருடங்களுக்கு முன்பு எனது படிப்பதற்காக அமெரிக்கா வரவேண்டிய சூழ்நிலையில், அமெரிக்க விமான டிக்கெட் செலவிற்காக என் தந்தை அவருடைய ஒரு வருடச் சம்பளத்தை அப்படியே செலவிட்டார், அதனால் தான் நான் ஸ்டான்போர்டில் படிக்க முடிந்தது. என் வாழ்க்கையின் முதல் விமான பயணம் என் தந்தையின் மாபெரும் உதவியால் தான் நடந்தது.

காஸ்ட்லியான நாடு அமெரிக்கா
அமெரிக்கா மிகவும் காஸ்ட்லியான நாடு, வீட்டிற்கு ஒரு முறை தொலைப்பேசியில் பேச ஒரு நிமிடத்திற்கு 2 டாலருக்கும் அதிகமாகச் செலவாகும், இந்த செலவு என்பது இந்தியாவில் எனது தந்தையின் மாத சம்பளத்திற்குச் சமமானது. நான் அந்த நிலையிலிருந்து தற்போதைய நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி, தொழில்நுட்பம் மீதான என்னுடைய அதீத கவனமும், ஆர்வமும் தான் காரணம்'' என்று சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

தொழில்நுட்பத்துடனான அணுகல் அதிகம் இல்லாமல் வளர்ந்த பிச்சை
நான் வளர்ந்த காலத்தில் தொழில்நுட்பத்துடனான அணுகல் அதிகமாக இல்லாமல் தான் வளர்ந்தேன். என்னுடைய பத்து வயதிற்குப் பின்னர் தான் முதல் தொலைப்பேசியையே நான் நேரில் பார்த்து இருக்கிறேன். நான் பட்டதாரியாவதற்காக அமெரிக்கா வரும் வரை கம்ப்யூட்டர் மற்றும் டிவி இரண்டையும் அவ்வளவு எளிதில் அணுக முடியாது.

தொழில்நுட்பம் உங்கள் கரங்களில் உள்ளது
நான் வளர்ந்த போது தொலைக்காட்சியில் ஒரே ஒரு சேனல் மட்டுமே இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை தொழில்நுட்பம் உங்களின் கரங்களிலேயே இருக்கிறது.மாணவர்களே மற்றும் இளைஞர்களே, இந்த கொடூரமான காலகட்டத்தில்உங்கள் பொறுமையை இழக்காதீர்கள், நம்பிக்கையோடு இருங்கள், உங்கள் பொறுமை உங்களை நல்ல இடம் நோக்கிவழிநடத்தும்என்று சுந்தர் பிச்சை கூறினார்.

பொறுமை உலக முன்னேற்றத்தை உருவாக்கும்
காலநிலை மாற்றம் அடுத்த தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கும், மேலும் இந்த தலைமுறை நம்பமுடியாத எதிர்கால விஷயங்களை உருவாக்க முடியும், கல்வி தொடர்பான என்னுடைய தலைமுறையின் அணுகுமுறையால் நீங்கள் விரக்தியடையக்கூடும். ஆனால், பொறுமையுடன் இருங்கள். உங்கள் பொறுமை இந்த உலகிற்குத் தேவையான முன்னேற்றத்தை உருவாக்கும்" என்று நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications