இனி சிரமம் இருக்காது.. PF கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம்.. அடுத்த ஆண்டு உறுதி..
சமீபத்தில் வெளியான தகவலின்படி, வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் (PF) கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி, அடுத்த ஆண்டு அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
தொழிலாளர் நலத்துறை செயலர் சுமிதா சமீபத்தில் தெரிவித்தது என்னவென்றால், பி.எஃப் கணக்கில் இருந்து முன்பணம் கோருவோருக்கு, அதை விரைவாக வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறினார். மேலும் ஏடிஎம் (ATM) வழியாக பிஃஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் நடைமுறைக்கான பணிகள் தற்போது நடந்து வருவதாகவும், வரும் ஜனவரி மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெற்று, இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் தற்போதைய நிலவரப்படி சுமார் 7 கோடி பி.எஃப் கணக்குகள் இருப்பதாகத் தொழிலாளர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தின் மூலம் ஊழியர்கள் பெறும் சம்பள தொகையில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு பகுதி முதலீடு செய்யப்படுகிறது. பின்பு தொழிலாளர் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து ஒரு தொகையும் இந்த கணக்கில் டெபாசிட் செய்யப்படும். குறிப்பாக இந்த தொகை ஒவ்வொரு ஊழியர்களும் ஓய்வு பெறும் போது எடுத்துக்கொள்ள முடியும்.
ஓய்வுக்கு முன்பே தொழிலாளர்கள் இந்த பணத்தை மருத்து செலவுகள், கல்வி, வீட்டுக் கடன்கள், திருமணம், வீடு கட்டுதல் போன்ற அவசரமான தேவைகளுக்கு முன்பாகவே எடுத்த கொள்ளலாம். ஆனாலும் சில நிபந்தனைகளுடன் இந்த பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. குறிப்பாக மருத்துவ அவசரம் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும் போது பிஃஎப் உறுப்பினர்கள் சில நிபந்தனைகளுடன் ரூ.1 லட்சம் வரை தொகையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இபிஎப்ஒ 3.0 (EPFO 3.0) எனும் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் கூடுதல் வசதிகளைக் கொண்டுவர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி தொழிலாளர்கள் செலுத்த வேண்டி தொகைக்கான உச்ச வரம்பு நீக்கப்படவுள்ளது. எனவே தொழிலாளர் விரும்பினால் பி.எப் கணக்கில் கூடுதலாகப் பணத்தைச் சேமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது பி.எப் கணக்கில் மாத ஊதியத்தில் தொழிலாளர் மற்றும் நிர்வாகம் சார்பில் சரிசமமாக 12 சதவீதம் பணம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக பி.எப் கணக்கில் தொழிலாளர் 12 சதவீதத்துக்குக் கூடுதலான தொகையைச் சேமித்தாலும், நிர்வாகம் சார்பாக செலுத்தப்படும் 12 சதவீத தொகையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.
இபிஎப்ஒ 3.0 (EPFO 3.0) திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதாவது இந்த திட்டம் மூலம் தொழிலாளர்கள் தங்களது விருப்பப்படி தங்களுடைய கணக்கில் கட்டுப்பாடுகள் இன்றி பணத்தை டெபாசிட் செய்து சேமிக்க முடியும். அதேபோல் ஒரு அவசர தேவைக்கும் பணத்தை எடுக்கவும் இந்த புதிய திட்டம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications