குமார் மங்கலம் சொன்ன குட் நியூஸ்.. Vodafone கஸ்டமர்களே.. Jio, Airtel-க்கு மாறிடாதீங்க... வருத்த படுவீங்க!
ஆதித்ய பிர்லா குழுமத்தின் (Aditya Birla Group) தலைவரான குமார் மங்கலம் பிர்லா (Kumar Mangalam Birla), சிஎன்பிசி-டிவி18 க்கு அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், வோடபோன் ஐடியா (Vodafone Idea) வாடிக்கையாளர்களின் மனதில் புத்துணர்ச்சியூட்டும் சூப்பரான தகவலை வெளிப்படுத்தி உள்ளார்.
நீங்களொரு "விசுவாசமான" வோடபோன் கஸ்டமராக இருந்தால், குமார் மங்கலம் பிர்லா என்ன கூறி இருப்பார் என்பதை இந்நேரம் கணித்து இருப்பீர்கள். ஆம், அவர் வோடபோன் ஐடியாவின் 5ஜி (Vodafone Idea 5G) சேவைகள் எப்போது அறிமுகமாகும் என்கிற தகவலை வெளிப்படுத்தி உள்ளார்.

5ஜி அறிமுகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த குமார் மங்கலம் பிர்லா, வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் "கூடிய விரைவில்" தொடங்கபப்டும் என்று கூறியுள்ளார். 5ஜி அறிமுகத்திற்காக இந்நிறுவனம் மோட்டோரோலா (Motorola) மற்றும் சியோமி (Xiaomi) ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
வோடபோன் ஐடியாவானது அதன் சந்தாதாரர்களை மிகவும் வேகமாக இழந்து வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது என்பதும், தற்போது வரையிலாக இந்நிறுவனம் 4ஜி சேவையை மட்டுமே வழங்குகிறது என்பதும், இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிடாத ஒரே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமும் இதுதான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகளானது விரைவில் அறிமுகமாகும் என்று பிர்லா உறுதிப்படுத்தியிருந்தாலும் கூட, அவர் சரியான டைம்லைனை (Timeline) பற்றி பேசவே இல்லை. அதாவது அடுத்த 3 மாதத்தில் வரும் அல்லது 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் வரும் என்றெல்லாம் எதுவுமே சொல்லவில்லை.
வெறுமனே "5ஜி வெளியீடு விரைவில் தொடங்கப்படும்" என்று ,மட்டுமே கூறியுள்ளார். இருப்பினும், வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு இதுவே ஒரு பெரிய குட் நியூஸ் தான். ஏனென்றால் ரிலையன்ஸ் ஜியோ தனது ட்ரூ 5ஜி நெட்வொர்க்கையும், பார்தி ஏர்டெல் தனது 5ஜி பிளஸ் நெட்வொர்க்கையும் நாடு முழுவதும் விரிவுபடுத்திய வண்ணம் உள்ளனர்.
ஆனால் வோடபோன் ஐடியாவோ, தனது 5ஜி சேவைகளை தாமதமாக அறிமுகம் செய்யும் என்று கூறி இருந்தால் கூட பராவாயில்லை, வாடிக்கையாளர்கள் கொஞ்சம் பொறுமையுடன் காத்திருந்திருப்பார்கள். ஆனால் இந்நிறுவனம், கடந்த பல மாதங்களாக 5ஜி அறிமுகம் பற்றி வாயே திறக்காமல் மௌனம் காத்து வந்தது. தற்போது ஒருவழியாக 5ஜி பற்றி பேசி உள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த அறிவிப்பு தொடர் சந்தாதாரர்கள் இழப்பிற்கு பின்னரே வந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், வோடபோன் ஐடியாவானது 42.4 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்துள்ளது. கடந்த டிசம்பர் 2022 இல் முடிவடைந்த 12 மாத காலப்பகுதியில் மட்டுமே இந்நிறுவனம் 24.2 மில்லியன் சந்தாதாரர்களை இழந்துள்ளது.
வோடபோன் ஐடியாவின் போட்டியாளர்களான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஆகியவைகள் 5ஜி வழியாக கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும், மிகவும் விரைவாக பயன்படுத்தி கொண்டன; போதாக்குறைக்கு வோடபோன் ஐடியாவின் கீழ் இருந்த வாடிக்கையாளர்களையும் தன்வசம் ஈர்த்துக்கொண்டன.
இதே நிலை தொடர்ந்தால் "கடையை இழுத்து சாத்திட்டு கிளம்ப வேண்டியது தான்" என்பதை வோடாபோன் ஐடியா புரிந்துகொண்டது போல் தெரிகிறது. இருப்பினும், வெறுமனே 5ஜி அறிமுகம் மட்டுமே வோடாபோனை காப்பாற்றி விடாது. அது ஜியோ மற்றும் ஏர்டெல் என்கிற 2 ஜாம்பவான்களுடன் மோதும் அளவிற்கு பலமானதாக இருக்க வேண்டும். அப்போது தான வோடாபோனால் இழந்த இடத்தை மீண்டும் பெற முடியும்!
Source: CNBC-TV18
Photo Courtesy: Wikipedia


Click it and Unblock the Notifications








