கேஸ், பெட்ரோலை தொடர்ந்து அடுத்த ஆப்பு.. பேஸிக் Jio, Airtel, Vi திட்டங்களில் ரூ.50 விலை உயர்வு? எப்போது அமல்?
பெட்ரோல், டீசல், எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலைகளை போல, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளும் உயர்த்தப்படுமா என்கிற கேள்விகளுக்கு டெலிகாம்டால்க்கின் (Telecom Talk) சமீபத்திய அறிக்கை பதில் அளித்துள்ளது.
இப்போதைக்கு இல்லை.. ஆனால்? இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகியவை தங்களது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை, இப்போதைக்கு உயர்த்த வாய்ப்பில்லை என்று டெலிகாம்டால்க்கின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏதோ ஒரு வகையில் கட்டணங்களை சற்று உயர்த்தியிருப்பதால், மொபைல் திட்டங்கள் மறைமுகமாக ஏற்கனவே மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டன என்றும் அதன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது மொபைல் கட்டணங்களில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான உயர்வு ஜூலை 2024-ல் இருந்தது. அதன்பிறகு, வழக்கமான போக்கின்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தும் என்று சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர்.
இருப்பினும், தற்போதைய உலகளாவிய சூழல் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் நுகர்வோருக்கான சந்தை நிலவரத்தை பாதித்துள்ளன. எரிபொருள், உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் என அனைத்தும் விலை உயர்ந்ததாகிவிட்டன. இது நுகர்வோரின் நிதி சுமையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கட்டண உயர்வை தவிர்ப்பதை தவிர தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கிய அம்சமும் உள்ளது: 2025 நிதியாண்டில் (FY25) இத்துறையின் வருவாய் 13% வளர்ச்சியை எட்டியது; ஆனால், 2026 நிதியாண்டிலோ (FY26) அல்லது அதற்கு அடுத்த ஆண்டிலோ கட்டண உயர்வு இல்லாவிட்டால், வருவாய் வளர்ச்சி 10% ஆக மட்டுமே இருக்கும். ஒருவேளை 2027 நிதியாண்டிலும் (FY27) கட்டண உயர்வு இல்லையென்றால், இந்த வளர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கத்திற்கு கூட குறையக்கூடும்.
இதன் விளைவாக அடுத்த வாய்ப்பு கிடைக்கும் போது அல்லது தற்போதைய நிலைமை கொஞ்சம் கட்டுக்குள் வந்த பின்னர் - ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வி என்கிற வோடாபோன் அடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 15% வரை உயர்த்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்தகட்டமாக கட்டண உயர்வை அமல்படுத்தும்போது, இத்துறை முழுவதும் மொபைல் திட்டங்களின் விலை சுமார் 15% வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது, தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் கால அளவு கொண்ட அடிப்படை திட்டத்தின் விலையில் சுமார் 50 ரூபாய் உயர்விற்கு சமமாகும். நுகர்வோருக்கு 5ஜி திட்டங்களுக்கான செலவும் அதிகரிக்கக்கூடும் என்பதால், 5ஜி சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்புள்ளது.
எப்போது அமலுக்கு வரும்? கட்டணங்களில் செய்யப்படும் 15% உயர்வு, 2027 நிதியாண்டில் (FY27) இத்துறையின் வருவாயை ஆண்டுக்கு ஆண்டு (YoY) அடிப்படையில் சுமார் 11% அதிகரித்து, 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் என்று மோதிலால் ஓஸ்வால் (Motilal Oswal) தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் வருவாய் வளர்ச்சி ஒற்றை இலக்கத்திற்கு சரிந்தபோதெல்லாம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளன என்பதை அந்த புரோக்கரேஜ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
"வரலாற்று ரீதியாக பார்க்கும்போது, இத்துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் வயர்லெஸ் (மொபைல்) சேவை வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஒற்றை இலக்கத்திற்கு சரிவது, அடுத்தகட்ட கட்டண உயர்வுக்கான ஒரு முன்னோடியாக அமைவதை நாங்கள் கவனித்துள்ளோம்" என்று மோதிலால் ஓஸ்வால் தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 2026-ல் முடிவடைந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7% ஆகக் குறைந்தது. இதன் பொருள், அடுத்த காலாண்டிலும் இந்த வளர்ச்சி விகிதம் மேலும் குறையக்கூடும் என்பதாகும். தற்போது நாம் 2027 நிதியாண்டின் முதல் காலாண்டின் (Q1 FY27) கடைசி மாதத்தில் இருக்கிறோம். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தால், 2024-ல் நடந்தது போலவே, 2027 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் (Q2 FY27) முதல் வாரத்தில் அந்த உயர்வு அறிவிக்கப்படலாம்.
வரவிருக்கும் கட்டண உயர்வானது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ARPU-வை (பயனாளர் ஒருவரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய்) அதிகரிக்க உதவும். ஒட்டுமொத்த வருவாயை உயர்த்துவதற்கும், EBITDA (வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தீர்ப்புச் செலவுகளுக்கு முந்தைய வருவாய்) வரம்புகளை மேம்படுத்துவதற்கும் இது மிக முக்கியமானது. கட்டண உயர்வு இல்லாவிட்டால், ஜியோ (Jio) நிறுவனம் கூட தனது ஐபிஓ (IPO) நடவடிக்கையை தொடர விரும்பாமல் கூட போகலாம்; ஏனெனில், முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் சிறந்த வருவாயை எதிர்பார்ப்பார்கள்.


Click it and Unblock the Notifications