சுங்கச்சாவடி அருகில் வசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. ஆதார் எடுத்து வைங்க.. இனி போய்டே இருக்கலாம்!
சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், காத்திருக்காமலோ அல்லது ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்தாமலோ டோல்கேட்களை கடந்து செல்ல உதவும் வகையில், ஒரு புதிய உள்ளூர் சுங்கக் கட்டண அனுமதிச் சீட்டை (Local Toll Pass) அறிமுகப்படுத்த, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
தடைகள் இல்லாத (barrier-less) சுங்கக் கட்டண வசூல் முறையையும் இந்திய அரசு உருவாக்கி வருகிறது; இதன் மூலம், சுங்கச்சாவடிகளை சுற்றியுள்ள 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்கள், வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ள உதவும் சிறப்பு டிஜிட்டல் அனுமதி சீட்டுகளை பெற முடியும்.

தகவல்களின்படி, ஆதார் இணைப்பு மற்றும் சரிபார்ப்பு மூலம் உள்ளூர் மக்கள் இந்த சுங்கச்சாவடிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படலாம். சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் பல குடிமக்கள், தங்கள் அன்றாட மற்றும் அத்தியாவசிய பயணங்களுக்கு கூட சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது; இது அவர்களின் போக்குவரத்து செலவுகளை கணிசமாக அதிகரிக்கிறது.
இவர்கள் சுங்கச்சாவடிகளுக்கு அருகிலேயே வசிப்பதால், வழக்கமான பயணங்களுக்கு நீண்ட தூர பயணிகளை விட அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, தகுதியுள்ள உள்ளூர் மக்கள் - வரம்பற்ற முறையில் சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல உதவும் புதிய அணுகல் முறையை அரசு பரிசீலித்து வருகிறது.
வரவிருக்கும் இத்திட்டத்தின் கீழ், சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட சிறப்பு டிஜிட்டல் அனுமதி சீட்டைப் பெறலாம். இது அவர்களின் வசிப்பிட முகவரியை சரிபார்க்கவும், தகுதியை தீர்மானிக்கவும் உதவும். அனுமதி கிடைத்ததும், அவர்கள் வரவிருக்கும் தடை இல்லாத சுங்கக் கட்டண அமைப்புகள் மூலம் மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்தாமலே பயணிக்க முடியும்.
தற்போது, சுங்கச்சாவடிகளுக்கு அருகிலுள்ள உள்ளூர் மக்கள் ரூ.350 விலையிலான மாதாந்திர அனுமதி சீட்டை பெறலாம். இருப்பினும், முன்மொழியப்பட்ட இந்த உள்ளூர் டிஜிட்டல் அனுமதி சீட்டு இன்னும் குறைந்த விலையில் கிடைப்பதோடு, வரம்பற்ற பயண வசதியையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் சிக்கனமானதாகவும் இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளில், தனியார் வாகன உரிமையாளர்களுக்கு பாஸ்டேக் (FASTag) முறை மிகவும் பயனர்-நட்பு தன்மையுடன் மாறியுள்ளது. அரசின் வருடாந்திர பாஸ்டேக் திட்டம் நுகர்வோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது; ஏனெனில், ஆண்டுக்கு ரூ.3,075 கட்டணத்தில், ஒரு முறை கடந்து செல்வதற்கான சராசரி சுங்கக் கட்டணம் சுமார் ரூ.15 ஆக குறைகிறது. இப்போது, வரவிருக்கும் இந்த உள்ளூர் அனுமதி சீட்டு முறை, சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு மேலும் வசதியை அளிக்கும்.
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பாஸ்டேக் டிப்ஸ்: ஆக்டிவ் ஆக உள்ள ஃபாஸ்டேக் இருந்தும் சுங்கச்சாவடிகளில் அடிக்கடி தாமதங்களை சந்தித்தால், அதற்கு காரணம் சுங்கச்சாவடி அமைப்பாக இல்லாமல், உங்கள் ஃபாஸ்டேக் ஆகவே இருக்கலாம் என்று என்எச்ஏஐ கூறுகிறது. அதாவது சேதமடைந்த ஃபாஸ்டேக் அல்லது தேய்மானம் அடைந்த ஃபாஸ்டேக்-கள் ஸ்கேன் செய்வதில் சிக்கல் மற்றும் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் உருவாவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.
என்எச்ஏஐ-இன் கூற்றுப்படி, சூரிய ஒளியில் தொடர்ந்து இருப்பதால் காலப்போக்கில் ஃபாஸ்டேக் சேதமடையக்கூடும். இது சுங்கச்சாவடிகளில் உள்ள ஸ்கேனர்களுடன் அந்த டேக் (tag) தொடர்பு கொள்ளும் திறனைபாதிக்கலாம். உங்களிடம் இருக்கும் ஃபாஸ்டேக் ஆனது சரியாக செயல்படாமல் போவதற்கு மூன்று முக்கிய காரணங்களை என்எச்ஏஐ சுட்டிக்காட்டுகிறது:
1. அடிக்கடி விண்ட்ஷீல்டை சுத்தம் செய்தல்: அதிகப்படியாக தேய்ப்பது அல்லது வீரியம் மிக்க சுத்தம் செய்யும் பொருட்களை பயன்படுத்துவது, டேக்கிற்குள் உள்ள ஆர்எப்ஐடி (RFID) சிப்பை சேதப்படுத்தலாம்.
2. வெப்பம், தூசி மற்றும் மழையின் தாக்கம்: கடுமையான வானிலை நிலைகளில் நீண்ட நேரம் இருப்பதால், ஒட்டும் தன்மை மற்றும் உட்புற பாகங்கள் பலவீனமடையலாம்.
3. பழைய அல்லது தேய்மானம் அடைந்த ஃபாஸ்டேக்-கள்: பல வருட பயன்பாட்டிற்குப் பிறகு, காலப்போக்கில் டேக்கின் செயல் திறன் குறையலாம்.
உங்கள் ஃபாஸ்டேக்-ஐ எப்போது மாற்ற வேண்டும்? பின்வரும் சூழல்களில் வாகன ஓட்டிகள் தங்கள் ஃபாஸ்டேக்-ஐ மாற்றுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்:
1. ஃபாஸ்டேக் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருந்தால்.
2. ஸ்கேன் செய்வதில் தோல்வி அல்லது சுங்கச்சாவடி தாமதங்களை அடிக்கடி சந்தித்தால்.
இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் போதுமான பேலன்ஸ் இருந்தாலும், பழுதடைந்த ஃபாஸ்டேக் தடையற்ற பயணத்தை பாதிக்கலாம் மற்றும் சுங்கச்சாவடிகளில் தேவையற்ற நிறுத்தங்களை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications