AI மூலம் இப்படியொரு பிரச்சனையா? Google சிஇஒ சுந்தர் பிச்சை வெளியிட்ட முக்கிய தகவல்..
கூகுள் (Google) நிறுவனம் தற்போது ஏஐ (AI) தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. குறிப்பாக உலகம் முழுவதும் இந்த ஏஐ தொழில்நுட்ப வசதிக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆனாலும் இந்த ஏஐ தொழில்நுட்பம் கூகுள் போன்ற பெரிய டெக் நிறுவனங்களுக்கு தற்போது மிகப் பெரிய சிக்கல் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது அமெரிக்காவில் இருக்கும் டெக் நிறுவனங்கள் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு ஆன்லைன் முறையில் நேர்காணல்களை நடத்துகின்றன. குறிப்பாக ஆன்லைன் நேர்காணல்களில் சில பொறியாளர்கள் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நேர்காணலில் வெற்றி பெற்று விடுவதாகவும் வேலைக்கு வரும்போது நேர்காணலில் காண்பித்த திறமைகள் அவர்களிடம் இருப்பதில்லை என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை (Google CEO Sundar Pichai) இனி தங்கள் நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் ப்ரோகிராமிங் பணிகளுக்கு ஆட்களை வேலைக்கு தேர்வு செய்யும்போது நேரடியாக அவர்களை அழைத்து நேர்காணல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களைக் கூட நேரடியாக அழைத்து அவர்களின் தலைமை அதிகாரிகளைக் கொண்டு ஒரு முறை நேர்காணல் நடத்தும் அளவிற்கு நிலைமை வந்துள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அதுவும் ஆன்லைனில் மூலம் நடத்தப்படும் நேர்காணலில் சிலர் நவீன கருவிகளைப் பயன்படுத்தி கேமராவை ஆன் மோடில் இருப்பதைப் போலவே வைத்து ஏஐ கருவிகள் வாயிலாக கோடிங், கேட்கப்படும் கேள்விகளுக்கு மிக எளிதாக பதில் அளித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. எனவே ஆன்லைனில் நேர்காணலில் எடுக்கப்படும் நபர், திறமையான நபரா என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் பெரிய டெக் நிறுவனங்கள் தற்போது தவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதனால் தான் அனைத்து விதமான பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான பதவிகளுக்கு இனி நேரடியாக மட்டுமே நேர்காணல் நடத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கூகுள் நிறுவனத்தில் இனி வேலைக்கு சேர வேண்டும் என விண்ணப்பிக்கும் பயனர்களுக்குக் குறைந்தது ஒரு நேர்காணலாவது அவர்கள் நேரில் வந்து கலந்து கொள்ளும்படி இருக்கும் அது முக்கியமான ஒரு நேர்காணலாக இருக்கும் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
மேலும் கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேரக்கூடிய நபர்களுக்கு கணினி அறிவியல் தொடர்பான அடிப்படை புரிதல் இருப்பதை உறுதி செய்யவே இப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதாகச் சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அதேபோல் அமேசான், மெக்கன்சி, சிஸ்கோ, டெலாயட் போன்ற பல நிறுவனங்களும் ஆன்லைன் நேர்காணல் முறையைக் கைவிட்டு நேரடியாக மட்டுமே நேர்காணல்களை நடத்த தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், ஆன்லைன் நேர்காணல்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நபர்கள் ஏஐ கருவிகளை கொண்டு மோசடியாக வேலை வாய்ப்பு பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, சுந்தர் பிச்சை பொறுப்பேற்றது முதல் இப்போது வரை கூகுள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 400 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. பின்பு கடந்த 2023-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 86.5 லட்சம் கோடி) அதிகமாக உள்ளது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையில் அடைந்த முன்னேற்றம் நிறுவனத்தின் பங்குகளை அசுர வேகத்தில் உயர்த்தியது.
அதேபோல் கூகுள் நிறுவனத்தின் இந்த பிரமாண்ட வளர்ச்சி சுந்தர் பிச்சையை பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்த்தி உள்ளது. சமீபத்தில் ப்ளூம் பெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரம் கோடி) டாலராக உயர்ந்து உள்ளது.இதுதவிர போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலும் பட்டியலும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ. 1.2 பில்லியனாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய கோடீஸ்வரர் பட்டியில் சுந்தர் பிச்சை இடம் பிடித்து உள்ளார்.
photo credit: hindustantimes, Google


Click it and Unblock the Notifications








