Google Pay, Paytm போன்ற UPI ஆப்களை பயன்படுத்த சர்வீஸ் சார்ஜ்? மத்திய அரசு விளக்கம்!
கடந்த வாரம் இந்திய அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு என்கிற பெயரில், மக்கள் மத்தியில் ஒரு புதிய பீதி நிலவியது!
அது என்னவென்றால், இனிமேல் ஒவ்வொரு UPI பேமெண்ட்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய அராசாங்கம் அறிவித்துள்ளதாக வெளியான செய்திகளே ஆகும்!

இது உண்மையா?
இனிமேல் Google Pay, Paytm, PhonePe போன்ற UPI ஆப்களை இலவசமாக பயன்படுத்த முடியாது; ஒவ்வொரு ஆன்லைன் பேமெண்ட்களுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
UPI கட்டணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த, நிதி அமைச்சகம் (Ministry of Finance) ட்விட்டர் தளத்தை பயன்படுத்திக்கொண்டது மற்றும் தொடர்ச்சியான ட்வீட்களின் வழியாக போதுமான விளக்கங்களை அளித்துள்ளது!

இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படுமா?
இல்லவே இல்லை! எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது!
UPI (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) என்பது "பொதுமக்களுக்கான ஒரு டிஜிட்டல் நன்மை" ஆகும், UPI சேவைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பான எந்த எண்ணமும் மத்திய அரசிடம் இல்லை என்று நிதி அமைச்சகம், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (ஆகஸ்ட் 21) ட்வீட் செய்தது.

அப்போது இந்த "திடீர் பீதி" கிளம்ப என்ன காரணம்?
"UPI என்பது பொதுமக்களுக்கான ஒரு மகத்தான வசதி ஆகும் மற்றும் பொருளாதாரத்திற்கான உற்பத்தி ஆதாயங்களை கொண்ட ஒரு டிஜிட்டல் பொதுப் பொருளாகும். எனவே UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் பரிசீலனை அரசாங்கத்திடம் இல்லை" என்று நிதி அமைச்சகம் ஒரு ட்வீட் வழியாக விளக்கம் அளித்துள்ளது!
அரசாங்கம் இவ்வளவு தெளிவாக பேசும் நிலைப்பாட்டில், எப்படி திடீர் என்று யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் என்கிற செய்தி / தகவல் தீயாக பரவியது?

எல்லாத்துக்கும் நம்ம RBI தான் காரணம்!
இந்தியாவில் UPI பரிவர்த்தனைகள் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளன. PTI வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அளவின் அடிப்படையில் - 14.55 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் நடந்துள்ளன மற்றும் மதிப்பின் அடிப்படையில், UPI பரிவர்த்தனைகள் ஆனது 26.19 டிரில்லியனாக இருந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தொகுதி அடிப்படையில் இது 99% வளர்ச்சி ஆகும் மற்றும் மதிப்பின் அடிப்படையில் 90% அதிகரிப்பு ஆகும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆர்பிஐ வழியாக ஒரு Discussion paper (விவாதக் கட்டுரை) வெளியானது!

அதன் வழியாகவே UPI கட்டணம் என்கிற "பூதம்" கிளம்பியது!
பல்வேறு வகையான டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் யோசனை குறித்து பங்குதாரர்களிடம் கருத்துக் கேட்டு, RBI ஒரு விவாதக் கட்டுரையை வெளியிட்டது, அதுவே யுபிஐ கட்டணங்கள் குறித்த செய்திகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது!

திட்டவட்டமாக பேசிய RBI.. இருந்தாலும்!
அந்த விவாதக் கட்டுரையில் "யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் குறித்து RBI எந்த அறிவுறுத்தல்களையும் வெளியிடவில்லை. ஏனெனில் ஜனவரி 1, 2020 முதல் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை என்பதை அரசாங்கமே கட்டாயமாக்கியுள்ளது.
இதன் பொருள் பயனர்களுக்கும் வணிகர்களுக்கும் UPI சேவையை பயன்படுத்த எந்த கட்டணமும் இருக்காது. பொதுவான கருத்துக்களை பெறுவதே இந்த விவாதக் கட்டுரையின் நோக்கம்" என்று RBI திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது!
இருந்தாலும் கூட, எப்படியோ யுபிஐ சேவைக்கு கட்டணம் என்கிற செய்தி காட்டுத்தீ போல பரவி விட்டது!

தொடர்ந்து ஊக்குவிப்படும் UPI!
நிதியமைச்சகம் தனது தொடர்ச்சியான ட்வீட்களின் வழியாக, இந்திய அரசு எப்படி எல்லாம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை தொடர்ந்து ஊக்குவிக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தியது.
எது எப்படியோ? Google Pay, Paytm, PhonePe போன்ற UPI ஆப்களை பயன்படுத்த எந்த கட்டணமும் இல்லை; அரசாங்கத்திற்கும் அது தொடர்பான எந்த யோசனையும் இல்லை! - இந்த ஒரு 'மேட்டர்' போதும். மக்கள் நிம்மதி அடைய!


Click it and Unblock the Notifications