இந்தியாவுக்கு நன்றி சொன்ன கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை: கிடைத்தது மிகவும் உயரிய விருது.!
இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.

பத்ம விருதுகள்
அதாவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.

அதன்படி இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்து இருந்தது. இதில் சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா உள்ளிட்ட 17 பேருக்குப் பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக விருது பட்டியலில் இருந்தவர்களுக்கு சமீபத்தில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்றுக் கொண்டார்.

இந்தியத் தூதர் தரன்ஜித் சிங்
இந்த விருதை இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார். தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பிறந்தார் சுந்தர் பிச்சை. இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார்.

அதன்பின்பு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற சுந்தர் பிச்சை, ஸடான்போர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளறிவியல் பட்டம் பெற்றார்.மேலும் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மை பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார் சுந்தர் பிச்சை. இவர் கூகுள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

மேலும் விருதைப் பெற்றுக் கொண்ட சுந்தர் பிச்சை கூறியது என்னவென்றால், இந்த உயரிய கவுரவத்தை அளித்த இந்திய அரசு மற்றும் மக்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்துக்கு நன்றி எனத் தெரிவித்தார்.

மிகப்பெரிய கவுரவத்தைச் சேர்த்துள்ளீர்கள்
அதேபோல் எனக்கு மிகப்பெரிய கவுரவத்தைச் சேர்த்துள்ளீர்கள். என்னை உருவாக்கிய தேசத்திடம் இருந்து எனக்கு இந்த விருது கிடைத்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தியா எனது ஓர் அங்கம். நான் எங்குச் சென்றாலும் அந்த அடையாளத்தை எடுத்துச் செல்கிறேன் என்றார். குறிப்பாக நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது என்று கூறினார் சுந்தர் பிச்சை.
கூகுள் மற்றும் இந்தியா கூட்டுறவைத் தொடர்ந்து வளர்க்க நான் ஆவலுடன் உள்ளேன். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் வளர்ச்சிக்கான உந்துசக்தியாகும். பின்பு வரும் காலங்களில் மாற்றத்தைக் கொண்டு வர இந்தியாவில் கூகுள் முதலீடு செய்யத் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்
சுந்தர் பிச்சை.


Click it and Unblock the Notifications